தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பாவம் ஓரிடம் பழி வேறிடமா?

 பாவம் ஓரிடம் பழி வேறிடமா?

 பாவம் ஓரிடம் பழி வேறிடமா?


PUBLISHED ON : டிச 28, 2025 03:28 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2025 03:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.மூர்த்தி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை அடுத்த கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் மோகித், மதிய உணவு சாப்பிடும் போது, பள்ளியின் பக்கவாட்டு சுவர் சரிந்து விழுந்ததில் பலியாகியுள்ளார்.

இதை தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா,பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் மீது போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனராம்.

நல்ல வேளையாக அப்பள்ளிக்கு வாட்ச்மேன் என்று யாரும் இல்லை. இருந்தால், அவரையும் வழக்கில் சேர்த் திருப்பரோ என்னமோ!

மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல், பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததற்கும், வழக்கு பதிந்துள்ளவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

உண்மையில், தமிழக அரசின் மீதும், கல்வி அமைச்சரின் மீதும், பள்ளிக் கட்டடத்தை கட்டிய பொதுப்பணித் துறை மற்றும் கட்டடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் மீதும் அல்லவா வழக்கு பதிந்து, விசாரிக்க வேண்டும் ?

அதை விடுத்து, சுற்றுச்சுவருக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதில் ஏதாவது நியாயம் உள்ளதா?

பாவம் ஓரிடம், பழி வேறிடமா?

இதுவா பெண் சுதந்திரம்?


சி.பன்னீர் செல்வம், செங்கல்பட்டிலிருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவியர், வகுப்பறையில் மது அருந்தியுள்ளனர்.

'பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்று பாடினான், பாரதி. ஆனால், ஆளும் பகுத்தறிவு கொள்கையாளர்களோ, 'வீதிகள் தோறும் மதுக் கூடங்கள் வைப்போம்' என்று புரட்சி செய்ததால், இன்று பள்ளி சிறுவர் - சிறுமியர் போதையில் வீழ்ந்து, பள்ளிக் கூடங்களை மது அருந்தும், 'பார்'களாக மாற்றியுள்ளனர்.

'பெண்கள் விடுதலை பெற வேண்டுமாயின், அவர்கள் ஆண்களை போல் வேட்டி அணிந்து, 'கிராப்' வைத்துக் கொள்ள வேண்டும்; கர்ப்பப் பையை கத்தரித்து எறிய வேண்டும்; ஆண்களைப் போல களவியல் உரிமைகளை பெற வேண்டும்' என்ற ஈ.வெ.ராமசாமியின் கொள்கை தந்த புரட்சியின் விளைவு தான், 'ஆண் தான் மது அருந்த வேண்டுமா, பெண் அருந்தக் கூடாதா...' என்ற எண்ணத்தை சிறுமியரிடம் ஏற்படுத்தி, வகுப்பில் மது அருந்த வைத்துள்ளது.

இன்னும் சில பள்ளி சிறுமியர், விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள் போல், சமூக வலைதளங்களின் வாயிலாக அறிமுகமாகும் ஆண்களை நம்பி சென்று, பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகி, வாழ்க்கையை தொலைக்கின்றனர்.

பெண் சுதந்திரம் என்பது அரைகுறை ஆடை உடுத்தி, மது அருந்தி, சிகரெட் புகைத்து, 'கெத்து' காட்டுவதில் இல்லை. அளப்பறியா செயல்களை செய்து, சமுதாயத்தில் அனைவரும் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில் நிமிர்ந்து நிற்பதே பெண் சுதந்திரம் என்பதை பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் பதின்ம வயதில் உள்ள சிறுமியருக்கு போதித்துக் கொண்டே இருக்க வேண்டும் .

அப்போது தான், பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்த வந்தவர்கள் தாங்கள் என்பது அவர்கள் ஆழ் மனதில் பதிந்து, முரண்பாடான சிந்தாந்தங்களின் பிடியில் இருந்து விடுபடுவர்!

இரட்டை ஓட்டுக்கு விழுந்தது ஆப்பு!




அ.சேகர், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பெற்ற ஓட்டுகள், 1,05,522; தற்போது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின், அத்தொகுதியில், 1,03,812 ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

இதிலிருந்து, அத்தொகுதியில் போலி வாக்காளர்கள் எவ்வளவு பேர் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

இப்படி தமிழகம் முழுதும், 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை, வேலைக்காக இங்கு வந்து குடியிருப்போரில் பெரும்பாலானோர், இரட்டை ஓட்டுரிமை வைத்துள்ளனர். மேலும், இங்கு ஓட்டுரிமை உள்ளவர்கள் இடம் பெயர்ந்து போயிருந்தாலும், அவர்கள் வசித்த தொகுதியில் ஓட்டு இருக்கும்.

இவை எல்லாம், இதுவரை கள்ள ஓட்டுகளாக போடப்பட்டு வந்த நிலையில், வரும் தேர்தலில், இத்தகைய ஓட்டுகள் வடிகட்டப்படுவதால், ஒவ்வொரு ஓட்டும் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய விலை மதிப்பற்ற ஒன்றாகவே கருதப்படும்.

ஏனெனில், நடந்து முடிந்த பீஹார் தேர்தலில் வெறும், 27 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஒரு வேட்பாளர்.

அதனால், வரும் சட்டசபைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும், சில 100 ஓட்டுகள் கூட வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளன.

அதிலும், இத்தேர்தலில் நான்குமுனை போட்டி உள்ளதால், ஒவ்வொரு ஓட்டுமே மதிப்பு மிக்கதாக மாறும்!

கூடவே, தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற கட்சிகள் தங்களுக்கான ஓட்டு வங்கி என்று கூறும் கதையில், எவ்வளவு துாரம் உண்மை உள்ளது என்பதையும் இத்தேர்தலில் அறிந்து கொள்ளலாம்!

ஓட்டுக்காக கையது கொண்டு மெய்யது பொத்து்ம் தி.மு.க.,!

வெ.தீனதயாளன், காஞ்சிபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ஜாதி - மத கலவரங்கள் ஏற்படுவது வழக்கம்.

ஈ.வெ.ராமசாமி காலத்தில் பிள்ளையார் சிலை உடைத்ததில் துவங்கி, இன்று திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற அனுமதி கிடைத்தும், தீபம் ஏற்ற தடை செய்வது வரை, திராவிட கும்பல்களின் அத்தனை அத்துமீறல்களுக்கும் காரணம், ஹிந்துக்களிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பதே!

பிற மதத்தினர் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கூடி, அரசியல் சூழ்நிலையை ஆராய்ந்து, தங்களுக்கு சாதகமாக இருக்கும் கட்சிக்கு ஓட்டு போடுகின்றனர்.

ஆனால், திருப்பரங்குன்றம் விஷயத்தில் நம் பணத்தை எடுத்து, நமக்கு எதிராக வழக்கு போடுகிறது அறநிலையத்துறை.

அதுசரி... ஹிந்து மதம் குறித்து இழிவாக பேசுவதை பகுத்தறிவு என்பதும், பிற மதம் குறித்து பேசும் போது ஓட்டுக்காக, 'கையது கொண்டு மெய்யது பொத்தி, காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுல் இருக்கும் பாம்பென' அடங்கிக் கிடப்பது தானே தி.மு.க.,வின் கொள்கை!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கினால், ஹிந்துக்கள் அனைவருக்குமே தாழ்வு என்பதை, ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டிய நேரம் இது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us