PUBLISHED ON : பிப் 05, 2026 04:06 AM

சி.ஸ்ரீதேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
உலகம் முழுதும் பண உதவி கேட்டு, யாசகம் கேட்பது ரெம்ப அவமானமாக இருப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார்.
ஒரே நேரத்தில் தான் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் சுதந்திரம் கிடைத்தது. இந்தியா தானுண்டு, தன் வேலையுண்டு என்று, நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே லட்சியமாக கொண்டு செயல்பட்டு, இன்று, உலகின் நான்காவது பொருளாதார பலம் கொண்ட நாடாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஆனால், பாகிஸ்தான் என்ன செய்கிறது?
பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு செலவிட வேண்டிய பணத்தை, நேரத்தை, உழைப்பை எல்லாம் இந்தியாவின் அமைதியையும், வளர்ச்சியையும் சீர்குலைக்க பயங்கரவாதிகளுக்கு செலவிட்டு வருகிறது. பின், வளர்ச்சி எங்கிருந்து வரும்?
இதோ... ஒவ்வொரு நாட்டிடமும் பண உதவி கேட்டு யாசம் கேட்டு நிற்கிறது.
கெடுவான் கேடு நினைப்பான் என்று சும்மாவா சொன்னார்கள்?
பிரசவ கால விடுமுறையை தர மறுப்பது ஏன்?
மரகதம் சிம்மன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பணிபுரியும் மங்கையர்க்கரசி என்பவருக்கு மூன்றாவது பிரசவகால விடுப்பு தர மறுத்துள்ளனர், அதிகாரிகள்.
அப்பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, 'மூன்றாவது பிரசவத்திற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இவ்விவகாரத்தில் உச்ச, உயர் நீதிமன்றங்களின் உத்தரவுகளை அமல்படுத்த அனைத்து செயலருக்கும் தலைமை செயலர் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் ஒரு பெண் கர்ப்பமுற்றால், அவருக்கு கர்ப்பகால விடுமுறையாக, மூன்று மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்கிறது, இந்திய மகப்பேறு சலுகை சட்டம்.
அதை செயல்படுத்த அதிகாரிகளுக்கு என்ன தயக்கம்?
ஒருகாலத்தில் குறைந்தது ஐந்து குழந்தைகள் பெற்ற பெண்கள், இன்று ஒன்று, இரண்டு குழந்தையுடன் நின்று விடுவதால், தென்மாநிலங்களில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதனால் தான், இரண்டு குழந்தைகள் கொள்கையை, கடந்த ஆண்டு ரத்து செய்தது ஆந்திர அரசு.
தமிழகத்தின் பிறப்பு விகிதமும், வெகுவாக குறைந்து கொண்டு வரும் நிலையில், வெகு சிலரே மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள முன்வருகின்றனர். அவர்களுக்கும் இதுபோல் விடுப்பு தரமாட்டேன் என்று அடம்பிடிப்பது எவ்வகையில் நியாயம்?
எல்லாரும் மங்கையர்கரசி போன்று நீதிமன்றம் ஏறி, தீர்ப்பு பெற்ற பின் குழந்தை பெற முடியுமா?
நல்லா ஆடுறாரய்யா நாடகம்!
ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'பரந்துபட்ட இந்தியா, எண்ணற்ற மொழிகள், இனங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் தழைக்கும் நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் பண்பு; ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை. அவை ஒன்றை ஒன்று மதித்து வளப்படுத்துகின்றன' என்பது தி.மு.க., முதல்வர் ஸ்டாலினின் குடியரசு வாழ்த்து செய்தி!
நரி, சிங்க வேஷம் போட்டாலும், தன் இயல்பு குணமான ஊளையிடுவதை விடதாம்!
அதுபோல், குடியரசு தின வாழ்த்து செய்தியில் ஒற்றுமை கீதம் வாசித்த முதல்வர், வரும் சட்டசபை தேர்தலை, ஆரிய - -திராவிட போர் என்றும், திராவிட போரின் மற்றொரு களம்தான் 2026 தேர்தல் களம் என்று மறுநாள் முழக்கமிட்டுள்ளார்.
இந்தியர்களை ஆரியர் - திராவிடர் என்று பிரித்துப் பார்ப்பதற்கு பெயர் தான், வேற்றுமையில் ஒற்றுமையா?
சரி... இவர்கள் முழங்கும் திராவிடம், தமிழகத்தைத் தவிர தென் மாநிலங்களில் எங்காவது ஒலிக்கிறதா அல்லது வட மாநிலங்களில் எந்த மூலையிலாவது, 'நாங்கள் ஆரியர்கள்' என்று எவராவது மார்தட்டிக்கொள்கின்றனரா?
ஒரு சாதாரண சட்டசபைத் தேர்தலை, ஓர் இனப்போரைப் போல சித்தரிப்பதற்கு பெயர் தான், வேற்றுமையில் ஒற்றுமையா?
ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை; ஒன்றை ஒன்று மதிக்க வேண்டும் என்று கூறும் முதல்வர், ஹிந்தியையும், ஆரிய இனத்துக்கு உள்ள பண்பாட்டையும், தனித்துவத்தையும் மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில், நுாற்றுக்கணக்கான மாணவர்களை பலி கொடுத்தது போதாது என்று, இன்று, நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுப்பதற்கு பெயர் தான் வேற்றுமையில் ஒற்றுமையா?
நீர்நிலைகளை கபளீகரம் செய்ய கற்றுக் கொடுக்கும் தி.மு.க.,
கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
செங்கல்பட்டு அருகே மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், 10 ஏக்கர் அரசு நிலத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பில் செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க முடிவு செய்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சொந்தமான இடத்தில் உள்ள குளம், மண் கொட்டி துார்க்கப்பட்டது. இப்போது, அக்குளத்தை மீண்டும் சீரமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணியும், புறநகர் பேருந்து நிலைய பணிகள் செய்யும் ஒப்பந்ததாரரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், குளத்தை சீரமைக்கும் பணியை துவக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இந்த இடத்தின் அருகில் கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், காவல் துறை அலுவலகம், கல்லுாரி போன்றவை இருப்பதால், அதிக விலை போகும். அதனால், குளத்தை சீரமைக்கும் பணியை கிடப்பில் போட்டுவிட்டால், காலியாக கிடக்கும் அந்த இடத்தில், முதலில் குடிசைகளை போட்டு கழக கொடிகளை நட்டு, ஆக்கிரமிப்பு செய்யலாம்; பின், ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உதவியுடன் பட்டா பெற்று விடலாம் என்பது தான், உள்ளூர் உடன்பிறப்புகளின் மறைமுகமான திட்டம்.
மேலும்,100 கோடி ரூபாய் மதிப்பில் பேருந்து நிலையம் அமைப்பதன் வாயிலாக, அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் கலெக் ஷன் மற்றும் கமிஷன், துார்க்கப்பட்ட குளத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகள் வாயிலாக கிடைக்கப்போகும் ஒரு கோடி ரூபாய் கரப்ஷன் என, கழக கண்மணிகளின் காட்டில் ஒரே பண மழை தான்!
இதுபோன்று, விஞ்ஞான ரீதியாக மலைகளை, வனங்களை, சதுப்பு நிலங்களை, நீர் நிலைகளை கபளீகரம் செய்ய, தி.மு.க.,விடம் இருந்து தான் கற்க வேண்டும்!

