தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ அபராதமே இவ்வளவா சொக்கா...!

அபராதமே இவ்வளவா சொக்கா...!

அபராதமே இவ்வளவா சொக்கா...!


PUBLISHED ON : ஆக 31, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வனிதா ராம், மதுரையில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., - எம்.பி., ஒருவர், ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி, வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து, அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அவருக்கு, 908 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.இந்த செய்தியைப் படித்ததும், சாமானியமக்களின் மனநிலை என்னவாகஇருக்கும்?

அபராதமே இவ்வளவு எனில், சொத்து எவ்வளவாக இருக்கும் என, வாய் பிளக்க வைக்கிறது.

சாதாரணமாக 1 லட்சம் ரூபாய் மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர் ஒருவருக்கு, வருமான வரியே ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் ஆகிறது. அப்படிப் பார்க்கையில், இந்த எம்.பி., வருமான வரியாக எவ்வளவு ரூபாய் ஆண்டுதோறும் கட்டுகிறார்?

சாமானிய மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வருமான வரியாக பெருந்தொகையை கட்டுகின்றனர். ஆனால் இவரைப் போன்றோர் வரி ஏய்ப்பில்ஈடுபடாமல், ஒழுங்காக வருமான வரி கட்டினாலே நாடு முன்னேறும்.

மக்கள் பிரதிநிதிகளே இத்தகைய செயலில் ஈடுபட்டால், மக்களின் நிலை என்னவாகும்? இத்தகைய மோசடி குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர, சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

அதே நேரம், இந்த அபராத தொகை விவகாரத்தில், எம்.பி., தரப்பில் மேல்முறையீடு செய்து, 'அபராத தொகையை குறைத்தோம்' என்ற கதை சொல்லாமல், உடனே அந்த முழு தொகையையும் வசூலித்து, அரசு கஜானாவில் சேர்க்க, அமலாக்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



நிதி இழப்பை முதலில் கட்டுப்படுத்துங்க!


வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:'கல்வி பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறது. மத்திய அரசு இரண்டு தவணைகளையும் சேர்த்து மொத்தம், 822 கோடி ரூபாய் மாநிலஅரசுக்கு கொடுக்க வேண்டியுள்ளது' என, கல்வித் துறை அமைச்சர்மகேஷ் குற்றம் சாட்டிஉள்ளார்.

'எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின்கீழ் பணிபுரிந்து வரும், கிட்டத்தட்ட 15,000 ஆசிரியர்களுக்கு ஊதியத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்' என்றும் கவலை தெரிவித்துள்ளார்.இது ஆசிரியர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு ஏற்க மறுப்பதால் தான் இந்த நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்து உள்ளது என்கின்றனர்.

நிதியை விடுவிக்காமல் மோதல் போக்கு என்பதுஒருபுறம் இருந்தாலும், மாநில கல்வித்துறை அதிலுள்ள ஓட்டைகளை சரி செய்வதன் வாயிலாக,ஆண்டுக்கு பல நுாறு கோடி ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்.

உதாரணமாக, காலை உணவு, மதிய உணவு, இலவச சீருடை, இலவச பொருட்கள் போன்றவற்றை விரும்பும் மாணவர்களை மட்டும் கணக்கிட்டு, அவர்களுக்குமட்டும் அவற்றை வழங்கினால் போதுமானது; இதன் வாயிலாக நிதியை சேமிக்கலாம்.

அரசு துவக்க பள்ளிகளில், 10 மாணவர்களுக்கு கீழ் சேர்க்கை உள்ள பள்ளிகளை, அருகில்உள்ள அரசு பள்ளிகளில் இணைப்பதன் வாயிலாக பணத்தை மிச்சப்படுத்தலாம்.

உண்டு உறைவிட பள்ளிகளில், பெரும் பான்மை மாணவர்கள் இரவு நேரங்களில் தங்குவதில்லை. பல விடுதிகள் ஏனோதானோ என்று பெயரளவில் நடந்து வருகின்றன. வார விடுமுறை நாட்களில் மாணவர்கள் இருப்பதில்லை.

இதை ஆய்வு செய்து, விடுதியில் தங்கி உள்ள மாணவர்களை மட்டும் கணக்கிட்டு, உணவு பொருட்கள் வழங்கினால்,ஆண்டுக்கு சில கோடிகள் மிச்சமாகும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில், பல ஆயிரம்ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. ஆசிரியர் - மாணவர் விகிதத்தை கணக்கிட்டு, தேவைப்படும் அரசு பள்ளிகளுக்கு இவர்களை மாறுதல் செய்யலாம்.

கல்வி துறை மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளிலும் இதுபோன்ற ஓட்டைகளின் வாயிலாக, அரசு நிதி பெருமளவு வீணாகிறது. இவற்றை அடைக்கும் போது, புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். காலியிடங்களை நிரப்பலாம். அரசு பணியாளருக்கு கூடுதல் சலுகைகளை வழங்கலாம். அரசு தரப்பு யோசிக்குமா?



யாகாவா ராயினும் நா காக்க...!


எம்.கல்யாணசுந்தரம்,கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவள்ளுவர், 'யாகாவாராயினும்நா காக்க' என்றார். ஆனால், தமிழக அரசியல் களத்தில், தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் வார்த்தைகளால் சேற்றை வீசிக் கொள்வதைப் பார்த்தால்,அரசியல் சாக்கடை தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாவடக்கம்,பேச்சு நாகரிகம் தலைவர்களுக்கு தேவையான ஒன்று.

எதிர்க்கட்சி தலைவர்பழனிசாமி, அண்ணாமலை குறித்து பேசும்போது, 'அண்ணாமலைக்கு பிடித்திருப்பது, 'மைக்' வியாதி. விமானத்தில்ஏறும்போது ஒன்றும்,இறங்கும் போது ஒன்றுமாக பேசுகிறார். உழைக்காமல் கட்சித் தலைவர் பதவி பெற்றவர் அவர்' என்று விமர்சனம் செய்தார்.

இதற்கு பதிலடி தந்த அண்ணாமலையோ, 'கிணற்றுத்தவளை பழனிசாமி' என்றுநிறுத்தாமல், 'தவழ்ந்து வந்து பதவியை பிடித்தவர், 'டெண்டர்'முறையில் முதல்வர்பதவிக்கு வந்தவர்' என்று காட்டமாக விமர்சித்தார்.

மேலும், நான்கு ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்தவரை,'தற்குறி' என்று எடுத்தெறிந்து பேசுவது, அண்ணாமலை படித்த படிப்புக்கும், இருக்கிற பதவிக்கும் அழகல்ல.

மறைந்த முதல்வர்கருணாநிதி, கோபம் வந்தால் கூட, அதையும் சாதுர்யமான வார்த்தைகளால் வெளிப்படுத்துவார்; யாரையும்எடுத்தேன், கவிழ்த்தேன்என்று பேசியதே இல்லை. அதையெல்லாம் இன்றைய தலைவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

அண்ணாமலை அரசியல் படிக்க மூன்று மாதம் இங்கிலாந்து செல்லமேலிடத்தில் அனுமதி கேட்டதாகவும், அவர் திரும்பி வரும் வரை தலைவர் பதவி வேறொருவருக்கு வழங்கப்பட்டால், மீண்டும் அந்த இடத்தை பிடிப்பதுசிரமம் என்பதால்,அங்கிருந்தபடியே தலைவர் பணியை பார்ப்பதாக தலைமையிடம் அனுமதி வாங்கி விட்டார் என்றும், அ.தி.மு.க., தரப்பில் கூறப்படுகிறது.

இதனால், கடல் கடந்து சென்றாலும், அண்ணாமலை - அ.தி.மு.க., யுத்தம் தொடரும் என்றே தெரிகிறது.

எது எப்படியோ... ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு, மற்ற கட்சி தலைவர்களை அனுசரித்து போவதும், அரவணைத்து போவதும்முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.முக்கியமாக, நாவடக்கம் வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us