தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ அக்கறையின் ரகசியம்!

அக்கறையின் ரகசியம்!

அக்கறையின் ரகசியம்!


PUBLISHED ON : மார் 21, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.சரத்சந்திரர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை நாட்களின் எண்ணிக்கையை, 100லிருந்து, 150 நாட்களாக அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்திற்கு போதுமான நிதியை ஒதுக்கி, குறைந்தபட்ச ஊதியமாக, 400 ரூபாய் வழங்க வேண்டும்' என கோரியுள்ளார், காங்கிரஸ் எம்.பி., சோனியா.

காங்., ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது தான், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்.

பிரதமர் மோடி பதவியேற்பதற்கு முன்வரை, இந்நாடு, காங்., கட்சியின் பிடியிலும், சோனியாவின் கண்ணசைவிலும் தான் இயங்கிக் கொண்டிருந்தது. 10 ஆண்டுகள் இவர்கள் ஆட்சியில் இருந்தபோது, இத்திட்டத்தின் வேலை நாட்களையும், கூலியையும் உயர்த்த வேண்டும் என்பது சோனியாவின் நினைவுக்கு வரவில்லை.

இத்திட்டத்தின் கீழ் பணிபுரிவோர் ஓர் ஆண்டில், 100 அல்லது 150 நாட்கள் மட்டும் உணவு உண்டால் போதுமா?

வார நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் நீங்கலாக ஆண்டொன்றுக்கு, 261 நாட்கள் அல்லது, 262 நாட்கள் பணி வழங்கி இருக்கலாம்; அத்துடன், குறைந்தபட்ச ஊதியத்தை, 500 ரூபாயாகவும் உயர்த்தி இருக்கலாமே... ஏன் செய்யவில்லை?

அரசியல்வாதிகளுக்கு எப்போதுமே, நாட்டு மக்களைப் பற்றிய கவலையானது, ஆட்சியில் அமர்ந்து இருக்கும் போது வராது. பதவி பறிபோன பின்தான் பீறிட்டுக் கொண்டு கிளம்பும்!

அதன்படி சோனியாவுக்கு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமும், அதில் பணிபுரிவோர் மற்றும் அவர்கள் பெறும் ஊதியம் பற்றிய கவலையும், அக்கறையும் இப்போது வந்திருக்கிறது!



விட்டுக் கொடுத்தால் வெற்றி!


ஸ்ரீராம் விஷ்ணு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., கூட்டணியில் இருப்பதால், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கவில்லை. இதுவே, அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் என, அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி, பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

அதைத் தொடர்ந்து, 'நாங்கள் சிறுபான்மையினர் ஆதரவாளர்கள்' எனக் கூறி, சில இஸ்லாமிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து, பார்லிமென்ட் தேர்தலை சந்தித்தார். அதில், மிக மோசமான தோல்வியை சந்தித்தது, அ.தி.மு.க.,!

உண்மையில், சிறுபான்மையினர் தி.மு.க.,வையும், காங்கிரசையும் ஏற்றுக் கொள்வரே தவிர, அ.தி.மு.க.,வை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஒன்று தான்!

அதேநேரம், சிறுபான்மையினர் ஓட்டுகள் தான், தி.மு.க.,வின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சொல்ல முடியாது. காரணம், தொடர்ச்சியாக தி.மு.க., வென்ற சரித்திரமே இல்லை. அப்படியெனில், அவர்களது வெற்றி - தோல்வியை தீர்மானிப்பது யார்?

பெரும்பான்மையினரான ஹிந்துகள்!

தமிழகத்திற்கு மட்டும் இல்லை; இந்தியாவிற்கே இது பொருந்தும். நாடெங்கும் சிறுபான்மையினர் ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கிறது என்றால், தொடர்ந்து, பா.ஜ., வெற்றி பெற்றிருக்க முடியாது. இதை, அ.தி.மு.க., புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தனக்கான ஓட்டு வங்கி என்னவென்றே தெரியாத விஜய் கூட, அ.தி.மு.க.,வை அலட்சியப்படுத்துகிறார் என்றால்... பழனிசாமி யோசிக்க வேண்டும். இதேநிலை தொடர்ந்தால், தொண்டர்கள் சோர்ந்து விடுவர்.

காரியம் பெரிதா, வீரியம் பெரிதா என்று வரும் போது, காரியத்தை தேர்ந்தெடுப்பவன் தான் புத்திசாலி.

அதனால், அ.தி.மு.க.,விலிருந்து பிரிந்து சென்றுள்ள பன்னீர்செல்வம் போன்றவர்களை இணைத்து, பிரச்னைகளை சுமுகமாக தீர்த்து, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் வெற்றி பெற முடியாது.

பா.ஜ., - அ.தி.மு.க., இரு கட்சிக்கும் பொது எதிரி, தி.மு.க.,!

எதிரியை வெல்ல, இரு கட்சிகளுமே விட்டுக் கொடுத்தால் வெற்றியை அறுவடை செய்யலாம்!



தமிழுக்கு ஏன் இந்த நிலைமை?


எம்.கலைவாணி, அருப்புக் கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று பூச்சாண்டி காட்டி, தமிழும் படிக்கவிடாமல், பிற மொழிகளையும் கற்கவிடாமல் தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறது திராவிட மாடல் அரசு.

அரசுப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றிருந்த ஓர் அமைச்சர், அங்குள்ள கரும்பலகையில், 'வாழ்த்துக்கள்' என்று எழுவதற்குப் பதில், 'வாழ்துக்கள்' என்று எழுதி அசிங்கப்பட்டார்.

துணை முதல்வர் உதயநிதியோ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் இணைந்து கொடுத்த பேட்டியில், புற்றுநோய்க் கட்டிகள் என்று வாசிப்பதற்கு பதில், புற்றுநோய்க் கட்டிடங்கள் என்று வாசித்ததைப் பார்த்தபோது, தலையில் அடித்துக் கொள்ளத்தான் தோன்றியது.

முதல்வர் குடும்பத்தார் நடத்தும் பள்ளிகளில், தமிழில் பேசினாலே அபராதம் விதிக்கப்படுகிறதாம்.

தமிழைக் காக்க உயிரையும் கொடுப்போம் என்று உதார் விடும் இவர்கள் நடத்தும் பள்ளியின் பெயர், 'சன் ஷைன்' ஸ்கூல், சினிமா கம்பெனியின் பெயரோ ரெட் ெஜயன்ட் மூவீஸ், தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயர், சன் டிவி!

இந்தப் பெயர்களில் மருந்துக்குக்கூட தமிழ் வார்த்தை இல்லை. இவர்களா தமிழைக் காப்பர்?

தமிழாய்ந்த நல்லோர் நுாற்றுக்கணக்கில் இருக்கும்போது, ரஷ்ய நாட்டு சர்வாதிகாரியின் பெயரை, கருணாநிதி தன் மகனுக்கு சூட்டியது ஏன்?

ஒற்றெழுத்து கொண்டு சொற்கள் துவங்குவது தமிழ் மரபுக்கு எதிரானது என்று தெரிந்தும், ஸ்டாலின் என்று பெயரிட்டது ஏன்?

பச்சைத் தமிழரான உதயகுமார் வடிவமைத்த ரூபாயை குறிக்கும் குறியீட்டு அடையாளத்தை துாக்கி எறிந்துவிட்டு, மனச்சாட்சியே இல்லாமல், பட்ஜெட் அறிக்கையால், 'பட்ஜெட்டும், தமிழும், 'ஹிட்' ஆகிவிட்டது' என்று பெருமிதம் கொள்கிறார் முதல்வர்.

'ஹிட்' என்ற ஆங்கில வார்த்தைக்கு, 'தாக்குதல்' என்ற அர்த்தமும் இருப்பது முதல்வருக்கு தெரியாது போலும்!

தமிழன்னை திராவிட மாடல் ஆட்சியாளர்களிடம் சிக்கி தாக்குதலுக்கு ஆளாகி வருகிறாள் என்பதே உண்மை!

தமிழால் இவர்கள் வளர்ந்தனரே தவிர, தமிழை இவர்கள் ஒருபோதும் வளர்க்கவில்லை.இனியும் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடர்ந்தால், சன் ஷைன் போன்ற பள்ளிகள்தான் வளர்ச்சி அடையுமே தவிர, தமிழ் வளராது!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us