/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
கார்த்தி சிதம்பரம் கூறியது சரியே!
/
கார்த்தி சிதம்பரம் கூறியது சரியே!
PUBLISHED ON : ஜன 17, 2024 12:00 AM
கோ. ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடியை பாராட்டி பேசி, சர்ச்சையில் சிக்கியுள்ள காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரத்திற்கு, அவரது கட்சி மேலிடத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
இதன் வாயிலாக ஆளுங்கட்சி எந்த நல்லது செய்தாலும், அதைத் தப்பித் தவறி கூட எதிர்க்கட்சியினர் பாராட்டி விடக் கூடாது எனும் ரீதியில், இன்றைய அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன என்பது தெளிவாகிறது.
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த கம்யூ., தலைவர் ஜீவானந்தம் முன்மொழிந்த சில நலத்திட்டங்களை, அவரை வைத்தே காமராஜர் திறக்க வைத்த பல நிகழ்வுகள், இதே தமிழகத்தில் நடந்துள்ளன.
கார்த்தி சிதம்பரம் ஒன்றும், 'மோடி பத்தாண்டுகளாக சிறப்பாக, சீரிய ஆட்சியை நடத்தி வருகிறார்' என பாராட்டிவிட வில்லையே. 'மோடிக்கு நிகரான புகழ் பெற்ற பிரதமர் வேட்பாளர் எதிரணியில் இல்லை' என்று தானே சொன்னார். இது, நுாற்றுக்கு நுாறு உண்மை தானே.
'இண்டியா' கூட்டணியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் போன்றோர் பிரதமர் மோடியின் செல்வாக்குக்கு முன் நிற்கக் கூட முடியாது என்பது தான் உண்மை. ஜால்ரா காங்., தலைவர்கள் வேண்டுமானால், மோடிக்கு மாற்றாக ராகுலை முன் நிறுத்தலாம்.
ஆனால், எப்போதும் மனதில் பட்டதை பளிச்சென பேசி விடும், கார்த்தி உண்மையை பேசியதற்காக, அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்புவது எல்லாம், காங்கிரசில் இன்னும் ஜனநாயகம் இல்லை என்பதையே காட்டுகிறது.
பிரேமலதா பொறுமை காப்பது நல்லது!
பாபு
கிருஷ்ணராஜ், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தே.மு.தி.க., துவக்கப்பட்ட போது, அந்த கட்சியின் நிறுவனர் விஜயகாந்த்
மீதிருந்த பற்றாலும், அவரது செயல்பாடு, நேருக்கு நேர் தவறுகளை
சுட்டிக்காட்டும் தைரியமும் பலரையும் ஈர்த்தது.
குறுகிய காலத்தில்,
தி.மு.க.,வையே பின்னுக்கு தள்ளி, எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்று இளைய
தலைமுறையினரிடம் புதிய நம்பிக்கையை அக்கட்சி விதைத்தது. கால மாற்றத்தில்,
விஜயகாந்த் உடல் நிலையில் தொய்வு ஏற்பட்டது.
கூட்டணி பேச்சில்,
நேரடியாக அவரால் ஈடுபட முடியாத சூழல். அவரது துணைவியார் பிரேமலதா,
மைத்துனர் சுதீஷ் கட்சியை வழிநடத்தினர். இந்த கட்டத்தில் தான் கட்சியின்
வளர்ச்சி, ஆட்டம் காண துவங்கியது.
தேர்தல் அறிவிப்பு வரும் போது
மட்டும் உற்சாகமாக களம் கண்டு, தங்களது முந்தைய வாக்கு வங்கி பலத்தை வைத்து
பிரேமலதாவும், சுதீஷும் பேரத்தில் இறங்கினர்.
அதிலும், ஒரே
நேரத்தில் இரண்டு பெரிய கட்சிகளுடன் பேரம் நடத்தி, பேரம் படியாமல் போனால்,
அந்த கட்சியை வசைமாரி பொழிந்தனர். இதனால், கட்சியின் நம்பகத்தன்மை மக்கள்
மத்தியில் பாதிக்கப்பட்டது.
இதனால், 10 சதவீதமாக இருந்த அந்த
கட்சியின் ஓட்டு வங்கி, படிப்படியாக சரிந்து, கடைசி தேர்தலில் 0.43
சதவீதமாக தள்ளப்பட்டது. இதற்கு முக்கிய பொறுப்பு, விஜயகாந்தின் மனைவியே.
சமீபத்தில்
விஜயகாந்த் காலமானார். இந்த சோகம் மறைவதற்குள், லோக்சபா தேர்தலுக்கு
கூட்டணி பேச்சில் அக்கட்சி களமிறங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பிரேமலதா மீண்டும் பதவி பித்து பிடித்து, கூடுதல் சீட்களுக்கு அழுத்தம்
கொடுத்து வருகிறார்.
பிரேமலதாவுக்கு ஒரு வேண்டுகோள்...
விஜயகாந்த்
மீதான அன்பும், பாசமும் மக்களுக்கு என்றும் மாறாது; அதற்கு கைமாறு
செய்யவும் காத்திருக்கின்றனர். ஆனால், கூட்டணி கட்சிகளிடம் நீங்கள்
நடத்தும் பேரம், மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.
தாங்கள் பொறுமையாக
இருந்தால், இழந்த வாக்கு வங்கியை படிப்படியாக மீட்டு எடுக்கலாம். ஆனால்,
அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், கட்சியை தற்போதுள்ள நிலையில் இருந்தும்,
இன்னும் கீழே கொண்டு சென்று விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
உதயநிதிக்கு இனி வாய்ப்பு கிடைக்காது!
ஆர்.பரத்வாஜ்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக இளைஞர் நலன்
மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு சில கேள்விகள்...
பல மேடைகளில், 'நான் கலைஞரின் பேரன்' என, பெருமையுடன் குறிப்பிட்டு வரும்
நீங்கள், 'உங்களுக்கு என ஒரு தனித்தன்மை இல்லவே இல்லை என, உங்களை அறியாமல்
சொல்லி வருகிறீர்கள்' என, எந்த உடன்பிறப்புகளும் இதுவரை உங்களிடம் கூறியது
இல்லையா?
சினிமாவில், நோகாமல்கதாநாயகனாகவும், கட்சியினர்
வற்புறுத்தியதால் திடீர் எம்.எல்.ஏ.,வாகவும் ஆனீர்கள். எம்.எல்.ஏ., ஆன
பிறகும், 'நெஞ்சுக்கு நீதி'யுடன், உங்களின் சினிமா சேவை தொடர்ந்தது. இப்படி
தீவிர கட்சி பணி ஆற்றியதால், விளையாட்டாய் அமைச்சர் ஆனீர்கள்.
இப்படிப்பட்ட கடின உழைப்பிற்கு ஏற்ற ஊதியமாய், தமிழக முதல்வர் உங்களுக்கு
இன்னமும் துணை முதல்வர் பதவி கொடுக்காமல் இருப்பது, உங்களுக்கு
இழைக்கப்பட்ட துரோகம் என, தோன்றவில்லையா?
எத்தனை அரசு பள்ளிகளில்,
விளையாட்டு உள்கட்டமைப்புகளை சரி செய்துள்ளீர்கள்? விளையாட்டு சாதனங்களே
இல்லாத பள்ளிகள் எவ்வளவு உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா?
மழைக்
காலத்தில், 'பார்முலா கார் ரேஸ் நடத்துகிறேன்' என, 42 கோடி ரூபாய் செலவு
செய்தது, 'யாரு அப்பன் வீட்டு காசு' எங்கள் வருங்கால முதல்வர் அவர்களே?
ஒவ்வொரு மாதமும், மகளிருக்கு 1,000 ரூபாய் கொடுக்கும் திட்டம் வாயிலாக,
மாதம் 1,200 கோடிகள் செலவாகின்றன. அந்த தொகையை கொண்டு, 'மத்திய அரசு உதவி
இல்லாமல், நாமே மாதந்தோறும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டலாம்' என,
'எய்ம்ஸ் செங்கல் நாயகனான' உங்களுக்கு தோன்றவில்லையா?
மாதாமாதம் 1,200 கோடி ரூபாய் வாயிலாக, பல தொழிற்சாலைகளை, 'எவனுடைய அப்பன் வீட்டு காசும்' இல்லாமல் நாமே துவங்கி இருக்கலாமே?
விளையாட்டு துறை அமைச்சகம், ஒரு பள்ளிக் குழந்தையின் வருங்காலத்தை
மாற்றக்கூடிய வல்லமை பெற்றது. அரசு பள்ளி குழந்தைகள் அனைவருக்கும்
உங்களுக்கு அமைந்தது போல் ஒரு தாத்தா, அப்பா அமைந்து, அவர்களே பார்த்துக்
கொள்வர் என நினைத்து விட்டீர்களோ?
பள்ளி, கல்லுாரிகளில் பயிலும்
இளைய சமுதாயத்தினர், போதைக்கு அடிமையாகின்றனர் என்று தெரிந்தும், அவர்களை
நல்வழிப்படுத்த விடாமல், உங்களை யார் தடுக்கின்றனர்?
இறுதியாக ஒரு
யோசனை... விரைவாக ஒரு முறையேனும் காலம் தாழ்த்தாமல், முதல்வராக இப்போதே
முடிசூடிக் கொள்ளுங்கள். இதை தவற விட்டால், வருங்காலத்தில் அந்த வாய்ப்பு
உங்களுக்கு, இன்னும் சொல்ல போனால் உங்கள் கட்சிக்கே கிடைக்காமல் போகும்
வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

