PUBLISHED ON : ஜூன் 08, 2024 12:00 AM

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாம் தமிழர் என்ற கட்சி தமிழகத்தில் இயங்கி வருகிறது. தமிழன், தமிழினம், தமிழ், பிரபாகரனுக்கு ஆதரவு போன்ற பிற்போக்கான, தற்காலத்திற்கு ஒவ்வாத, இன, மொழி வெறி, பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறது. முதலில் கரும்பு கட்டை சுமந்து செல்லும் விவசாயியின் சின்னம் இருந்தது. போதிய ஓட்டு சதவீதம் வாங்க முடியாததால், இந்த சின்னத்தை இழந்து, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட்டது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலிலும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் இந்தக் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த கட்சியை நம்பி தேர்தலில் நின்று, பணத்தை செலவழித்த வேட்பாளர்களின் மனநிலை எப்படி இருக்கும். இனி வரும் தேர்தல்களில் இந்த கட்சியை நம்பி களத்தில் இறங்க வேட்பாளர்கள் முன்வருவரா என்பதையும் நம்மால் யூகித்துக் கொள்ள முடியும்.
சமீபத்தில் இந்த கட்சியின் தலைவர், 'நாங்கள் பா.ஜ.,வை விட குறைவான ஓட்டுகள் பெற்றால், கட்சியைக் கலைத்து விடுவேன்' என கூறியிருந்தார்; அதற்கான நேரம் வந்து விட்டது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில், 10 தொகுதிகளில் பா.ஜ., இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், நாம் தமிழர் என்ற கட்சியோ ஒரு தொகுதியில் கூட இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடியவில்லை. மாறாக ஏழு தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும், 33 தொகுதிகளில் நான்காவது இடத்தை பெற்றுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஆகவே, நா.த.க., தலைவர், சாக்கு போக்கு சொல்லாமல், தான் கூறியதை எவ்வளவு விரைவில் நிறைவேற்றுவார் என, மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்காது!
கே.என்.ஸ்ரீதரன்,
பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தல்
முடிவுகள் எந்த கட்சிக்கும் முழு திருப்தியை அளிக்கவில்லை என்பதே உண்மை.
தனிப்பெரும்பான்மையை இழந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை
பிடித்திருக்கும் பா.ஜ., அக்கட்சிகளின் தயவால் தான் முடிவுகளை எடுக்க
வேண்டியிருக்கும்.
கடந்த தேர்தல்களை விட நிறைய தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், ஆட்சிக்கு வரமுடியாத நிலையில் உள்ளது இண்டியா கூட்டணி.
பா.ஜ.,வை
கழற்றி விட்டால், முஸ்லிம்கள் ஓட்டுகள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பி,
தி.மு.க., விரித்த வலையில் விழுந்து ஏமாந்தது தான் அ.தி.மு.க.,வுக்கு
மிச்சம்.
'நீட்' தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியா
விட்டாலும், தேர்தலில் வெற்றி பெரும் ரகசியம் தி.மு.க.,வுக்கு
தெரிந்திருக்கிறது. பெரும் அளவில் ஊழல் செய்து ஆட்சியை இழந்து, இப்போது ஒரு
தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி.
மேலும்,
மிகப் பெரிய ஊழலில் சிக்கி, முக்கிய தலைவர்கள் சிறையில் இருக்கும் ஆம்
ஆத்மி கட்சி, டில்லியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால்,
தமிழக வாக்காளர்களுக்கு ஊழல் ஒரு பொருட்டே இல்லை. எல்லா பிரச்னைக்கும்
மக்கள் தெருவில் வந்து போராடுவர். ஆனால், தேர்தலில் அந்த கட்சிக்கு தான்
ஓட்டு போடுவர். 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூடவா தகுதியுள்ள வேறு
வேட்பாளர் இல்லை. நேர்மையான அரசியலை முன்னெடுக்க உழைத்து வரும் அண்ணாமலை
வெற்றி பெறமுடியவில்லை. என்ன சொல்வது... எளிய மனிதராக, ஏழை பங்காளனாக
வாழ்ந்த, ஏழை மாணவர்களின் கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜர் கூட தமிழ்
மண்ணில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில் அரசியல் செய்ய
படிப்போ, திறமையோ அவசியமில்லை. எவ்வளவு தவறுகள் செய்தாலும், இலவசங்கள்
மற்றும் தேர்தல் கால 'கவனிப்புகள்' வாயிலாக மக்களின் ஓட்டுகளை பெற்று
விடலாம் என்று கட்சிகள் நினைக்கின்றன. இவை, தமிழ் மக்களுக்கு பெருமை
சேர்க்காது.
இறைச்சி சாலைகளில் தெரு நாய்கள் உலவுவது சகஜம்!
சுப்ர.அனந்தராமன்,
சென்னை-யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில் மீண்டும்
ஒரு கொடூர சம்பவமாக, 'ராட் வைலர்' என்ற வெளிநாட்டு வளர்ப்பு நாய், ஒரு
சிறுவனைக் கடித்துக் குதறிய சம்பவம் பற்றி நம் நாளிதழின் சென்னை இணைப்பில்
படித்தேன்.
'ராட் வைலர், பாக்ஸர், ஜெர்மன் ஷெப்பர்டு வகை
வெளிநாட்டு வகை நாய்களே சிறுவர்' சிறுமி யரைக் கடித்துக் குதறுவது தொடர்ந்த
சம்பவமாக இருக்கிறது.
இதைத் தடுக்க ஒரே வழி, இந்த வகை வெளி
தேசத்து நாய்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து, வண்டலுார் மிருகக் காட்சி
சாலையில் தனிமைச் சிறையில் அடைத்து விட வேண்டும்.
குப்பைமேடுகளிலுள்ள
மாமிசக் கழிவுகளை தின்பதை வழக்கமாகக்கொண்ட தெரு நாய்களே,சைக்கிளில் அல்லது
டூ-வீலர்களில் பயணிப் பவர்களைத் துரத்திக் கடிக்கின்றன.
நாட்டிலேயே,
மாமிச உணவு உண்பவர்கள் அதிகம் பேர் உள்ள மாநிலங்கள், முதலில் கேரளா
அடுத்தது தமிழகம். இந்த இரு மாநிலங்களில் தான், தெரு நாய்கள் மனிதர்களைத்
துரத்திக் கடிப்பதும் அதிகமாக இருக்கிறது.
தெருவெங்கும் மாமிசக் கழிவுகள் கொட்டிக் கிடக்கும் நகரம், கோழிக்கோடு; வெறிநாய்க் கடி சம்பவங்களும் அங்கே தான் அதிகம்.
சென்னை
வேப்பேரி ஹைரோடில், தெரு நாய்கள், சைக்கிள், டூ-வீலர்களில் செல்வோரைத்
துரத்திக் கடிப்பது சகஜம்.அங்கே வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினர்
சாலையில் வீசும் மாமிசக் கழிவுக் குப்பைகளும், அதே சாலையிலுள்ள வெடரினரி
மருத்துவமனை கழிவுகளுமே, தெருநாய்களுக்கான தீவனம். இது மறுக்க முடியாத
உண்மை.
நாய்களுக்கு உப்பு சேர்க்காத தயிர் சாதமும், பிஸ்கட்களும்
மட்டும் போதும். அவை யாரையும் கடிக்காமல் சமர்த்தாக வாலை ஆட்டியபடி நன்றி
பாராட்டுவதைக் காணலாம். வளர்ப்பு நாய்களுக்கு மாட்டிறைச்சி கொடுத்து தான்
வளர்த்தாக வேண்டும் என்பது கட்டாயமே இல்லை.
பணக்கார ஜம்பத்துக்கு,
வெளிநாட்டு ரக முரட்டு நாய்களை வளர்த்தால், அவை தேடித் தேடிக் கடித்துக்
குதறுவது, சாலைகளில் நடந்து போகும் ஏழை எளிய மக்களின் சிறுவயது குழந்தைகளே.
சம்பந்தப்பட்டவர்கள் இதை சற்று சீரியஸ் விஷயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

