PUBLISHED ON : ஜன 22, 2026 03:59 AM

கு.அருணாசலம்,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய அரசியல் தேர்தல்
வரலாற்றில், எந்தவொரு அரசியல் கட்சியும், தொடர்ந்து அரியணையில் அமர்ந்து
விட முடியாது என்பது தான் உண்மை.
அந்த வகையில், ஒரு காலத்தில்
மேற்கு வங்கத்தில் கொடிகட்டிப் பறந்த இடது சாரி கட்சிகள், ஒடிஷாவில் பிஜு
ஜனதா தளம் போன்ற கட்சிகள், தொடர்ந்து பல முறை ஆட்சியில் இருந்த போதும்,
அவையும் நாளடைவில் தேர்தலில் தோல்வி அடைந்ததைப் பார்த்தோம்.
பீஹாரில் லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளம், திரிபுராவில் ஒரு காலத்தில்
தொடர்ச்சி யாக வெற்றி பெற்று வந்த இடதுசாரிகள் என, பல கட்சிகளின்
தோல்விகளை, கூடுதல் உதாரணங்களாகச் சொல்லலாம்.
கடந்த, 1980களில்,
பா.ஜ., கட்சி துவக்கப் பட்டபோது, லோக்சபா தேர்தலில் ஒன்றிரண்டு தொகுதிகளில்
மட்டுமே வெற்றி பெற்று வந்தது. சமீபத்திய, பத்தாண்டுகளில், அதாவது, 2014 -
2024 கால கட்டத்தில் தொடர்ந்து இரண்டு முறை தனி மெஜாரிட்டி யுடன்
மத்தியில் ஆட்சி அமைத்தது. 2024 தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை
என்றாலும், கூட்டணிகளின் ஆதரவுடன், மூன்றாவது முறையாக மத்திய ஆட்சியைக்
கைப்பற்றியுள்ளது.
என்ன தான் சிறப்பாக ஆட்சி செய்தாலும், நம்
வாக்காளர்கள், ஆட்சியாளர்களை அவ்வப்போது மாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்;
அது நல்ல பழக்கம் தான்!
ஏனெனில், தொடர்ந்து ஒரு கட்சிக்கு ஆட்சி
அதிகாரம் வழங்கும் போது, அந்த கட்சிக்கு, 'எனக்கு ஒப்பார் யாருமில்லை' என்ற
மமதை ஏற்பட்டு விடும்; அதுவே சர்வாதிகார முடிவுகளை எடுக்க வைத்து விடும்.
அந்த வகையில் சமீபத்தில், கேரளாவில் நடந்த மாநகராட்சி தேர்தலில், யாரும்
எதிர்பார்க்காத வகையில், திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றி
உள்ளது. அந்த மாநிலத்தை பன்னெடுங்காலமாக ஆண்டு வரும் இடதுசாரிகளுக்கும்,
காங்கிரசுக்கும், பா.ஜ.,வின் வெற்றி மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி
விட்டது.
அதே போல், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகராட்சியில்,
தொடர்ந்து 28 ஆண்டுகளாக கோலோச்சி வந்த தாக்கரே குடும்பத்தினரை துாள்
துாளாக்கி, பா.ஜ.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி வாகை சூடி விட்டன.
மேலும், 207 நகராட்சிகளையும், பா.ஜ., கைப்பற்றியுள்ளது.
எந்தவொரு
அரசியல் கட்சியும், மொழியை மையப்படுத்தி மக்களிடம் பிரிவினையை
ஏற்படுத்தினால், அவற்றின் கதி இப்படி தான் முடியும் என்பதற்கு, மஹாராஷ்டிரா
மிகச் சிறந்த உதாரணம்.
தமிழகத்திலும், மொழியை வைத்து நடந்த
அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகி விட்டனர் என்பதற்கு
முன்னோட்டமாக, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட,
பராசக்தி திரைப்படம் பெரும் தோல்வி கண்டுவிட்டது; இதுவே, ஹிந்தி
எதிர்ப்புக்கு குரல் கொடுத்து வரும் கட்சிகளுக்கு பெரிய சாட்டையடி.
சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி!
கோட்டை விட்டுவிட்டீரே பழனிசாமி!
கே.ரங்கராஜன், சென்னையில் இ ருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அவர்களுக்கு...
தி.மு.க.,வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பது, எல்லாருக்குமான ஆசை தான்; நீங்கள், ஆட்சியில் அமர ஆசைப்படுகிறீர்கள்... அதுவும் சரி தான்!
ஆனால், அரசு கஜானாவின் நிலை என்ன என்பது தெரிந்தே நீங்கள், தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்கிறீர்கள் பாருங்கள்... அதைத் தான் சகிக்கவே முடியவில்லை.
நம் மாநில மக்களுக்கு இப்போதைய அவசிய தேவை, போதை நீங்கிய, பாதுகாப்பான, நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையே தவிர, இலவசங்கள் அல்ல.
இம்முறை, கட்சியையும், உங்களையும் காப்பாற்றிக் கொள்ள, புத்திசாலித்தனமாய், மாற்றி யோசித்து அறிக்கை வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்த்தோம்; முற்றிலும் கோணலாய் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறீர்கள்.
*ஏழை மக்களுக்கு பணம் தேவை தான்; இல்லையென்று சொல்ல வில்லை. அதேநேரம், அந்த ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, அவரவர் தகுதிக்கேற்ப, வேலை கொடுப்பதாக உறுதி அளிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம்; நடக்கவில்லை
* போதை, டாஸ்மாக் கலாசாரத்திற்குள் தள்ளப்பட்டுள்ள இளைஞர்களை, அதிலிருந்து மீட்டெடுக்க, இரும்புக் கரம் கொண்டு, காவல் துறையை முடுக்கி விடும் வரைவறிக்கையை வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்த்தோம்; நடக்கவில்லை
*பொதுமக்கள், பெண்க ளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி விட்ட இந்நேரத்தில், உங்கள் தலைவியும், முன்னாள் முதல்வருமான ஜெய லலிதா, ரவுடிகளை எப்படி இரும்புக் கரம் கொண்டு அடக்கினாரோ, அது போல செயல்பட்டு, மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்துவதாக அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம்; நடக்கவில்லை
* பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தால், நஷ்டத்தில் இருக்கும் அரசைப் பார்த்தாவது, ஆண்களுக்கான இலவச பேருந்து பயண அறிவிப்பை நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டாம்; மாறாக, தேவைப்படும் இடங்களுக்கெல்லாம், சரியான நேரத்தில், மினி பஸ் இயக்குவதாக அறிவித்திருக்கலாம்
* எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தின் வருவாயைப் பெருக்கி, டாஸ்மாக்கை ஒழிக்க, சிறப்பான திட்டம் வைத்திருப்பதாக அறிவித்திருக்கலாம்; அப்படி அறிவித்திருந்தால், மகளிர் அனைவரும் உங்களுக்கு தான் ஓட்டு போடுவர். கோட்டை விட்டுவிட்டீர்கள் பழனிசாமி!
மீதமான வேட்டி - சேலைகள் எங்கே?
டாக்டர் பொன்னு சேதுராஜ், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பொங்கலுக்கு இலவச வேட்டி - சேலை வழங்கப் போகிறோம். இந்த டிசம்பருக்குள், பொங்கல் தொகுப்பு உட்பட அனைத்தையும் கொடுத்து விடுவோம்' என்றது தமிழக அரசு.
ஆனால், நடந்ததோ தலைகீழ்!
ரேஷன் கடைக்கு சென்று, இலவச வேட்டி - சேலை கேட்டால், கடை ஊழியர்கள், 'இருப்பதைக் கொடுங்கள் என கலெக்டர் சொல்லி விட்டார்' என்றும், 'தாசில்தார் ஆபீஸ்லேர்ந்து கொஞ்சம் தான் கொடுத்தனர்' என்றும், விதவிதமான மழுப்பல் பதில்களை, நேரத்திற்குத் தகுந்தாற்போல் கூறினர்.
அப்படியெனில், அனைத்து ரேஷன் கடை களுக்கும், அரசு அறிவித்த பொருட்கள் எதுவும், போதுமான அளவு வந்து சேரவில்லையா?
தமிழக அரசு, '1.77 கோடி வேட்டி - 1.77 கோடி சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன' எனக் கூறியது. 1.55 கோடி தான் வினியோகம் ஆகி இருக்கிறது. மீதமெல்லாம் எங்கே? யார் பதில் சொல்லப் போகின்றனர்?

