PUBLISHED ON : பிப் 23, 2026 01:25 AM

மாறுவது மாற்றம் அல்ல; வாக்குறுதிகள்!
ரஞ்சித் குமார், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை ஐந்து முறை ஓட்டளித்துள்ளேன். வரவிருக்கும் தேர்தலில் ஆறாவது முறையாகவும் ஓட்டளிக்க உள்ளேன்.
ஒவ்வொரு முறையும், 'இந்த முறை மாற்றம் இருக்கும்' என்ற நம்பிக்கையுடன் தான் ஓட்டளித்துள்ளேன். ஆனால், கடந்து போன காலங்களை திரும்பிப் பார்க்கும்போது ஏமாற்றங்களே மிஞ்சுகின்றன.
தமிழகத்தை அதிக காலங்கள், தி.மு.க., - அ.தி.மு.க., என மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. ஆனால், ஒரு சாதாரண குடிமகனின் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது?
போக்குவரத்து... அது தினசரிபோராட்டம் தான்!
எப்போதும் போல் பேருந்துகள் சரியான நிறுத்தங்களில் நிறுத்தப்படுவதில்லை; மழை பெய்தால் ஒழுகும் பேருந்துகள்... குண்டும் குழியுமான சாலைகள்!
அதேபோன்று குடிநீர்...
அனைத்து உயிர்களுக்குமான அடிப்படை தேவையே குடிநீர் தான்; ஆனால், இங்கோ சுத்தமான குடிநீர் என்பது இன்னும் பலருக்கு கனவாகவே உள்ளது.
திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்காக கோடிக்கணக்கான பணமும் செலவிடப்படுகிறது. ஆனாலும் மக்கள் தங்கள் தாகம் தணிக்க, பணம் செலவழித்து பாட்டில் நீர் வாங்கி பருக வேண்டியுள்ளது.
மழை நீரை சேமிக்க போதுமான நீர்நிலைகள் இல்லை. இருக்கும் ஏரி, குளம், குட்டை, கண்மாய்களை துார் வாரி நீர் சேமிக்கப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை.
விளைவு... சிறு மழை பெய்தாலே வீடுகள் நீரில் மூழ்குகின்றன. வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு படகில் போய் பால், பிஸ்கெட் பாக்கெட் கொடுத்து, அதை புகைப்படமும் எடுத்து விளம்பரம் தேடிக் கொள்கின்றனர், அரசியல்வாதிகள்!
இதுதானே, 50 ஆண்டுகளாக இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் நடந்துள்ளது; நடந்து வருகிறது.
மாற்றம் எங்கே நிகழ்ந்துள்ளது?
இதில், மாணவர்களின் கல்வியிலும் அரசியல். கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதில் என்ன குடி முழுகிப் போய்விடப் போகிறது?
கேரளாவில் ஹிந்தி கற்கின்றனர்; அங்கு மலையாளம் அழிந்து போனதா என்ன?
தமிழ் வழியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களில் எத்தனை சதவீதம் பேர், தமிழை பிழையின்றி எழுதுகின்றனர்?
ஆக, இங்கு தமிழ் என்பது வெறும் அரசியலுக்கு மட்டுமே முன்னிறுத்தப்படுகிறதே தவிர, மொழியின் மீதும் அக்கறையில்லை; மாணவர்களின் கல்வித் திறனிலும் அக்கறையில்லை!
சரி, மக்களின் வாழ்க்கை தரத்திலாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்றால், இலவசமே வளர்ச்சிக்கான சொல்லாக இருக்கும்போது, வாழ்க்கை தரத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும்?
மாற்றம் ஒன்றே மாறாதது என்பர். இங்கு மாறாமல் இருப்பது அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் தானே தவிர, மக்களுக்கான மாற்றம் அல்ல! lll
ராகுல் பாடம் கற்க வேண்டும்! வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஐரோப்பிய யூனியனுடன் செய்து கொண்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு மேலும் உறுதுணையாக இருக்கும்.
இதுபோன்ற ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வர்த்தக ஒப்பந்தங்கள், காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டதில்லை.
நாட்டுப் பற்று மிகுந்த தலைவராக இருந்திருந்தால், இதை லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பாராட்டியிருப்பார்.
ஆனால், ராகுலோ, நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கூட, அந்நிய நாடுகள் கேலி செய்யும் விதமாக கேள்வி எழுப்புவதும், வெளிநாடுகளுக்கு சென்று, நம் நாடு குறித்து அவதுாறு பேசுவதும், தேச விரோத சக்திகளுடன் கைகோர்த்து, ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, பார்லிமென்ட் செயல்பாடுகளை முடக்குவதையும் முழுநேர வேலையாக வைத்துள்ளார்.
தற்போது, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு தெளிவாக விளக்கம் அளித்தும், அமெரிக்காவிடம் மோடி அடிபணிந்து விட்டார் என்கிறார், ராகுல்.
எப்போதும் குற்றம் குறை சொல்வது மட்டும் எதிர்க்கட்சியினர் வேலை அல்ல; அரசு நல்ல விஷயத்தை செய்தால், அதை பாராட்டலாம்; நாடு சிக்கலை எதிர்கொண்டால் ஆலோசனை கூறலாம்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம், காங்., - எம்.பி., சசிதரூர்.
நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அத்திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்று பேசுகிறார். தவறுகள் இருந்தால், அதை சுட்டிக் காட்டவும் தயங்குவதில்லை.
'தேச நலனே எனக்கு முக்கியம்; அதன்பின்தான் கட்சி' என்று துணிந்து கூறுகிறார். ராகுல் இவரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்!
சிங்கம், 'சிங்கிளாக' புறப்பட்டு விட்டது! வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ------------மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த மே.வங்கத்தை, இன்று திரிணமுல் காங்., கட்சியின் கோட்டையாக்கி உள்ளார், அக்கட்சி தலைவி மம்தா.
முள்ளை முள்ளால் எடுப்பது போல், காம்ரேடுகளின் பாணியில் சென்று ஆட்சியை கைப்பற்றி, அதை தொடர்ந்து, 15 ஆண்டுகளாக தக்க வைத்துள்ளார், மம்தா.
தற்போது, மம்தாவின் பாணியை கடைப்பிடிக்க நினைக்கின்றனர், அம்மாநில காங்கிரசார்.
கடந்த 2011, 2016, 2021 சட்டசபை தேர்தல்களில், சி.பி.எம்., உடன் கூட்டணி வைத்து படுதோல்வி அடைந்தது, காங்கிரஸ்.
தொடர் தோல்விகளால் துவண்டு போன அம்மாநில காங்கிரசாருக்கு, சமீபத்தில் தெலுங்கானாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்., பெற்ற வெற்றி உற்சாகத்தை ஊட்டியுள்ளதால், மே.வங்கத்திலும் கட்சியை வளர்க்க வேண்டும் என்றால், தனித்து போட்டியிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இதுகுறித்து, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல், பிரியங்கா ஆகியோரை சந்தித்து விளக்கியுள்ளனர், மே.வங்க காங்., தலைவர்கள்.
வரும் 2030 பார்லிமென்ட் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தி விட்டால், கணிசமான எம்.பி.,க்களை பெறலாம்; கூட்டணி பேரத்தை அதிகரிக்கலாம் என்பது அவர்களது கணக்கு.
அதுசரி... அம்மாநிலத்தில் இழப்பதற்கு காங்.,கிற்கு ஒன்றும் இல்லை; அதனால், துணிச்சலாக களத்தில் இறங்க துணிந்து விட்டனர் போலும்!
சிங்கம், 'சிங்கிளாக' புறப்பட்டு விட்டது; பார்ப்போம்... வரும் சட்டசபை தேர்தலில் எவ்வளவு ஓட்டுகள் வாங்குகிறது என்று!

