PUBLISHED ON : ஏப் 19, 2026 01:04 AM

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகம் முழுக்க ஒரே ஒரு குற்றச்சாட்டு தான் எங்க அண்ணன் ஸ்டாலின் மீது இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் இருக்கிறது; அதைத் தவிர வேறு எந்த குறையும் இல்லை' என்று கூறியுள்ளார், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலர் பிரேமலதா.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உட்பட பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. அவை கூட்டணி தலைமைக்கு பணிந்தும், அவர்கள் தரும் பணத்திற்கு கட்டுப்பட்டும், மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுப்பதும் இல்லை; அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவதும் இல்லை.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே, பிரேமலதா இப்படி துணிந்து கூறியுள்ளார் என்றால், அவரது துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு சரியில்லை; பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை; போதைப்பொருட்களின் விற்பனை அதிகமாக உள்ளது என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன.
அப்போதெல்லாம், 'இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ளது; கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் தமிழகத்தில் இல்லை' என்று தி.மு.க., அமைச்சர்கள் கூறி வந்தனர்.
ஆனால், தற்போது தி.மு.க.,வின் கூட்டணி கட்சியே, அதே குற்றச்சாட்டை கூறியுள்ளது. இதற்கு முதல்வர் என்ன பதில் கூறுவார்?
அதேநேரம், பிரேமலதா தெரியாமல் பேசினாரா அல்லது அவர்களின் திருமண மண்டபத்தை இடித்ததற்காகவும், தமாஷ் நடிகர் வடிவேலுக்கு பணம் கொடுத்து, 'தண்ணீரில் மிதக்கும் கப்பலை இயக்குபவன் தான் கேப்டன்; எப்போதும் தண்ணியில் மிதப்பவன் கேப்டன் அல்ல' என்று விஜயகாந்தை விமர்சிக்க வைத்து, கருணாநிதியும், ஸ்டாலினும் ரசித்து சிரித்ததற்கு பழி வாங்கினாரா என்றும் தெரியவில்லை.
எது எப்படியோ, முதல்வர் முன்னிலையிலேயே அவரது ஆட்சியின் அவலத்தை பொதுவெளியில் எடுத்துக் கூறிய பிரேமலதாவின் துணிச்சலை பார்த்தாவது, தி.மு.க.,வுக்கு அடிமையாக அடங்கி கிடக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள், வாய் திறக்க வேண்டும்!
lll
நுாற்றாண்டு கண்ட இயக்கமல்ல காங்.,! எஸ்.ஆர்.த்ராவிட், சென்னையில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நுாற்றாண்டு கண்ட அமைப்புகளாக
காங்கிரஸ் கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை குறிப்பிடுகின்றனர்.
உண்மையில், நுாற்றாண்டு கண்ட ஒரே இயக்கம், ஆர்.எஸ்.எஸ்., மட்டும்தான்!
கடந்த 1947ல் காங்கிரசை கலைத்து விட வேண்டும் என்று கூறிய மகாத்மா காந்தி,
'அனைத்து இனங்கள், மதத்தை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக போராடி பெற்றது
சுந்திரம். அதற்கு எந்த ஒரு தனி இயக்கமோ, கட்சியோ, தனிநபரோ உரிமை
கொண்டாடக்கூடாது' என்று தெளிவாக கூறிவிட்டார்.
ஆனாலும், காங்கிரசை
தொடர்ந்து செயல்பட வைத்து, என்னமோ அந்த ஒரு கட்சி மட்டும்தான் நாட்டிற்காக
போராடியது போன்ற பிம்பத்தை கட்டமைத்து விட்டார், மறைந்த முன்னாள் பிரதமர்
நேரு.
அதன்பின், 1969ல் அது, 'இந்திரா காங்கிரஸ்' என்ற பெயரில்
பிரிந்து, குடும்பக் கட்சியாக மாறி விட்டது. எனவே, இந்திரா காங்.,
ஆரம்பித்து, 57 ஆண்டுகள் தான் ஆகிறதே தவிர, நுாற்றாண்டு கண்ட இயக்கமல்ல!
அதேபோன்று, ஆர்.எஸ்.எஸ்.,சை மதம் சார்ந்த அமைப்பிற்குள் அடக்குகின்றனர்.
அந்த இயக்கம், ஹிந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதே தவிர, தேசிய
நலன் மட்டுமே அதன் கொள்கை. அதனால் தான் இன்றளவும் அந்த அமைப்பில் கட்சி,
மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் உறுப்பினராக உள்ளனர்.
கன்னியாகுமரி
மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பிரச்னையின் போது, அப்போதைய
முதல்வர் எம்.ஜி.ஆர்., நடுநிலையோடு நடவடிக்கை எடுத்தார். அதற்கு திராவிடர்
கழக தலைவர் கி.வீரமணி, 'ஆர்.எஸ்.எஸ்., என்ற பாம்பை தமிழகத்திற்கு கொண்டு
வந்து விடாதீர்கள்' என்றார்.
அதை எம்.ஜி.ஆர்., கண்டுகொள்ளாததுடன்,
தன் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் இறைபணியில்
தங்களை இணைத்துக் கொண்ட போது, அதை மவுனமாக அங்கீகரித்தார்.
அதேபோன்று, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்த பிரச்னையில், மறைந்த
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 'அயோத்தியில் ராமர் கோவில் கட்டாமல், அரபு
நாட்டிலா கட்டுவர்' என்று கூறியதுடன், ராமர் கோவில் கட்டுமானத்திற்கு தன்
பங்காக செங்கற்களை அனுப்பி வைத்தார்.
இதில் வேடிக்கை
என்னவென்றால், ராமரை வைத்து பிழைப்பு நடத்திய திராவிடர் கழகத்தில் இருந்து
வந்த தி.மு.க.,வும் நிதி அளித்து, மறைமுகமாக தன் ஆதரவை காட்டியது தான்!
எனவே, நுாற்றாண்டு கண்ட இயக்கத்தில் காங்கிரசை சேர்ப்பது எப்படி தவறோ,
அதேபோல், ஆர்.எஸ்.எஸ்.,சை எதிர்ப்பது போல், இன்று சில கட்சிகள் பேசுவதும்
வெளி வேஷமே!
lll
ஓட்டு போட மனம் வருமா?
எஸ்.ராமையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எங்கள்
வீட்டில் சராசரியாக, ஒரு நாளைக்கு, 8 யூனிட்டுகள் பயன்படுத்துவோம்; இரு
மாதங்களுக்கு, 480 யூனிட்டுகள் வரும். எந்த சூழ்நிலையிலும், 500
யூனிட்டுகளை கடக்க மாட்டோம். 500 யூனிட்டுகளுக்கு நிலைக் கட்டணம் உட்பட பிற
கட்டணமாக, 1,130 ரூபாய் வசூலிப்பர்.
அவ்வகையில், மார்ச், ஏப்ரல் வரை நாங்கள் உபயோகித்த மின் பயன்பாடு, 480 யூனிட்டுகள் மட்டுமே!
அதற்கு நிலைக்கட்டணம் உட்பட மொத்த மின்கட்டணம்,1,100 ரூபாய்க்குள் தான் வரும்.
ஆனால், மின் கணக்கெடுப்பாளர், வழக்கமாக வரும் 13ம் தேதி அன்று கணக்கெடுக்க
வரவில்லை. 14ம் தேதியோ தமிழ் புத்தாண்டு விடுமுறை; அதனால், 15ம் தேதி
வந்து கணக்கெடுத்தார்.
இரண்டு நாட்களில் மின் பயன்பாடு, 27
யூனிட்டுகள் ஆகி, 15ம் தேதி கணக்கெடுப்பாளர் கணக்கெடுக்கும் போது, மீட்டர்
507 யூனிட் காட்டியது.
இந்த, 27 யூனிட் கூடுதல்
மின்பயன்பாட்டிற்கு, மின்வாரியம் தீட்டியுள்ள மின் கட்டணம் எவ்வளவு
தெரியுமா? 2,099 ரூபாய். 500 யூனிட்டுக்கு, 1,130 ரூபாய் பணம் கட்டிய
நிலையில், 507 யூனிட்டுக்கு, 2,099 ரூபாய் கட்டணம் வாங்கியுள்ளனர்.
அதாவது, ஒரு யூனிட்டுக்கு, 138 ரூபாய், 42 காசுகள் வீதம், 7 யூனிட்டுக்கு, 969 ரூபாய் வசூலித்துள்ளனர்.
கணக்கெடுக்க வேண்டிய நாளில் வந்து கணக்கெடுக்காமல் தவறு செய்தது மின் வாரியம்.
மின்வாரியத்தின் தவறுக்கு, நுகர்வோருக்கு அபராதமா?
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதந் தோறும் மின்கட்டணம் கணக்கெடுப்போம்'
என்று வாக்குறுதி வழங்கிவிட்டு, இதுபோன்று நடந்து கொண்டால்,
தி.மு.க.,விற்கு ஓட்டு போட மனம் வருமா?
lll

