தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/அறநிலைய துறைக்கு இது அழகா?

அறநிலைய துறைக்கு இது அழகா?

அறநிலைய துறைக்கு இது அழகா?


PUBLISHED ON : மார் 07, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.ஸ்வாதி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமேஸ்வரத்துக்கு வரும் பக்தர்கள், கடலில் புனித நீராடிவிட்டு, தங்களுடைய மூதாதையருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய, அங்குள்ள புரோகிதர்களுக்கு கட்டணமாக, 300 முதல் 500 ரூபாய் கொடுக்கின்றனர்.

பக்தர்கள் மனமுவந்து கொடுப்பதை, புரோகிதர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், நம் ஹிந்து அறநிலையத் துறையினருக்கு இது பொறுக்கவில்லை. 'இனி கோவிலில் இந்த பூஜைகளுக்கான பணத்தை கட்டிவிட வேண்டும். அதிலிருந்து புரோகிதர்களுக்கு, 50 அல்லது 100 ரூபாய் கொடுக்கப்படும்' என்று உத்தரவிட்டு, ஹிந்துக்களின் கோபத்திற்கு ஆளாகி விட்டனர்.

ஏற்கனவே, கோவில் உண்டியலிலும், எல்லா தீர்த்தங்களிலும் நீராடவும் பணம் குவிகிறது. அது போதவில்லை என்று, இப்போது புரோகிதர்கள் தலையிலும் கை வைக்க பார்க்கின்றனர். எத்தனையோ அரசியல்வாதிகள், பெரும் பண முதலைகள் எவ்வளவோ கொள்ளை அடிக்கின்றனர். அதையெல்லாம் கண்டும் காணாது விட்டு விடுகின்றனர்.

புனித தினங்களில் கடலில் நீராடி, தங்கள் மன சாந்திக்காக மூதாதையர் நினைவாக பூஜைகள், பரிகாரங்கள், தர்ப்பணங்கள் செய்வதும், அதற்காக புரோகிதர்களுக்கு பணம் தருவதும், காலம் காலமாக நடந்து வருகிறது. இதிலும், அரசு குறுக்கிடுவது என்பதை ஏற்கவே முடியாது.

ஒருவேளை, குறிப்பிட்ட சமூகத்தினரே இத்தொழிலில் ஈடுபட்டிருப்பது ஆட்சியாளர்கள் கண்களை உறுத்துகிறதோ என்னவோ? எது எப்படி இருந்தாலும், ஹிந்துக்கள், மனமுவந்து புரோகிதர்களுக்கு கொடுப்பதை நடுவில் புகுந்து தடுப்பது, அறநிலையத் துறைக்கு அழகல்ல.

ஒரே நாளில் இந்த உத்தரவை வாபஸ் பெற்றதால், தப்பித்தார் அமைச்சர்.



ராகுல் கருத்து ஏற்புடையது அல்ல!


த.யாபேத் தாசன், பேய்க்குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: காங்., - எம்.பி., ராகுல், 2023ல் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்' என்று வாக்களித்தார்.

இப்போது, 'இட ஒதுக்கீட்டுக்கு உச்சவரம்பு நீக்கப்படும்' என்று ராகுல் கூறியுள்ளார். அதாவது, இனி மொத்தமும் இட ஒதுக்கீடு தான் என்று தான் இதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப் பாலும், இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்குவதாலும் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைத்து விடும் என்பதை தீவிரமாக யோசிக்க வேண்டிய தருணம் இது.

புதிய பொருளாதார கொள்கையின் அடிநாதமே, தனியாருக்கு ஊக்கம் மற்றும் அரசின் சுமையை குறைப்பது என்பது தான். இதை நாம் ஏற்று, 33 ஆண்டுகள் ஆகிவிட்டன.

மத்திய, மாநில அரசுகள் நிரந்தர பணியாளர்களை எடுக்காமல், பெரும்பாலும் ஒப்பந்த முறையிலான பணியாளர்களையே தேர்வு செய்கின்றன. ஏனெனில், நிரந்தர பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டியுள்ளது.

எதிர்க்கட்சிகளாக இருக்கும் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என்று கூறுகின்றனர். தேர்தலில் வெல்வதற்காக, பல்வேறு வாக்குறுதிகளையும் வாரி விடுகின்றனர்.

ஆனால், ஆட்சிக்கு வந்த பின், 'நிதி நிலை சரியில்லை' எனக் கூறி, வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுகின்றனர். நிலைமை இப்படி இருக்கும்போது, ஜாதி வாரி கணக்கெடுப்பாலும், இடஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கத்தாலும் மக்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் விளையப் போவதில்லை.

மக்கள் மத்தியில் வீண் குழப்பங்களை மட்டுமே உருவாக்க முடியும்.மணிப்பூரில் இட ஒதுக்கீட்டு பிரச்னையால் தான், அந்த மாநிலம் இன்று வரை அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

'உண்ணாவிரத போராட்டத்தில் என் உயிர் போனால், மராத்தா சமூகத்தினர் மஹாராஷ்டிராவை எரித்து விடுவர்' என சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே எச்சரித்துள்ளார். இதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பாலும், இட ஒதுக்கீட்டாலும் கிடைக்கக்கூடிய விளைவுகள்.

எனவே, ராகுல் போன்ற தலைவர்கள், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்காத விஷயங்களை பேசாமல் இருப்பதே நன்று. வி.பி.சிங்கின் மண்டல் கமிஷன் வாயிலாக மிகப்பெரிய பலனை அனுபவித்தது பா.ஜ.,தான் என்பதை ராகுல் மறந்து விடாமல் செயல்பட்டால் கட்சிக்கும், நாட்டுக்கும் நல்லது.



அ.தி.மு.க., கரை சேர ஒரே வழி!


ஆர்.பாலமுருகன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'தவளை தன் வாயால் கெடும்' என்பது போல, அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பா.ஜ.,வை விமர்சித்து வருகின்றனர்.

பா.ஜ., கூட்டணியை இவர்கள் முறித்ததற்கான உண்மையான காரணங்கள் மக்களுக்கு சரியாக தெரிவிக்கப்படவில்லை. தேவையில்லாத சில விஷயங்களுக்காக, சிலரின் சுயலாபத்திற்காக மட்டுமே, இந்த கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக் கொண்டதே தவிர, கொள்கை, கோட்பாடுகள் அடிப்படையில் அல்ல.

தற்போது, பா.ஜ.,வை வசைபாடும் ஜெயகுமாரும், ஓ.எஸ்.மணியனும், எத்தனை தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி தேடி தருவர் என்பதை பழனிசாமியால் கூற முடியுமா? பா.ஜ., ஒரு தேசிய கட்சி என்பதுடன், நாடு முழுதும் வீசும் மோடி அலையும், அந்த கட்சியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்தும் என்ற குரல்களும் நாடு முழுதும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில், பா.ஜ.,வை உதறிவிட்டு அ.தி.மு.க., வெளியில் வந்தது, யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொண்ட கதையாகவே முடியும். தற்போது, பன்னீர்செல்வமும், தினகரனும் ஒன்றிணைந்து, பா.ஜ., அணியில் சங்கமிக்க முடிவு செய்து விட்டனர்.

இவர்களுடன் பழனிசாமியும் சமரசமாக சென்று, பா.ஜ.,வுடன் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.,வாக கூட்டணி வைத்தால் ஒழிய, இந்த தேர்தலில் அ.தி.மு.க., கரை சேராது.



வாயைக் கொடுத்து காரியம் கெடுக்கும் பா.ஜ.,


அ. ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்த மத்திய அமைச்சர் வி.கே.சிங், 'மு.க.ஸ்டாலின் விரும்பினால் பா.ஜ., கூட்டணி வரலாம்' என பேசினார். பா.ஜ.,வினர் அதிர்ந்து விட்டனர்.

பா.ஜ., தமிழக தலைவர்அண்ணாமலை, தமிழகம்முழுதும் தொகுதி வாரியாக பயணம் செய்து, தி.மு.க.வின் தவறுகளைச் சுட்டிக் காட்டி விலாவாரியாக பேசினார். ஒரு பெரிய மரத்தை வெட்டும் போது, கிளைகளை வெட்டி, கடைசியாக வேர்களை வெட்டி ஆணிவேரை வெட்டும் போது மரம் விழும்.

காங்கிரஸ் என்ற விஷ மரத்தை அழிக்க 'இண்டியா'கூட்டணியின் மாநில கட்சிகள் சிதறிய வேளையிலும், காங்கிரசுக்கு பக்கபலமாக நிற்கிறது தி.மு.க., அந்த கூட்டணியை உடைப்பதாகநினைத்து, அந்த மத்திய அமைச்சர் இவ்வாறு பேசி இருக்கிறார் என்று கருதினா லும், இப்போதைய நிலையில் அது உகந்ததாக இல்லை.

பா.ஜ.,வினர் வாயைக் கொடுத்தே காரியத்தைக் கெடுக்கின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us