PUBLISHED ON : மார் 03, 2026 01:11 AM

எண்ணிப் பாருங்கள் பெண்களே!
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: -தி.மு.க., அரசு மகளிர் ஓட்டுகளை கவர்வதற்காக, திடீரென, 5,000 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது. இதைப் பார்த்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'அ.தி.மு.க., வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும், 10,000 ரூபாய் வழங்கப்படும்' என்று அறிவிக்கிறார்.
அதேபோன்று, தி.மு.க., அரசு மகளிருக்கு மாநகரப் பேருந்தில் இலவசப் பயணத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்குப் போட்டியாக, 'ஆண்களுக்கும் இலவச பயணத்தை வழங்குவோம்' என்று அறிவிக்கிறார், பழனிசாமி.
தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, கண்ணை மூடி மாறி மாறி இரு கட்சிகளும் இலவச அறிவிப்புகளை அள்ளி வீசுவது, கேலிக் கூத்தாக உள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தி.மு.க., அரசு, ௫ லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும், தற்போது, தமிழகத்தின் மொத்த கடன் சுமை, 10 லட்சம் கோடி ரூபாய் என்றும், 'தமிழக மக்கள் தலையில் கடன் சுமையை, தி.மு.க., சுமத்தி விட்டது' என்று கூறி வரும் பழனிசாமி, தானும் இலவசங்களை வழங்கினால், கடன் சுமை கூடாதா என்று ஏன் சிந்திப் பதில்லை?
பெண்களுக்கு வழங்கும் உரிமைத் தொகையில் பாதிக்கு மேல் டாஸ்மாக் வாயிலாக அரசுக்கே திரும்பி விடுகிறது. மதுக்கடைகளை திறந்ததின் வாயிலாக, ஒவ்வொரு குடும்பத்திலும், 'குடி'மகன் களைத் தான் அரசு உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் பெண்கள் வாழ்வு எப்படி முன்னேறும்?
பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், 'நான் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக மதுக்கடைகளை மூடுவேன்' என்று, தேர்தல் வாக்குறுதி அளித்து, அதை நிறைவேற்றியும் காட்டினார். வருவாய் இழப்பு குறித்து அவர் சிறிதும் கவலைப்படவில்லை. அந்த துணிச்சல் ஏன் திராவிட கட்சிகளுக்கு இல்லை?
மதுக்கடைகளை மூடியதால் பீஹாரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறதா என்ன?
மதுவால் அரசுக்கு கிடைக்கும் வருவாயை வைத்து ஆட்சி நடத்துவது பாவம் என்றும், அது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் நினைத்தார், நிதிஷ்குமார்.
ஆனால், இங்கோ மது ஆலைகளை நடத்துவோர் இரு திராவிடக் கட்சிகளின் வாரிசுகளும், பினாமிகளும் என்பதால், குடியால் எந்தக் குடும்பம் கெட்டால் நமக்கென்ன, நமக்குத் தேவை வருவாய் என்ற எண்ணத்தில் இரு கழகங்களும் செயல் படுகின்றன.
மதுக்கடைகளை மூடியதால், கடந்த ஐந்தாண்டுகளாக பீஹார் குடும்ப பெண்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்.
அதுபோன்ற நிலைமை தமிழகத்திலும் ஏற்பட வேண்டும் என்றால், இலவசத்திற்கு மயங்காமல், மதுவிலக்கை அமல்படுத்தும் கட்சிக்கே ஓட்டு என்பதில் பெண்கள் தெளிவாக இருக்க வேண்டும்!
கைதேர்ந்த அரசியல்வாதி பிரேமலதா! ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் ஊழல் ஆட்சிக்கும், குடும்ப அரசியலுக்கும் முடிவுகட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக துவங்கப்பட்ட கட்சிகள்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் மக்கள் நீதி மய்யம்!
நாளடைவில் இம்மூன்று கட்சிகளும், தங்களால் ஊழல் கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட தி.மு.க.,வின் தோழமைக் கட்சிகளாக மாறிவிட்டன.
தி.மு.க.,விற்கு எதிராக வீறுகொண்டு எழுந்த அக்கட்சி தலைவர்களான வைகோ, பிரேமலதா, கமல்ஹாசன் ஆகிய மூன்று சிங்கங்களும், இன்று வாலை சுருட்டி, தி.மு.க., எனும் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றன.
எதிரியை எதிர்கொள்வதைவிட, அவரது வாயை அடைத்து, தன்வசப்படுத்திக் கொள்வதுதான் கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம்.
அதை இம்மி பிசகாமல் சிறப்பாக செய்து வருகிறார், அவரது புதல்வர் ஸ்டாலின். தி.மு.க.,வை இழிவுபடுத்தி பேசியதில் வைகோவையும், பிரேமலதாவையும் மிஞ்சியவர் எவரும் இல்லை.
அது தெரிந்தும் தன்னை எதிர்த்த சிங்கங்களை சாதுர்யமாக சமாளித்து, தான் ஒரு சிறந்த, 'ரிங் மாஸ்டர்' என்பதை நிரூபித்திருக்கும் தி.மு.க., தலைமையை பாராட்டியே தீரவேண்டும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோதெல்லாம், நல்ல வளம் கொழிக்கும் அமைச்சர் பதவிகளை அனுபவித்துவிட்டு, தமிழகத்தில் காங்., வெற்றி பெறுவதே, தி.மு.க.,வினர் சிந்தும் ரத்தத்தால்தான் என்று பேசியுள்ளார், ஸ்டாலின்.
ஒரு தேசிய கட்சியையே தங்களுக்கு ஊறுகாயாகப் பயன்படுத்தி வரும் தி.மு.க., மக்கள் செல்வாக்கு இல்லாத வைகோ, கமல்ஹாசன், பிரேமலதா போன்றோரை அடிபணிய வைத்ததில், வியப்பேதும் இல்லை.
ஆட்சியில் பங்கு என்று துள்ளிக்கொண்டிருக்கும் காங்கிரசும், கடைசி நேரத்தில் சரணடைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
நடிகர் விஜயகாந்தை மட்டுமே நம்பி களம் இறங்கிய லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு, தன் குடும்ப நன்மைக்காக ஒரு, 'பக்கா' அரசியல்வாதியாக மாறிவிட்டார், தே.மு.தி.க., தலைவி பிரேமலதா.
இனி இறுதிவரை, தி.மு.க.,வின் தோழமைக்கட்சியாக, ஒரு எம்.பி., நான்கைந்து எம்.எல்.ஏ.,க்களுடன் தமிழக அரசியலில் பிரேமலதா தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளலாம்.
தமிழகத்தின் அரசியல் சூழலையும், தமிழக வாக்காளர்களின் மனநிலையையும் நன்றாகப் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமான முடிவெடுத்திருக்கும் விஜயகாந்த் எனும் நேர்மையாளரின் மனைவி, தன் கணவரைவிட கைதேர்ந்த அரசியல்வாதியாகி விட்டார்.
இனி என்ன... அவரது காட்டில் என்றும் பண மழைதான்!
வேண்டாம் இலவசம்! ஜெ.ஜெரால்டு மனோகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இலவசங்கள் வேண்டாம்' என்று பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார், ஒருவர். அவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'தேர்தலுக்கு பின் விசாரணை நடக்கும்' என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் முடிந்த பின்போ, 'அது அரசின் கொள்கை முடிவு' என்று அவ்வழக்கை தள்ளுபடி செய்து விடும் நீதிமன்றம்.
மாநிலத்தின் கடன் சுமைகள் குறித்து கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல், நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும், ஓட்டு வாங்க இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர், அரசியல்வாதிகள்.
இவர்களை கட்டு படுத்த முடியாத காரணத்தால், மக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
எனவே, நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் வைத்து, கல்வி, மருத்துவம் தவிர இலவசம் என்று எதையும் அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் வழங்க கூடாது என்று, தேர்தலுக்கு முன்பே நீதிபதிகள் தீர்ப்பளிக்க வேண்டும்!

