தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ சிறு துாண்டிலுக்கு சிக்குவரா?

 சிறு துாண்டிலுக்கு சிக்குவரா?

 சிறு துாண்டிலுக்கு சிக்குவரா?


PUBLISHED ON : நவ 30, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்றால், மக்களின் ஆசையை துாண்ட வேண்டும் என்ற தந்திரம் அறிந்தவர்கள், திராவிட கட்சியினர்.

வாக்குறுதி எனும் துாண்டில் வீசி மக்களை வலையில் வீழ்த்தும் கலையை இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய கட்சி எது என்று கேட்டால், தி.மு.க., தான்!

தமிழகத்திலிருந்து காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, 1967ல் சட்டசபை தேர்தலின் போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ரூபாய்க்கு மூன்று படி அரிசி' என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார், அக்கட்சி தலைவர் அண்ணாதுரை.

ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்ததும், 'மூன்றுபடி லட்சியம்; ஒரு படி நிச்சயம்' என்று வார்த்தைகளை மாற்றிப்போட்டு மக்களை ஏமாற்றியது, தி.மு.க.,

அன்று முதல் இன்று வரை நிறைவேறாத வாக்குறுதிகளை தந்து மக்களின் ஆசையை துாண்டி அதிகாரத்திற்கு வந்துள்ளது.

அக்கட்சியிலிருந்து பிரிந்த அ.தி.மு.க.,வும் அதன்பாணியை பின்பற்றி வரும் நிலையில், தற்போது, அந்த வரிசையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்துள்ளது.

தி.மு.க.,வின் கொள்கைகளை அடித்தொட்டு நடக்கும் த.வெ.க., வாக்குறுதி அளிப்பதிலும், அக்கட்சியின் பாணியில், 'த.வெ.க., ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் நிரந்தரமான வீடு, இரு சக்கர வாகனம், பட்டப்படிப்பு, வேலை வாய்ப்பை கிடைக்கச் செய்வது தன் லட்சியம்' என்று மக்களுக்கு வலை வீசியுள்ளார், அக்கட்சி தலைவரான நடிகர் விஜய்.

ஏற்கனவே, தமிழக அரசியலில் தி.மு.க., - அ.தி.மு.க., என பெரும் துாண்டில்காரர்கள் பலமான வலையை வீசக் காத்திருக்கும் நிலையில், சிறு துாண்டில்காரரான விஜய் வீசும் ஆசை வலையில், தமிழக மக்கள் அகப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

lll

எம்.ஜி.ஆரை விமர்சிப்பது தான் நோக்கமா? டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் தி.மு.க.,வின், 75வது பவள விழாவைக் குறிக்கும் வகையில், 'அறிவுத் திருவிழா' எனும் புத்தகக் கண்காட்சி சென்னையில் நடந்தது. இதில், துணை முதல்வர் உதயநிதி தயாரித்த, 'காலத்தின் நிறம், கருப்பு - சிவப்பு' என்ற புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

சுவர் இல்லாமல் சித்திரம் எப்படி வரைய முடியாதோ, அதுபோல, எம்.ஜி.ஆர்., இல்லாமல் தி.மு.க.,வின் வரலாற்றை எழுத முடியாது. அதனால்தான், இப்புத்தகத்தில் எம்.ஜி.ஆர்., குறித்து கேலியும், கிண்டலும் செய்துள்ளனர்.

கடந்த 1985ல் பெய்த பெரும் மழையால், எம்.ஜி.ஆரின் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது. படகில் அழைத்து வரப்பட்டு நட்சத்திர ேஹாட்டலில் தங்க வைக்கப்பட்டார், எம்.ஜி.ஆர்.,

அதை திரித்து, 'மக்கள் குறித்து கவலைப்படாமல் நட்சத்திர ேஹாட்டலில் எம்.ஜி.ஆர்., தங்கி விட்டார்' என்று புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

முதல்வரின் வீடு வெள்ளத்தில் மூழ்குகிறது என்றால், அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படட்டும் என்று அரசு வேடிக்கையா பார்க்கும்!

கொட்டும் மழையில் வேட்டியை மடித்துக்கட்டி, அதிகாரிகளுடன் சென்று வெள்ளத்தில் பாதித்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி உணவு, உடைமைகளை வழங்க ஏற்பாடு செய்தவர் எம்.ஜி.ஆர்.,

அதை மறைத்து, அவர் நட்சத்திர விடுதியில் சொகுசாக தங்கியிருந்தது போல் எழுதும் பித்தலாட்டம் ஏன்?

கடந்த 1984 தேர்தலில் தி.மு.க., தோற்க, முன்னாள் பிரதமர் இந்திராவின் மரணமும், எம்.ஜி.ஆரின் நோயும்தான் காரணமாம்!

'என்னை முதல்வர் ஆக்குங்கள்; 40 ஆண்டுகால நண்பர் எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன்' என்று, அந்த சாவும், நோவும் பெற்ற வெற்றியைத்தான் அன்று மக்களிடம் கருணாநிதி கையேந்தி கடனாக கேட்டாரோ!

அதேபோன்று, '1986ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்ற கருணாநிதிக்கு கைதி உடை கொடுத்ததால், நாடெங்கும் பதற்றநிலை நிலவியது. இதனால் பயந்து போன எம்.ஜி.ஆர்., கருணாநிதியை விடுதலை செய்து விட்டார்' என்றும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக மூன்று மாதம் சிறையில் இருந்த கருணாநிதிக்கு, 1987, பிப்., 1ல் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை விதித்தது.

சிறைச்சாலை விதிமுறையின்படி கருணாநிதிக்கு கைதி உடை வழங்கினார், சிறை அதிகாரி ஜி.ராமச்சந்திரன்.

அன்று மாலை, தன்னை காண வந்த கட்சியினரை பார்க்க, கைதி உடையுடன் சென்றார் கருணாநிதி. அவரை அவ்வுடையில் பார்த்த கட்சியினர், 'தலைவரே... உங்களுக்கா இந்த நிலைமை' எனக் கேட்டு கண்ணீர் விட்டனர்.

அவர்களை பார்த்து விட்டு திரும்பி வந்தவரிடம், 'உங்களுக்கு, 'ஏ' கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், பைண்டிங் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகும்போது மட்டும் கைதி உடை அணிந்தால் போதும்; மற்ற நேரங்களில் இவ்வுடையை அணிய வேண்டாம்' என்றார், சிறை அதிகாரி.

அதற்கு, 'இப்போது இந்த உடைய அணிந்ததற்கான காரணம், நாளை காலை உங்களுக்கு விளங்கும்' என்றார், கருணாநிதி.

மறுநாள் காலை அனைத்து பத்திரிகைகளிலும் பிரதான செய்தியே கருணாநிதிதான்!

கைதி உடையுடன் அலுமினிய தட்டு, குவளையைப் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்துடன், 'கைதி உடையில் கருணாநிதி' என பிரசுரிக்கப்பட்டிருந்தது.

அதிர்ந்து போன சிறை அதிகாரி, 'புகைப்படம் எடுக்க உங்களுக்கு அனுமதி இல்லையே...இதை எப்போது எடுத்தீர்கள்?' என்று கேட்டார்.

அதற்கு, 'அது இப்போது எடுக்கப்பட்டது அல்ல; முரசொலி அலுவலகத்தில் போட்டோ ஷாப்பில் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பழைய புகைப்படம்' என்று கூறிவிட்டு சென்று விட்டார், கருணாநிதி.

ஏற்கனவே, முதல்நாள் மாலையே கைதி உடை வழங்கப்பட்ட விஷயத்தை உளவுப் பிரிவினர் வாயிலாக தெரிந்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., மறுநாள் பத்திரிகையில் கருணாநிதியை அவ்வுடையில் பார்த்ததும் மனம் தாங்காமல், 'கருணாநிதிக்கு கைதி உடை ஏன் கொடுத்தீர்கள்?' என்று டி.ஜி.பி.,யிடம் கோபமாக கேட்டவர், முதல்வருக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, கருணாநிதி உட்பட அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

தண்டனையில் இருந்து தப்பிக்க, தான் கைதி உடை அணிந்திருப்பதை பத்திரிகையின் வாயிலாக எம்.ஜி.ஆருக்கு தெரிவித்ததே கருணாநிதிதான்.

இதில், எம்.ஜி.ஆர்., பயப்பட என்ன இருக்கிறது?

சட்ட ரீதியாக கைதி உடையை வழங்கியது டி.ஐ.ஜி., ராமச்சந்திரன்; நட்பு ரீதியாககருணாநிதியின் கைதிஉடையை அகற்றியது எம்.ஜி.ராமச்சந்திரன்.

எனவே, அறிவுத் திருவிழாவில் எம்-.ஜி.ஆரை விமர்சிப்பதுதான், 'காலத்தின் நிறம், கருப்பு - சிவப்பு' வின் நோக்கமா?

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us