PUBLISHED ON : ஜூலை 24, 2026 12:21 AM

த.வேணுகோபாலன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பதவியைத் துறந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குதிரை பேரம் அல்ல; தி.மு.க.,வினர், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசியதே உண்மையான குதிரை பேரம்' என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தி.மு.க.,வை விமர்சிக்க, உடனே, 'தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் பேரன் என, தன்னை நினைத்து கொண்டிருக்கிறார், மாணிக்கம் தாகூர்.
'அவர் வெறும் மாணிக்கம் தாகூர் தான் என்பதை மறந்து விட வேண்டாம். தி.மு.க.,வினரிடம் விளையாடினால், வேறு மாதிரி எல்லாம் பேசுவோம்' என்று பதிலடி கொடுத்துள்ளார், அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி.
தாகூர் என்று பெயர் வைத்தால், அவர் தாகூரின் பேரனாகத் தான் இருக்க வேண்டுமா? அப்படியெனில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் என்ன, முன்னாள் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் பேரனா, இல்லை பாரதி என்று பெயர் வைத்துள்ள ஆர்.எஸ்.பாரதி தான், மகாகவி பாரதியின் கொள்ளுப் பேரனா?
தி.மு.க.,வினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டனரா என்பதற்கு விளக்கம் கொடுக்காமல், தாகூர் பேரனா, தக்காளியின் சிஷ்யனா என்று விஷயத்தை மடை மாற்றுவது ஏன்?
'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல், இதிலிருந்தே, தி.மு.க.,வின் குதிரை பேரம் வெளிப்படுகிறதே!
கழுவுற மீனில் நழுவுற மீன்கள்!
த.யாபேத் தாசன், பேய்க்குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: 'பா.ஜ., எதிர்ப்பு புள்ளியில் இருந்து தான், தி.மு.க., - த.வெ.க., இணைய வேண்டும் என்று தான் திருமாவளவன் சொல்கிறார்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அமைச்சர் வன்னியரசு, தன் கட்சி தலைவர் திருமாவளவனின் பேச்சுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.
'இண்டி' கூட்டணி தமிழகத்தில் தான் வலுவாக இருந்தது. இப்போது அதுவும் கேள்விக்குறியாகிவிட்டது.
இதற்கு காரணம், காங்கிரசின் சுயநல நிலைப்பாடே!
சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., - த.வெ.க., எவருடன் கூட்டணி வைப்பது என்று குழப்பி, ஒருவழியாக தி.மு.க.,விடம், 28 'சீட்' பெற்று, அதில் ஐந்து இடங்களில் மட்டும் வென்றிருந்த நிலையில், தேர்தல் முடிவுக்கு பின், அப்படியே த.வெ.க.,வுக்கு தாவி, த.வெ.க., அமைச்சரவையில், இப்போது துண்டு போட்டு அமர்ந்து விட்டது, காங்.,
அதுமட்டுமா... தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்த போது ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும், இப்போது, த.வெ.க., கூட்டணியில் ஒரு ராஜ்யசபா பதவியும் பெற்று உள்ளது என்றால், காங்கிரசின் கூட்டணி தர்மம் எதை நோக்கி உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!
கட்சி வளர்ச்சிக்காக காங்கிரஸ் இப்படி செய்திருக்கலாம்; ஆனால், அக்கட்சி தன்னை வளர்த்துக் கொள்ள நினைத்தால், அனைத்து மாநிலங்களிலும் தனித்து போட்டியிட்டிருக்க வேண்டுமே தவிர, மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அதன் முதுகில் சவாரி செய்து கொண்டே, சமயம் பார்த்து அக்கட்சிகளை குப்புற தள்ளும் வேலையை செய்யக் கூடாது.
இப்படித்தான், ஹரியானா சட்டசபை தேர்தலில், 'தாங்கள் வலிமையாக இருக்கிறோம்; எப்படியும் வெற்றி பெற்று விடுவோம்' என்று மனப்பால் குடித்து, 'இண்டி' கூட்டணி கட்சியான ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க மறுத்து விட்டது, காங்.,
அதேநேரம், டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி முதுகில் சவாரி செய்ய ஆசைப்பட்டது; அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்ததும், அக்கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி, அக்கட்சியின் வெற்றிக்கு வேட்டு வைத்தது, காங்.,
இதேபோன்று தான், பீஹார் சட்டசபை தேர்தலின் போது, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு காங்., கொடுத்த குடைச்சலில், கூட்டணி மொத்தமும் படுதோல்வி அடைந்தது.
இதிலிருந்து, காங்கிரசின் நிலைப்பாடு என்பது, ராகுலை பிரதமராக்குவதற்காக பார்லிமென்ட் தேர்தலில், கூட்டணி கட்சிகள் அனைத்தும், குறிப்பாக, மாநிலக் கட்சிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.
அதேநேரம், சட்டசபை தேர்தல் என்றால், கட்சியை வளர்க்க வேண்டும் என நினைக்கிறது.
காங்கிரசின் இந்த குறுகிய நிலைப்பாட்டை, மாநிலக் கட்சிகள் புரிந்து கொண்டதால் தான், இண்டி கூட்டணி கட்சிகளும் காங்கிரசை எட்டத்திலேயே வைத்திருக்கின்றன.
தமிழகத்தில் தி.மு.க., மட்டும் காங்கிரசுடன் ஒட்டிக் கொண்டு இருந்தது. இப்போது அதுவும் விலகி விட்டது.
இனி, இண்டி கூட்டணி இருக்கும்; ஆனால், கூட்டணி கட்சிகள் கழுவுற மீனில் நழுவுற மீன்களாக இருக்குமே தவிர, அவை ஒருபோதும் ஒரே அணியில் இணைந்து, ஆட்சியை பிடிக்க முடியாது!
ஜாமின் வழங்ககூடாது!
சி.ஆ.ஸ்ரீனிவாச சர்மா, நெதர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'நீதிமன்றங்களில் ஜாமின் பெறுவது எளிது; நம்மை சிறைக்கு அனுப்புவது மிகவும் கடினம்' என்ற எண்ணமே பெரும்பாலான ஊழல் அரசியல்வாதிகளும், சமூக விரோதிகளும் சுதந்திரமாக நடமாடக் காரணம்.
அதனால், குற்றவழக்குகளில் சிக்கியோருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கக் கூடாது.
தீர்ப்பு வழங்கப்படும் வரை அரசியல்வாதிகள் தங்கள் பதவியில் இருக்கக் கூடாது; அமைச்சராகவோ, எம்.பி.,யாகவோ, எம்.எல்.ஏ., வாகவோ பதவியில் இருந்தால், அப்பதவியிலிருந்து அவர்களை நீக்க வேண்டும்.
ஊழல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை கையாள்வதற்கு என்றே ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
சரியான நேரத்தில் தீர்ப்பளிக்கப்படாமலோ அல்லது முடிவு செய்யப்படாமலோ, நீதித்துறையின் நேரம் பெரும் பாலும் அரசியல்வாதிகளுக்காகவே செலவிடப்பட்டு வீணடிக்கப்படுகிறது.
இத்தாமதம் நம் சமூகத்தின் தார்மீகக் கட்டமைப்பை சிதைக்கிறது; ஜனநாயகத்தின் வேர் களை அசைக்கிறது; மக்களின் விருப்பத்தை நசுக்குகிறது.
நமது தேசிய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமை கிறது. எனவே, குற்ற வழக்கை சந்தித்து வரும் எவருக்கும், நீதிமன்றம் ஜாமினே வழங்கக் கூடாது!
