/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஆக்கிரமிப்பாளர் காட்டில் மழை தான்!
/
ஆக்கிரமிப்பாளர் காட்டில் மழை தான்!
PUBLISHED ON : டிச 31, 2025 02:46 AM

எம்.முருகானந்தம், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, கொளத்துாரில் உள்ள பெரவள்ளூர் ஏரி மற்றும் வண்ணான்குளம் ஆகிய நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், அப்பகுதியிலுள்ள புறம்போக்கு நிலங்கள், குளங்கள் என, 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு விசாரணைக்கு வந்த போது, அம்பத்துார் மண்டல ஆர்.டி.ஓ., தரப்பில், 'தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தால், மாநகராட்சி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு, பெரிய அளவிலான நிலம் தரப்பட்டு உள்ளது. அந்நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு, 50 ஆண்டுகளுக்கும் மேல் மக்கள் குடியிருக்கின்றனர். அதேநேரத்தில், வண்ணான் குளத்தின் ஒரு பகுதியும், ஜி.கே.எம்.காலனி, கருணாநிதி சாலையில் ஒன்பதாவது தெரு முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது...' என, தெரிவித்துள்ளது.
இதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம், 50 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் ஆக்கிரமிப்புக்கள் எதுவும் இல்லை என்பதும், அதன்பின்பே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தான்!
கடந்த, 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், இருப்பவர்கள் யார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
அதனால் தான், ஆக்கிரமிப்பாளர்கள் சாதுர்யமாக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பெயரை ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு சூட்டியுள்ளனர்.
இப்படி அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை சூட்டி விட்டால், ஆட்சியில் இருப்போர், ஆக்கிரமிப்புக்களை அகற்ற சொல்லி கெடுபிடி செய்ய மாட்டார்கள் அல்லவா?
இப்போது, சென்னை உயர் நீதிமன்றம், 'வருவாய்த்துறை, குடிசை மாற்று வாரியம், சென்னை மாநகராட்சி இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால், வரும் சட்டசபை தேர்தலில் ஆக்கிரமிப்பாளர்களின் ஓட்டுகளை திராவிட மாடல் அரசு எப்படி அறுவடை செய்யும்?
அதனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும், கொளத்துார், வண்ணான்குளம் ஆக்கிரமிப்பாளர்களின் ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்ய, திராவிட மாடல் அரசு, அவர்களுக்கு மாற்று இடம் வழங்க ஆணை பிறப்பிக்கும்!
எனவே, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும், படவில்லை என்றாலும், ஆக்கிரமிப்பாளர் காட்டில் மழைதான்!
lll

