PUBLISHED ON : ஜூன் 17, 2024 12:00 AM

ஜெயராமன் கல்யாணசுந்தரம்,
பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தலில்
வெற்றி பெற்று, மூன்றாவது முறை பிரதமராக மோடி பொறுப்பேற்று,
அமைச்சர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையிலும்,
தி.மு.க.,வினர், பா.ஜ., மீதான பொய் பிரசாரத்தை விட்டுவிடுவதாக தெரியவில்லை.
நிர்மலா சீதாராமனும், ஜெய்சங்கரும் மீண்டும் அதே துறைகளுக்கு அமைச்சராக
தொடர்வதை கண்டு, அப்பட்டமான வெறுப்பு அரசியலை பரப்பி வருகின்றனர். அவர்கள்
இருவரும் மக்களை சந்திக்காமல், ராஜ்யசபா எம்.பி.,க்களாகி, அமைச்சர்கள்
ஆவதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.
ஏன், இவர்கள்
தலைவர் அண்ணாதுரை கூட, முதன்முதலாக பார்லிமென்டுக்கு போனது, ராஜ்யசபா
எம்.பி.,யாக தானே. முரசொலி மாறனும் பல ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பி.,யாக
இருந்துள்ளாரே. கனிமொழி கூட, முதலில் ராஜ்யசபாவுக்கு தானே சென்றார்.
இவ்வளவு
ஏன்... 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கூட ராஜ்யசபா
எம்.பி.,யாக இருந்தவர் தான். ஆனால், நிர்மலா சீதாராமனும், ஜெய்சங்கரும்
ராஜ்யசபா எம்.பி.,யாகி அமைச்சர்கள் ஆனால், அது கொல்லைப்புற வழி என்று
தி.மு.க.,வினர் விமர்சிக்கின்றனர். ஏன் என்றால், இவர்கள் இருவரும் பிராமண
சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பது தான் காரணம்.
மேலும், மோடியும் தனி
பெரும்பான்மை பெறாமல் பிரதமர் ஆகி விட்டதாக விமர்சிக்கின்றனர். மூன்று
முறை பிரதமர் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆயிரம் பேர் எதிர்த்தும் ஒருவர்
தனி மனிதராக சில கட்சிகள் கூட்டணியுடன் பெரும்பான்மையை பெற்று ஜெயிப்பது
என்பது, சாதாரண விஷயம் கிடையாது.
திராவிட கட்சிகள் தமிழகத்தில்
ஆயிரம் பொய் பிரசாரங்கள் செய்தும், மோடி பிரதமர் ஆகிறார் என்றால் அவர்
தடுக்க முடியாத சக்தி தான். இனியும் தி.மு.க.,வினரின் ஒருசார்பான வெறுப்பு
பிரசாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. இதை நன்றாக புரிந்து கொண்டு, 40
எம்.பி.,க்களை வைத்து, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழகத்திற்கு
தேவையான நல்ல திட்டங்களை கொண்டு வருவதே, நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு
தி.மு.க., செய்யும் நன்றிக்கடனாய் இருக்கும்.
குப்பையாக கிடக்கும் சிங்கார சென்னை!
எம்.கே.பார்த்தசாரதி, சென்னையில் இருந்து எழுதுகிறார்: எங்களின் சென்னையை ஒட்டிய தாம்பரம் பகுதியில், உணவுப் பொருள்கள் வழங்கும் துறை, மாநகர் போக்குவரத்து, குடிநீர் வாரியம், மின்சார வாரியம் ஆகிய நான்கு துறைகளும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, எங்களை போன்ற நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து, சேவை குறைபாடுகளை எழுத்துக்கள் வாயிலாக பெற்று, தரமான சேவைகளை வழங்க வகை செய்கின்றன. ஆனால், ஆவடி முதல் தாம்பரம் வரை செயல்படும் நகராட்சிகளில், மக்களுடன் கலந்துரையாடல் செய்வது கிடையாது. அரசால் நியமிக்கப்பட்ட ஆணையரோ, மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.,க்களோ, கவுன்சிலர்களோ, நகர் வலம் வருவது கிடையாது.
அதன் விளைவாக காலி மனைகளில் மக்கள், காலை 11:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை குப்பையையும், மட்கும்குப்பையையும் கொட்டி, கொசு மொய்க்க வைக்கின்றனர். கொசு மருந்து தெளிப்பது, புகை போடுவது கிடையாது.
கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளின் பாதுகாவலர்கள் என்பதையே மறந்து விடுகின்றனர். 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட நகராட்சி நிர்வாகத்தில், விஜிலன்ஸ் அதிகாரிகள் கிடையாது. நகராட்சியிலும், அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது.
கேட்பதை கொடுத்தால் கேட்பது கிடைக்கும். இதுவே நகராட்சிகளின் தாரக மந்திரம். ஆணையர்கள், ஊழியர்கள் அறைக்கு சென்று பைல்களை பார்ப்பது கிடையாது.
நகராட்சிகளிலும், அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் ஒழிய, முதல்வர் அலுவலகங்களிலும் ஒரு விஜிலன்ஸ் ஆபீசரை பி.ஆர்.ஓ.,வாக நியமிக்க வேண்டும். அவரை மட்டுமே மக்கள் சந்திக்க வேண்டும்.
மனுக்களுடன், ஆதார் எண்ணின் நகலையும், கடைசியாக செலுத்தப்பட்ட சொத்து வரி நகலையும் கட்டாயம் இணைக்க வேண்டும். முதல்வர் தனிப்பிரிவு போல் மனுக்களை பெற்று, பதில்களை அனுப்ப வேண்டும். கவுன்சிலர்கள், தத்தம் வார்டுகளை கார்டியன் போல் பராமரிக்க வேண்டும். அவரவர் ரேஷன் கார்டுகளை பெற்று, ஓட்டளிப்பவர்கள் பெயர்களை பதிவு செய்தல் அவசியம்.
எந்த ஒரு கவுன்சிலர், தன் வார்டை நள்ளிரவு 1:00 மணி முதல் 2:00 மணி வரை துாய்மையாக பிரகாசிக்க வைக்கிறாரோ, அவருக்கு ஆண்டுதோறும் 10,000 ரூபாய் வெகுமதி தரலாம்.
குப்பை கொண்ட காலிமனைகள், சிங்கார சென்னைக்கு அழகு சேர்க்காது!
இனி இன்னும் கடுமை காட்டும் தி.மு.க.,
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை என்றாலும், பல தொகுதிகளில், அ.தி.மு.க.,வை பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
மனம் தளராமல், கட்சியை வளர்க்கும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தால், இனிவரும் காலங்களில் தமிழகத்தின் முக்கிய, பெரிய கட்சியாக உருவாக, அதிக இடங்களில் வெல்வதற்கு வாய்ப்புகள், பா.ஜ.,வுக்கு நிச்சயம் கிட்டும்.
நாம் தமிழர் கட்சியை விட, அதிக வாக்கு சதவீதத்தை, பா.ஜ., பெற்றுள்ளது. 'கட்சியைக் கலைத்து விடுவேன்' என்று தான் கூறியதை, சீமான் செய்து காட்டுவார் என்று நம்புவோம்.
அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதத்தைக் கூட்டினால், தி.மு.க.,வை விட அதிகமாக உள்ளது. அந்த இரண்டு கட்சிகளும் கூட்டணியாகப் போட்டி இட்டிருந்தால், தி.மு.க.,வை வென்றிருக்கலாம். அ.தி.மு.க.,வின் நிலை, கவலைக்கிடமானதாக ஆகி இருக்க வேண்டாம்.
தமிழகத்தில் அ.தி.மு.க.,வை விட, கடுமையாக தி.மு.க.,வை எதிர்க்கும் உறுதியான எதிர்க் கட்சி என்கிற நிலையை, பா.ஜ., அடைந்துள்ளது. அதனால், தமிழகத்தில் பா.ஜ.,வை விரட்ட அதி தீவிரமாக முயலும் வீரியத்தை தி.மு.க., காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

