PUBLISHED ON : ஜன 27, 2025 12:00 AM

க.சோணையா,
திருமங்கலம், மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழக காவல்துறையின் இன்றைய நிலை, பொது மக்களை காப்பதற்கு பதில்,
குற்றவாளிகளை பாதுகாப்பதற்கே என்றாகி விட்டது.
சென்னை அண்ணா
பல்கலை மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரனின் பிரியாணி கடைக்கு, சம்பவம்
நடந்த மறுநாளே, ஓசி பிரியாணி கேட்டு போலீசார் போன் செய்ததை அறிந்தபோது,
காவல்துறை மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய் விட்டது.
இதுபோன்று,
முந்தைய காலங்களிலும் பல சம்பவங்கள் நடந்து, நீதிமன்ற கண்டிப்புக்கும்
உள்ளாகியுள்ளன. 2018ல், நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பரமக்குடி தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, பணம் கேட்ட காசாளரை
சரமாரியாக தாக்கிய சம்பவம் என்றும் மறக்க முடியாதது.
சமீபத்தில்
விசாரணைக்கு வந்த குண்டர் தடுப்புச்சட்ட குற்றவாளி ஒருவரின் வழக்கில்,
காவல்துறையின் அலட்சியப் போக்கு, நீதிமன்றத்தையே அதிர வைத்தது.
காரணம்,
கொலை உட்பட, ஏற்கனவே 26 வழக்குகள் நிலுவையில் உள்ள ஒருவர், குண்டர்
தடுப்பு சட்டத்தில் கைதாகி, 'ஏ பிளஸ்' குற்றவாளி என வகைப்படுத்தப்பட்ட
பின்பும், அவர் மீதான முதற்கட்ட விசாரணை முடியவே, 10 ஆண்டுகள் ஆனது
என்றால், இறுதி விசாரணை முடிந்து, அவருக்கு எப்போது தண்டனை கொடுப்பது?
இதேபோன்று,
பல வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னரும், அதை காவல்துறை
முறையாக ஆய்வுசெய்து, அடுத்தகட்ட விசாரணைக்கு கொண்டு செல்லாமல், ஏராளமான
வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு
வரப்பட்டு உள்ளன.
எந்த ஒரு வழக்கிற்கும், உரிய காலத்திற்குள்
விசாரணை முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்தால் தான், சட்டம்
மற்றும் போலீஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
தற்போது,
சிக்கலான வழக்கு விசாரணைகளை முறையாக கண்காணிக்க, பிரத்யேக குழு ஒன்றை
அமைக்க பரிசீலிக்குமாறு, நீதிமன்றமே தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இனியாவது, காவல்துறை அதிகாரிகள், குற்றவழக்குகள் முறையாக கையாளப்படுகிறதா என கண்காணித்து, காலதாமதத்தை தடுக்க வேண்டும்.
அதைவிடுத்து,
ஞானசேகரன் போன்ற குற்றவாளிகளிடமே மாமூல் கேட்பதும், அவர்களுக்கு துணை
போவதுமான செயல்கள், வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடும்!
'அற்ப புத்திகிடையாது' என்றாரே உங்கள் தந்தை?
சுக.மதிமாறன், வேலம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வியாபார நிறுவனங்களின் விளம்பரங்களில், 'சலுகை விலை' என குறிப்பிட்டு, அதனருகில், சிறிய நட்சத்திரம் இடம்பெற்று, நிபந்தனைக்கு உட்பட்டது அல்லது 'டேர்ம்ஸ் அண்டு கண்டிஷன்ஸ் அப்ளை' என்று இருக்கும். சலுகை விலையை மட்டும் பார்த்து, பொருளை வாங்கி ஏமாறுவோம்.
அது ஒரு வியாபார தந்திரம் என்ற போதிலும், அதில் ஓரளவாவது நேர்மை உள்ளது. ஆனால், தற்போதைய திராவிட மாடல் அரசு அந்த தந்திரத்தையெல்லாம் மிஞ்சி விட்டது.
சட்டசபை தேர்தல் பரப்புரையில், தி.மு.க., பல வாக்குறுதிகளை அளித்தது.
அதில் முக்கியமானவை...
'நீட்' தேர்வை ரத்து செய்யும் ரகசியம்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு உரிய பஞ்சப்படி
மாதாந்திர அடிப்படையில் வீட்டின் மின் நுகர்வு கணக்கீடு
நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவர், நீட் தேர்வு குறித்து கேட்ட கேள்விக்கு, 'மத்தியில் எங்கள் ஆட்சி அமையவில்லை; அதனால் ரத்து செய்ய இயலவில்லை' என்று முதல்வர் பதில் அளித்தார்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்ற வாக்குறுதி அருகில், ஏதாவது நட்சத்திர குறியீடு இருக்கிறதா என்று பார்த்தால், இல்லை.
இனி, வருங்கால தேர்தல் அறிக்கையில், நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அளிக்கும்போது, அதன் அருகில் நட்சத்திர குறியீடுகளை இட்டு, 'நிபந்தனைக்கு உட்பட்டது' என்று அச்சிடுங்கள் முதல்வரே!
நீட் தேர்வு மத்திய அரசு சம்பந்தப்பட்டது; அதனால் ரத்து செய்ய இயலவில்லை என்கிறீர்கள். ஆனால் அரசுத்துறை, மின்வாரியம் மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் தானே உள்ளன?
எதிர்க்கட்சியாக இருந்தபோது நீங்கள் பங்கேற்ற போராட்டங்களில் எழுப்பிய கோரிக்கைகளை, தற்போது நிறைவேற்றலாமே? போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், பஞ்சப்படி கேட்டுப் அன்று போராடிய போது உங்களுக்கு நியாயமாக தென்பட்ட விஷயம், தற்போது அநியாயம் ஆகிவிட்டதா?
நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும், மேல்முறையீடு, சீராய்வு மனு என, கீழ், மேல் கோர்ட்டுகளுக்கு, முதியோரை அலைய விடுவது தான் திராவிட மாடலா?
'தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால், மேல்முறையீடு செய்யும் அற்ப புத்தி எங்களுக்கு கிடையாது' என்ற உங்களின் தந்தை வார்த்தையை, நீங்கள் மீறுவது நியாயமா?
மேல்முறையீட்டு விசாரணைக்காக ஒவ்வொரு முறையும், எங்களுக்கு 8 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
விநாச காலே விபரீத புத்தி!
என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்றவுடன், பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், டிரம்ப்.
காரணம், அமெரிக்க பார்லிமென்ட் வளாகத்தை 2021ல் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய, 1,250 ரவுடிகளை விடுதலை செய்ய உத்தரவு போட்டுள்ளதுடன், அவர்களை தேசபக்தர்களாக அறிவித்து, உண்மையான தேசபக்தர்களை தலைகுனிய வைத்து விட்டார்.
கூடவே, முன்னாள் அதிபர் பைடன் ஆட்சியில், பிணைக் கைதிகளாக இருந்தவர்களுக்கு எல்லாம் பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்துள்ளார்.
டிரம்பின் இந்த அதிரடியை உலகத் தலைவர்கள் நிச்சயம் வரவேற்க மாட்டார்கள்; ஆனாலும், போகிற போக்கில் இதுமாதிரி எத்தனை புரட்சிகரமான உத்தரவுகளை போடப் போகிறாரோ தெரியவில்லை!
இதைத் தான், 'விநாச காலே விபரீத புத்தி' என்று சொல்வர்; தான் நினைத்ததே சரி என்று செயல்படும் டிரம்பிற்கு, கடவுள் தான் சரியான பாதையை காட்டி அருள வேண்டும்!

