PUBLISHED ON : பிப் 07, 2025 12:00 AM

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'சட்டசபையில் நான் உட்காரும் இடத்தில், நீ அமர்ந்து ஆட்சியை பார்த்துக் கொள்; நான் கட்சியைப் பார்த்துக் கொள்கிறேன்' என்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., தன்னிடம் சொன்னதாக கூறியுள்ளார்.
சட்டசபையில், முதல்வர் சீட்டில் துரைமுருகன் அமர, அவர் கட்சித் தலைவராக தேர்வாக வேண்டும்.
எம்.ஜி.ஆரை முதல்வராக்க, அ.தி.மு.க., தொண்டர்கள் பலர், தங்கள் உயிரை தி.மு.க.,வினரால் தியாகம் செய்தனர்; சிலர் கண்களையும், கை - கால்களையும் இழந்தனர்; கொடூரமாக தாக்கப்பட்டனர்.
இதில், தி.மு.க.,வைச் சேர்ந்த துரைமுருகனை, எம்.ஜி.ஆர்., தன் சீட்டில் அமரச் சொன்னாராம்... யாராவது நம்புவரா?
அத்துடன், 'அ.தி.மு.க.,வை தி.மு.க.,வோடு இணைக்க, ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் முன்னிலையில், 1979 செப்., 13ல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடந்தது. முதல்வர் பதவி கருணாநிதிக்கு, கட்சி பொதுச்செயலர் பதவி தனக்கு என எம்.ஜி.ஆர்., விரும்பினார். அதை, கருணாநிதி ஏற்கவில்லை' என்றும் கூறியுள்ளார்.
முதல்வர் எம்.ஜி.ஆரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியும் பேசி முடித்து வெளியே வந்தவுடன், 'இணைப்பு பற்றி கட்சி செயற்குழு, பொதுக்குழுவில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்' என்று ஊடகங்களுக்கு அறிவித்தனர்.
இச்செய்தியை அறிந்த தமிழகம் முழுதும் உள்ள எம்-.ஜி.ஆர்., மன்றத்தினர், 'எம்.ஜி.ஆர்., கட்டளையிட்டால் உயிரைக் கூட விடுவோம்; ஆனால், மீண்டும் தி-.மு.க., கொடியை கையில் ஏந்த மாட்டோம்' என்று தீர்மானம் நிறைவேற்றி எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைக்கவே, அத்துடன், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதில், பொதுச்செயலர் பதவியை எம்.ஜி.ஆர்., விரும்பினார் என்று துரைமுருகன் கூறுவது அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு!
இன்னொரு கட்டுக்கதையில்...எம்-.ஜி.ஆர்., இரண்டு நாள் உயிரோடு இருந்திருந்தால், தி.மு.க.,வோடு, அ.தி.மு.க.,வை இணைத்திருப்பார் என்றார்.
கடந்த 1972ல் தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்ட நேரம், நாடு முழுதும் பதற்றம். எம்.ஜி.ஆரை, தி.மு.க.,வில் எப்படியாவது மீண்டும் இணைத்து விட வேண்டும் என்று, அக்கட்சி பிரமுகர்கள் இருவர், நேற்று இன்று நாளை படப்பிடிப்பு நடந்த சத்யா ஸ்டூடியோவிற்கு வந்தனர்.
இந்நிலையில், சென்னை சாந்தோம் அருகே எம்.ஜி.ஆர்., மன்ற பொதுச்செயலர் முசிறி புத்தனையும், ஓமப்பொடி பிரசாத்தையும் தி.மு.க.,வினர் தாக்கிவிட்டனர் என்ற செய்தி வரவே, இணைப்பு பேச்சுக்கு வந்த இருவரையும் எம்.ஜி.ஆர்., கோபத்தோடு வெளியேற்றி விட்டார்.
உண்மை இப்படி இருக்க, துரைமுருகன் தன் இஷ்டத்திற்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். இரண்டு நாள் அல்ல; எம்.ஜி.ஆர்., 200 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தாலும், அ.தி.மு.க.,வை தி.மு.க.,வுடன் இணைத்திருக்க மாட்டார்!
பொது சிவில் சட்டம் தரும் சுதந்திரம்!
அ.சேகர்,
கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாம் அனைவரும்
இந்தியர்கள் என்ற ஒரே நேர்க்கோட்டில் வாழ வேண்டும் என்றால், பொதுவான சிவில்
சட்டம் வேண்டும் என்பது, தேசியவாதிகள் பலரின் நீண்ட நாள் கனவு!
அவ்வகையில்,
பா.ஜ.,வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, பொது சிவில் சட்டம் இருந்தது.
தற்போது, அது நடைமுறைக்கு வரும் சூழல் கனிந்து வருவது மகிழ்ச்சி
அளிக்கிறது.
இச்சட்டத்தை, நாடு முழுதும் செயல்படுத்த எத்தனை
ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. ஆனாலும், நாட்டிலேயே முதலாவதாக, உத்தரகண்டில்,
பா.ஜ., தலைமையிலான ஆட்சியில், பொது சிவில் சட்டம் கடந்த 27-ம் தேதி முதல்
நடைமுறைக்கு வந்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது.
இதை அனைத்து மதத்தினரும் முழுமனதாக ஏற்க வேண்டும்; உண்மையான சமத்துவம் அனைவருக்கும் ஒரே சட்டத்தின் வாயிலாகத்தான் அமைய முடியும்.
இதில்
அதிகமாக பயன் அடைவோர் பெண்கள் தான்; அதிலும், இஸ்லாமிய சகோதரிகள், பொது
சிவில் சட்டத்தின் வாயிலாக திருமண பாதுகாப்பையும், சொத்தில், ஆண்களுக்கு
நிகரான உரிமைகளையும் பெற முடியும்.
பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய உத்தரகண்ட் அரசுக்கு ஒரு ராயல் சல்யூட்!
மோசமாகும் கல்வித்திறன்!
-
வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: ------------------------------------------நாட்டிலே
உயர்கல்வியில் சேருவோர், முனைவர் பட்டம் பெறுவோர், மருத்துவக்
கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை, காலை உணவு திட்டம்
உள்ளிட்டவற்றில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.
துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளுக்கு இலவச புத்தகம், சீருடை முதல், சில பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போர்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.
-
இப்படி பல சலுகை கள் வழங்கப் பட்டும், கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களின்
வாசிப்புத் திறன், எழுத்துக்களை அடையாளம் காணும் திறன் பின்தங்கிய நிலையில்
இருப்பதாக, 'ஏசெர்' அறிக்கை கூறியுள்ளது.
மூன்றாம் வகுப்பு முதல்,
ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 30 சதவீத மாணவர்களுக்கு முதல் வகுப்பு
புத்தகத்தைக் கூட வாசிக்கத் தெரியவில்லை.
முதல் வகுப்பில் 43
சதவீதம், இரண்டாம் வகுப்பில் 17 சதவீதம், மூன்றாம் வகுப்பில் 9 சதவீதம்
மாணவர்களுக்கும் எழுத்தை அடையாளம் காண முடியவில்லை என்கிறது, இந்த அறிக்கை.
ஐந்தாம்
வகுப்பில் 35 சதவீதம், ஆறாம் வகுப்பு 45 சதவீதம், ஏழாம் வகுப்பு 56
சதவீதம், எட்டாம் வகுப்பில் 64 சதவீதம் பேருக்கு இரண்டாம் வகுப்பு
புத்தகத்தை வாசிக்கத் தெரியவில்லை என்றால், தவறு யார் மீது?
மாணவர்கள்
ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் வேறு பள்ளியில் சேரும்போது, அவர்களுக்கு
தமிழ் - ஆங்கில எழுத்துக்கள் தெரியாத நிலையில், அங்குள்ள ஆசிரியர்கள் கடும்
சிரமப்படுகின்றனர்; துவக்கப்பள்ளி ஆசிரியர்களை குற்றஞ்சாட்டுகின்றனர்.
'ஐந்து ஆண்டுகளாக, வகுப்புகளில் என்ன சொல்லிக் கொடுத்தீர்கள்?' என கேள்வி
கேட்கின்றனர்.
நியாயமான கேள்வி தானே?
எட்டாம் வகுப்பில், 64
சதவீதம் மாணவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு புத்தகத்தை வாசிக்கத்
தெரியவில்லை என்றால், ஆசிரியர்கள் என்ன செய்கின்றனர்? பள்ளிக்கல்வித்துறை
என்ன செய்கிறது?
அரசு பள்ளிகளின் கல்வித்திறன் இந்த லட்சணத்தில் இருந்தால், யார் தான் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பர்?