PUBLISHED ON : நவ 25, 2025 12:00 AM

எஸ்.ரகுவரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மன்னர்களாட்சியில் எதிரிகளை போரில் வெல்ல, சாம, தான, பேத, தண்டம் ஆகிய வழிமுறைகளை கையாளுவர்.
இதில், 'சாமம்' என்பது எதிரிகளை சமாதானப்படுத்துதல்; 'தானம்' என்பது கொடையளித்து எதிரிகளை தன் வசப்படுத்துவது.
'பேதம்' என்பது எதிரி நாட்டுக்குள் உள்நாட்டுக் குழப்பத்தை உருவாக்கி, அதில் குளிர்காய்ந்து வெற்றி பெறுவது.
'தண்டம்' என்பது படைப்பலத்தை பிரயோகித்து வெற்றி அடைவது.
ஜனநாயகத்தில் இரண்டு மாநிலங்களுக்கு இடையே போர் நடைபெறும் வழக்கமில்லை. ஆனால், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் பழக்கம் உண்டு.
இந்த மோதல் என்பது சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களின் போது அதிகம் எதிரொலிப்பது வழக்கம்.
தற்போது, 2026ல் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில், திராவிட மாடல் அரசு, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுடனும், அ.தி.மு.க., மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.,வுடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.
இந்நிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி சாத்தியமான சமாசாரங்களை மட்டும் வாக்குறுதிகளாக வழங்கி களத்தில் இறங்கி உள்ளது.
திராவிட மாடல் அரசோ, 'தானம்' என்ற கான்செப்டில், ஓட்டளிப்போருக்கு பலவிதமான அன்பளிப்புகளை கொடுத்து ஓட்டு சேகரித்து வருகிறது.
அத்துடன், நின்றுவிடவில்லை.
'பேதம்' என்ற கான்செப்டில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் விரிசலை உருவாக்க என்னென்ன உருட்டு, திருட்டு வேலைகளை கையாள முடியுமோ அத்தனையும் செய்யத் துவங்கியுள்ளது.
கடைசியாக தண்டம்... என்னென்ன பழிகளை சுமத்தினால், மத்திய அரசு மீது மக்களுக்கு கோபமும், வெறுப்பும், ஆத்திரமும் வருமோ, அவை அனைத்தையும் அட்சரம் பிசகாமல் செய்து வருகிறது.
பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் போது, தமிழகத்துக்கு கொடுக்கப்பட்ட நிதியை விட, மூன்று மடங்கு நிதியை, தற்போது ஆட்சியில் உள்ள மத்திய பா.ஜ., அரசு கொடுத்துள்ளது.
அவை அனைத்தையும் வாங்கி கஜானாவில் வைத்து பூட்டிக்கொண்டு, 'மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை; மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது' என்று நா கூசாமல், பொய் கூறுகிறது, தி.மு.க., அரசு.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியமில்லை என்றும், சாத்தியமில்லாததற்கு என்ன காரணம் என்றும் விரிவாக விளக்கி, இம்மாதம் 14ம் தேதியே மாநில அரசுக்கு தகவல் அனுப்பி வைத்து விட்டது, மத்திய அரசு.
ஆனாலும், அத்தகவலை ரகசியமாக வைத்திருந்து, கோவை வேளாண் மாநாட்டுக்கு பிரதமர் வந்த நேரம் பார்த்து, 'கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் சாத்தியமில்லை என்று மத்திய பா.ஜ., அரசு கைவிரித்து விட்டது' என்று கொளுத்தி போட்டுள்ளது, தி.மு.க.,
இவர்கள் என்ன சொன்னாலும், அதை அப்படியே நம்பும் ஒரு கூட்டத்தையும் கழகம் உருவாக்கி வைத்துள்ளது.
மூளைச்சலவை செய்து வைக்கப் பட்டுள்ள இவர்களின் மூளையில், தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறும் விளக்கங்கள் எதுவும் எடுபடுவதில்லை. காரணம், சரக்கின் வீரியம் அப்படி!
சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் என்னென்ன பொய்களையும், புளுகு மூட்டைகளையும் அவிழ்த்து விடப் போகின்றனரோ!
பொய்யும், புரட்டும், டுபாக்கூர் வாக்குறுதிகளும் ஓர் அரசியல்கட்சியை ஆட்சியில் அமர்த்தி விடாது என்பதை, பீஹார் தேர்தலில் பார்த்தோம்.
ஆனால், பீஹாரிகள் போல் தமிழக வாக்காளர்கள் அவ்வளவு விபரமானவர்களா என்ன!
lll
அகிலேஷின் பயம்!
வே.கந்தசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: மாணவர்கள் கற்கும் வகுப்புகேற்ற பாடங்களை கொடுத்து, அதை
பயிற்றுவித்து அதிலிருந்து, வினாக்களை கேட்டு தேர்வு நடத்தி, தேர்ச்சி
பெற்றபின், மேல் வகுப்புகளுக்கு அனுப்புவது தான் கல்வித் துறையின் நடைமுறை.
அதை எதிர்த்து, 'தேர்வில் எனக்கு பிடித்த மாதிரி தான் கேள்வித்தாள் இருக்க வேண்டும்; அத்தகைய கேள்விகளுக்குத் தான் விடை அளிப்பேன்.
'புத்தகத்திலிருந்து கேள்வி கேட்டால், விடை அளிக்க மாட்டேன்' என்று எந்த
மாணவனாவது சொல்ல முடியுமா? அப்படி சொன்னால், அதை தேர்வு நடத்தும் குழுதான்
ஏற்றுக் கொள்ளுமா?
அப்படித்தான் இருக்கிறது சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் வாதம்!
'வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர சீர்திருத்தம் என்ற ஆயுதத்தை வைத்து, பீஹாரில், பா.ஜ., கேம் ஆடியுள்ளது.
'மேற்கு வங்கம், தமிழகம், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில், இந்த விளையாட்டை
அனுமதிக்க மாட்டோம். பீஹார் தேர்தலில், பா.ஜ.,வின் சதி அம்பலமாகி
விட்டது. இதை நாங்கள் முறியடிப்போம்' என அறைகூவல் விடுத்துள்ளார், அகிலேஷ்.
தேர்தல் எப்படி நடத்தப்படும் என்பதை அரசியல் கட்சிகளுக்கு
தெள்ளத்தெளிவாக புரிய வைத்த பின்னரே தேர்தலை நடத்துகிறது, தேர்தல் ஆணையம்.
எல்லாவற்றையும் கேட்டு விட்டு, தேர்தலில் வெற்றி பெற்றால் சாதனை என்பதும், தோற்றால் சதி என்று கூறுவதும் என்ன வகை லாஜிக்?
இப்படித்தான் காங்., கட்சி லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பீஹார்
சட்டசபை தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன், டில்லியில் பத்திரிகையாளர்
சந்திப்பை நடத்தி, 'ஹரியானா சட்டசபை தேர்தலில், ஓட்டு திருட்டு வாயிலாகத்
தான் பா.ஜ., வெற்றி பெற்றது' என்று கூறி, உப்புச்சப்பற்ற சில விஷயங்களை
முன்னிறுத்தி ஆதாரங்கள் என்றார்.
பீஹார் தேர்தலுக்கு முன்,
அக்குற்றச்சாட்டை அவர் முன்வைக்க காரணமே, பீஹாரில் தங்கள் கூட்டணி
தோற்றால், பா.ஜ., ஓட்டு திருட்டு செய்துதான் வெற்றி பெற்றது என்று கூறி,
தோல்வியை ஏற்காமல் தப்பித்துக் கொள்ளத் தான்!
இதோ... பீஹாரில்
வழக்கத்தை விட, தேசிய ஜனநாய கூட்டணி அமோக வெற்றி பெற்று விட்டது. கழுதை
தேய்ந்து கட்டெறும்பான கதையாக பீஹாரில் காங்., காணாமல் போய் விட்டது.
இப்போது, ராகுல் கூறிய அதே குற்றச்சாட்டை எடுத்துக் கொண்டு அகிலேஷ் வந்துள்ளார்.
இறந்து போனவர்கள் மற்றும் விலாசம் மாறி சென்றவர்களின் பெயர்களை வாக்காளர்
பட்டியலில் இருந்து நீக்க விடக்கூடாது என்பது போல் இண்டியா கூட்டணியினரை
உசுப்பேற்றுவதில் இருந்து, இவர்களின் தேர்தல் வெற்றி எவர்களை
சார்ந்துள்ளது என்பது புரிந்து விட்டதே!
lll

