தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ தைரியம் உள்ளதா அமைச்சருக்கு?

தைரியம் உள்ளதா அமைச்சருக்கு?

தைரியம் உள்ளதா அமைச்சருக்கு?


PUBLISHED ON : ஜூன் 29, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.குப்புசாமி, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பள்ளிகளில் மத அடையாளங்களை வெளிப்படுத்த சொல்லும், அண்ணாமலையின் கருத்து மிகவும் பிற்போக்குத்தனமானது...' என்று கூறியுள்ளார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ்.

தமிழகத்தில் கழகம் ஆட்சிக்கு வருமுன், 'நீறில்லா நெற்றி பாழ்' என்ற அவ்வைப்பாட்டியின் அறிவுரைக்கேற்ப, நெற்றியில் திருநீறு, சந்தனம் அல்லது குங்குமம் வைத்து கொண்டுதான் மாணவர்கள் பள்ளி செல்வது வழக்கம்.

கிறிஸ்துவ மிஷினரிகளின் நிர்வாகத்தில் பள்ளிகள் இருந்தாலும், மதச் சடங்கை கடைப்பிடிக்க எந்த தடையும் இருந்ததில்லை.

தி.மு.க., என்று ஆட்சிக்கு வந்ததோ, அன்று ஆரம்பித்தது பகுத்தறிவு என்ற பெயரில் கிரகசாரம்.

அதுவரை அமைதியாக இருந்த மிஷினரிகள், ஹிந்து மாணவர்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கின.

அத்துடன், பொது வெளியில் பூணுால், குடுமி அறுப்பு போன்ற சேட்டைகளும் அரங்கேறின.

ஹிந்து மாணவ - மாணவியர் மனதிலும், ஹிந்துக்களின் உள்ளங்களிலும், 'தாங்கள் ஹிந்து' என்ற உணர்வு எழுந்து விடக்கூடாது என்பதற்காக, தீட்டப்பட்ட சதி இது!

இதன் உள்நோக்கம் புரியாத ஹிந்துக்களும் சகித்து போயினர்.

அதேநேரம், கிறிஸ்துவர்கள் சிலுவை அணியவும், முஸ்லிம்கள் தாயத்து கட்டி வருவதற்கும் பள்ளிகளில் எந்தவிதமான தடையும் இல்லை.

அதைத்தான், ஹிந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

உடனே, 'மத அடையாளங்கள் இல்லாமல், அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், முன்னாள் முதல்வர் காமராஜர், சீருடை திட்டத்தை கொண்டு வந்தார். மீண்டும் மத அடையாளத்தை புகுத்துவது மிகவும் பிற்போக்குத்தனமானது. பள்ளி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்...' என்று வெகுண்டெழுந்துள்ளார், அமைச்சர் மகேஷ்.

ஏழை - பணக்காரர் என்ற பாகுபாடு மாணவர்களுக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் சீருடை திட்டம் வந்ததே தவிர, மத அடையாளங்களை மறைக்க அல்ல!

ஆனாலும், நெற்றியில் மத அடையாளங்களை இடுவதற்கு காமராஜர் தடை விதிக்கவில்லை. ஏனெனில், படிக்கும் காலத்தில் நெற்றியில் திருநீறோடு தான் பள்ளி சென்றோம்; அதை எவரும் தடுத்ததில்லை. நெற்றியில் ஏன் திருநீறு வைக்கவில்லை என்று கேட்ட ஆசிரியர்கள் தான் உண்டு.

இன்றைக்கு ஹிந்து மத அடையாளங்களோடு பள்ளிக்கு வரக்கூடாது என்று பிலிம் காட்டும் அமைச்சர் மகேஷ், கிறிஸ்துவ சிறார்கள் சிலுவை அணிந்து வரக்கூடாது என்றும், முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்றும் சொல்வாரா?

அவ்வளவு தைரியம் உள்ளதா அமைச்சருக்கு!



தேசப்பற்றை வெளிப்படுத்தும் நேரம்!


சு.செல்வராஜன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமெரிக்கா, ஈரானை தாக்கியதை சீனாவும், ரஷ்யாவும் கண்டித்துள்ள நிலையில், இந்தியா மவுனம் சாதித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளது, காங்கிரஸ் கட்சி.

அமெரிக்கா, ரஷ்யா, ஈரான் ஆகிய மூன்றுமே நம் நட்பு நாடுகள். கச்சா எண்ணெய் தேவையை ஈரான், ரஷ்யா நாடுகள் வாயிலாக நாம் பெற்று வருகிறோம். அமெரிக்கா அதை விரும்பவில்லை என்றாலும், தன் எதிர்ப்பை இந்தியா மீது திணிக்கவில்லை.

'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலையை ஈரான் எடுத்திருந்தாலும், அதற்காக, இந்தியாவை அந்நாடு எதிர்க்கவில்லை.

இது, ஒவ்வொரு நாட்டிற்குமான வெளியுறவு கொள்கை விவகாரங்கள்!

இதில், அந்நாட்டு அரசியல்வாதிகள் தலையிடுவதில்லை.

ஆனால், இங்குள்ள அரசியல் கட்சியினரோ, நாட்டின் வெளிவிவகாரத்தில் மூக்கை நுழைத்து, அதிலும் அரசியல் செய்ய துடிக்கின்றனர்.

தற்போது, இஸ்ரேல் - ஈரான் போரை முஸ்லிம் பிரச்னையாக்கி, ஈரானை ஆதரிக்காத மத்திய அரசை கண்டித்து, ஹிந்து - முஸ்லிம் கலவரத்தை துாண்ட முயற்சிக்கிறது காங்., கட்சி.

அதை பின்பற்றி தி.மு.க., வும் தன் விஷமப் பிரசாரத்தை துவக்கியுள்ளது.

வரும் 2047-ல் வல்லரசு நாடாகும் இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறது நம் நாடு. ஆனால், காங்., கட்சியோ, இதுபோன்ற பிரிவினை அரசியலால், மீண்டும் நம் நாட்டை பிச்சைக்கார நாடாக்க துடிக்கிறது.

எது எப்படி இருந்தாலும், மத, மொழி, பிராந்தியம் கடந்த தேசப்பற்றையும், தேசநலன் மீதான அக்கறையையும் ஒவ்வொரு குடிமகனும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது!



திரையில் தலைவனை தேடாதீர்கள்!


எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' என்பது போல், திரைப்படங்களில் ஒழுக்க சீலராகவும், தீமையை கண்டு பொங்குவோராகவும், போதைப் பழக்கத்திற்கு எதிரானவர்களாகவும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் காட்டப்படும் நடிகர்கள் பலர், உண்மையில் எப்படி வாழ்கின்றனர் என்பதற்கு, போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகியுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் ஓர் எடுத்துக்காட்டு!

சில ஆண்டுகளுக்கு முன் சுசித்ரா என்ற பாடகி, கோலிவுட்டை நோக்கி இதுபோன்ற குற்றச்சாட்டைக் கூறியபோது, அதற்கான ஆதாரம் இல்லாததால், அவதுாறு என்று ஒதுக்கப்பட்டது.

ஆனால், இன்று நிரூபண மாகியுள்ளது. போலீஸ் வலைக்குள் சிக்கியவர்கள் இருவர் தான்; சிக்காதவர்கள் எத்தனை பேரோ!

இவர்களை தான் நம் இளைஞர்கள் ரோல் மாடலாக கருதுகின்றனர்!

திரைப்படத்தில் யாரோ ஒருவர் வசனம் எழுத, மற்றொருவர் நடித்துக் காட்ட, அதை உள்வாங்கி, திரையில் பிரதிபலிக்கும் நடிகர்களை, இளைஞர்கள் வழிகாட்டியாக நினைக்கின்றனர் என்றால், இதை விட சமூக அவலம் என்ன இருக்கிறது?

கல்வியறிவு அற்ற அக்காலத்தில் வீரம், அறிவு, ஒழுக்கம் என்று திரையில் உத்தமனாக நடிக்கும் நடிகர்களை, அதுதான் அவர்களது உண்மை குணம் என்று எண்ணி பாமர மக்கள் ஏமாந்தனர்.

ஆனால், கல்வி அறிவு மேம்பட்ட இந்த நவீன காலத்திலும் திரையில் காட்டப்படும் போலி வேஷத்தை உண்மை என்று நம்பி, நடிகர்களை துரத்திக்கொண்டு திரிகின்றனர் என்றால், கல்வி அவர்கள் அறிவில் ஏற்படுத்திய தெளிவு தான் என்ன?

இதோ... 'தோல்வியை ஏற்க, பிரச்னைகளை சமாளிக்க, வாழ்வோடு போராட தைரியமில்லாமல் போதையை நாடும் கோழைகள் நாங்கள்...' என்று புத்தியில் அடித்தாற்போல் காட்டிவிட்டார், ஸ்ரீகாந்த்.

எனவே, இளைஞர்களே... இனியாவது உங்களுக்கான தலைவனை திரைப்படங்களில் தேடாமல், அறிஞர்களிடமும், கொள்கையாளர்களிடமும் தேடுங்கள்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us