/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஆக்கிரமிப்பாளர்களை அசைக்க முடியாது!
/
ஆக்கிரமிப்பாளர்களை அசைக்க முடியாது!
PUBLISHED ON : அக் 10, 2025 12:00 AM

ஆர்.சங்கர் மஹாதேவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை மாநகரம் முழுதும் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளால், நடக்க வழியின்றி, பாதசாரிகள் திணறி வருகின்றனர். இதுவரை, ஆக்கிரமிப்பை வேடிக்கை பார்த்து வந்த மாநகராட்சி, திடீரென விழிப்படைந்து, அவற்றை அகற்ற உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், பகுதி பொறியாளர் களுக்கு உத்தரவிட்டுள்ளது.
காவல் துறையினராலேயே அகற்ற முடியாத ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி பொறியாளர்களால் அகற்றி விட முடியுமா?
ஏனெனில், காவல் துறை யினரின் ஆசீர்வாதத்துடன் தான் ஆக்கிரமிப்புகளே நடைபெறுகிறது.
கந்து வட்டி தொழிலில், நாள், வாரம், மாதம், மீட்டர் வட்டி என்று இருப்பதை போன்று, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பெறப்படும் கப்பமும், தினசரி, வாரம், மாதக் கப்பம் என்று பலவகைகள் உண்டு.
இக்கப்பத் தொகையை வசூலிப்பதற்கென்றே, சென்னையிலுள்ள ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும், மாத சம்பளம் கொடுத்து, அடியாட்களை நியமித்து வைத்திருக்கின்றன.
சாலைகளில் ஊன்றப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற சொல்லி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதை எதிர்த்து, கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றமோ காலக்கெடு வைத்து, கொடிக்கம்பங்களை அகற்றியே ஆக வேண்டும் என்று கறார் காட்டியது.
ஆனாலும், ஏதாவது ஒரு கொடிக் கம்பம் அகற்றப்பட்டுள்ளதா?
நீதிபதிகளால் உத்தரவிடத்தான் முடியும்; கையில் கடப்பாரையை கொண்டு வந்து இடித்து தள்ள முடியாது. அதை, அரசு தான் செய்ய வேண்டும்.
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியிலுள்ள, என்.எஸ்.சி.,போஸ் சாலையில், பந்தர் தெரு துவங்குமிடத்தில், 'நடைபாதைகளில் கடைகள் வைக்கக் கூடாது' என்று, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, உத்தரவு எண்ணோடு எழுதி போர்டு வைத்தது சென்னை மாநராட்சி.
அந்த போர்டுக்கு கீழேயே நடைபாதை கடைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அரசியல்வாதிகள், ஓட்டுக்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவளித்து, மாற்று இடம் கொடுத்து ஊக்குவித்து கொண்டிருக்கும் வரை, உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ ஏன் அந்த ஐ.நா.,சபையே உத்தரவிட்டாலும் கூட, ஆக்கிரமிப் பாளர்களை அசைக்க முடியாது!
இதில், மாநகராட்சி பொறியாளர்களால் என்ன செய்து விட முடியும்?
lll
முதல்வர் உத்தரவிடுவாரா? டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கட்சிக்காரர்கள் மற்றும்
கட்சி அனுதாபிகளின் பெயர்களை அரசு சொத்துகளுக்கு சூட்டுவது வழக்கம்.
அவ்வகையில், சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையை, சி.ஐ.டி., நகர் பிரதான
சாலையுடன் இணைக்கும் வகையில், 165 கோடி ரூபாய் செலவில் புதிதாக
கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு, தி.நகர் தொகுதி முன்னாள் தி.மு.க., -
எம்.எல்.ஏ. நினைவாக, 'ஜெ.அன்பழகன் மேம்பாலம்' என்று பெயர் சூட்டி, பாலத்தை
திறந்து வைத்துள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
'உண்மை தொண்டர்
களுக்கான அங்கீகாரத்தை தி.மு.க., அரசு எப்போதும் கொடுக்கும்; அதற்கு சான்று
தான், அன்பழகன் மேம்பாலம்' என்று ஸ்டாலினை புகழ்ந்துள்ளனர், தி.மு.க.
,வினர்.
தன் கட்சி தொண்டர்களுக்கு அங்கீகாரம் வழங்க
வேண்டுமென்றால், தி.மு.க.,வின் அசையா சொத்துகளுக்கு அவர்களின் பெயரை சூட்டி
கவுரவிக்க வேண்டும்.
அதை விடுத்து, 'ஊரான் வீட்டு நெய்யே; என்
பெண்டாட்டி கையே' என்பது போல், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட
மேம்பாலத்திற்கு முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ., பெயரை சூட்டுவது என்ன
நியாயம்?
இதுபோன்று தான் சென்னை நுங்கம்பாக்கம் காலேஜ் சாலைக்கும், நடிகர் ஜெய்சங்கர் பெயரை சூட்டியுள்ளார், ஸ்டாலின்.
நடிகர் ஜெய்சங்கர் நல்ல நடிகர்; 'கலைமாமணி' விருது உட்பட பல்வேறு
விருதுகளைப் பெற்றவர் தான். ஆனால், கருணாநிதி கையால் தி.மு.க., என்ற
முத்திரையை குத்திக்கொண்ட, அக்கட்சி விசுவாசி.
கடந்த 1977-ல்
எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு வந்தவுடன், நடிகர் ஜெய்சங்கரை கதாநாயகனாக வைத்து,
எம்.ஜி.ஆருக்கு எதிராக பல படங்களுக்கு கதை, வசனம் எழுதினார் கருணாநிதி.
வண்டிக்காரன் மகன் என்ற திரைப்படத்தில், கையில் தி.மு.க., கொடியை கட்டிக் கொண்டு அக்கட்சி கொள்கையை முழங்கினார், ஜெய்சங்கர்.
அந்த விசுவாசத்திற்கு தான், நுாற்றாண்டுக்கும் மேலாக புகழ்பெற்று வரும்
மகளிர் கிறிஸ்துவ காலேஜ் சாலைக்கு, 'ஜெய்சங்கர் சாலை' என பெயர் சூட்டி
மகிழ்ந்துள்ளார், ஸ்டாலின்.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, வரலாற்று சிறப்புமிக்க தலைவர்களின் பெயர்களையே சாலைகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்.
ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலைக்கு, அவ்வை சண்முகம் சாலை எனவும், மவ் பேரிஸ்
சாலைக்கு, டி.டி.கிருஷ்ணமாச்சாரி சாலை எனவும் பெயர் சூட்டினார்.
அதேபோன்று, சென்னை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள கதிட்ரல் சர்ச் நினைவாக,
மெரினா கடற்கரை வரை இருந்த கதிட்ரல் சாலைக்கு, இந்தியாவின் இரண்டாவது
ஜனாதிபதியான டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரை சூட்ட உத்தரவிட்டார்,
எம்.ஜி.ஆர்.,
அதை எதிர்த்த சர்ச் பாதிரியார்கள், எம்.ஜி.ஆரை
சந்தித்து, 'மிகவும் பழமை வாய்ந்த சர்ச் நினைவாக இச்சாலை உள்ளது; இதை
மாற்றக்கூடாது' என கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் நியாயமான
கோரிக்கையை ஏற்று, மேம்பாலம் முதல் மியூசியம் அகாடமி வரை, 'கதிட்ரல் சாலை'
எனவும், அதற்கு மேல் மெரினா கடற்கரை வரை, 'டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை'
எனவும் மாற்றி உத்தரவிட்டார்.
அதுபோன்று காலேஜ் இருக்கும்
சாலைக்கு, 'காலேஜ் சாலை' எனவும், அதற்கு மேல் ஜெய்சங்கர் வீடு இருக்கும்
பகுதிக்கு, 'ஜெய்சங்கர் லேன்' எனவும் மாற்றியமைக்கலாம் அல்லவா?
முதல்வர் உத்தர விடுவரா?
lll