தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ சூட்சுமத்தை புரிந்து கொள்ளுங்கள்!

சூட்சுமத்தை புரிந்து கொள்ளுங்கள்!

சூட்சுமத்தை புரிந்து கொள்ளுங்கள்!


PUBLISHED ON : ஜூன் 28, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.சுப்பையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., அண்ணாதுரையை விமர்சித்து வீடியோ வெளியிட்டதற்கு, தி.மு.க., -- ம.தி.மு.க., கட்சிகள் மட்டுமல்லாது, அ.தி.மு.க.,வும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்ற அண்ணாதுரையின் கூற்றுப்படி, அன்பான அழைப்பை ஏற்று, முருக பக்தர்கள் என்ற முறையிலும், மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையிலும் கலந்து கொண்டோம். ஆனால், அங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோவில், ஈ.வெ.ரா., அண்ணாதுரை குறித்து அவதுாறு பரப்பப்பட்டதாக இப்போது செய்திகள் வருகின்றன.

'அ.தி.மு.க.,வை பொறுத்தவரை ஒரு நாளும் கொள்கை, கோட்பாடுகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்...' என புலம்பியுள்ளார் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்.

அதுசரி... அ.தி.மு.க.,வின் கொள்கை என்ன?

கட்சி துவங்கிய காலத்தில் எம்.ஜி.ஆர்., எடுத்து விட்டாரே அண்ணாயிசம்... அதுவா அ.தி.மு.க.,வின் கொள்கை?

அண்ணாதுரை ஆரம்பித்த தி.மு.க., விலேயே அவரது கொள்கை கடைப்பிடிக்கப்படுவது இல்லை. இதில், அ.தி.மு.க., எந்த கொள்கையை துாக்கிப்பிடிக்க துடிக்கிறது?

ஈ.வெ.ரா.,வை ஏளனம் செய்து, எள்ளி நகையாடி குதுாகலித்தவர்கள், தி.மு.க., வினர். ஏன்... அக்கட்சி ஆரம்பித்ததே, ஈ.வெ.ரா.,வை எதிர்த்துத்தான்!

இதையெல்லாம் மறந்து, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை பிரிக்க பகீரத பிரயத்னம் செய்து கொண்டிருக்கும் தி.மு.க.,வின் சூழ்ச்சி புரியாமல் கொள்கை, கொத்தவரங்காய் என்று அறிக்கை விட்டு கொண்டிருக்கின்றனர், அ.தி.மு.க.,வினர்!

எதிரியின் சூட்சுமத்தை புரிந்து கொள்ள முடியாதவனுக்கு, வெற்றி என்பது எட்டாக்கனி.

இது போர்க்களத்திற்கு மட்டுமல்ல... அரசியலுக்கும் பொருந்தும்!

தேர்வில் திணிக்கப்படும் தி.மு.க., கொள்கைகள்!


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் நடந்து முடிந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட பல கேள்விகள் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன.

தி.மு.க., அரசின் சுய விளம்பரங்களாக இக்கேள்விகள் அமைந்திருந்தன என்றால் அது மிகையில்லை. யு.பி.எஸ்.சி., தேர்வில் ஈ.வெ.ரா.,வின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டதற்காக, இங்கே ஒரு கூட்டம் கண்டனம் தெரிவித்தது.

ஆனால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், 'நீதிக் கட்சியை துவக்கியவர் யார்?' என்ற கேள்விக்கான, 'ஆப்சன்' பதிலில், அனைவரின் பெயருக்கு பின் ஜாதி குறிப்பிடப்பட்டிருந்தது!

தன்னாட்சி இயக்கத்தை நீதிக்கட்சி எதிர்த்ததற்கு காரணம், பிராமணர்களின் ஆதிக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கேள்வியில், 'தி.மு.க., தமிழர் என்ற அடையாளத்துடன் ஒருங்கிணைத்ததா' என்ற, 'ஆப்சன்' பதிலிலும் தி.மு.க.,வின் சித்தாந்தங்களே இடம் பெற்றிருந்தன.

அத்துடன், நீதிக்கட்சி, ஈ.வெ.ரா., குறித்த கேள்விகளே அதிகம் இடம் பெற்றிருந்ததே தவிர, ராஜாஜி, காமராஜர், அப்துல் கலாம், பாரதியார், கணிதமேதை ராமானுஜம் போன்றோரின் சாதனைகள் குறித்து எதுவும் கேட்கப்படவில்லை.

பொதுவாகவே,தி.மு.க., ஆட்சியில் பள்ளி பாடங்களில் கருணாநிதி, ஈ.வெ.ரா., குறித்து பொய் கதைகள் புனையப்படுவது வழக்கம்.

கட்சி ஆதரவாளர்களை தேர்வாணைய தலைவர்களாகவும், பல்கலை துணை வேந்தர்களாகவும், பாடநுால் கழக தலைவராகவும் பதவிகளில் அமர்த்துவதால் ஏற்படும் விளைவு!

இன்று, தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்தும், கல்வியின் தரம் குறைந்து போனதற்கு இத்தகைய அரசியல் கைத்தடிகளே காரணம்!

பள்ளிக் கல்வியில் அரசியலை திணித்தவர்கள், இப்போது, அரசு தேர்வு வரைக்கும் அதை நீட்டித்து உள்ளனர். தி.மு.க., அரசின் இத்தகைய போக்கே, இன்று மாணவர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு, நற்பழக்கங்கள் குறைந்து போனதற்கு காரணம்!

இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன?


கே.சூர்யா, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து, பா.ஜ., ஆட்சியை பிடித்தது; 'இனி, ஆம் ஆத்மி கதை முடிந்தது' என, எக்காளமிட்ட பா.ஜ., பஞ்சாபிலும் அக்கட்சியின் அரசு கவிழும் என்று ஆருடம் கூறியது.

இந்நிலையில், நான்கு மாநிலங்களில், ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. இதில், தன் வசம் இருந்த பஞ்சாப் மாநிலம் லுாதியானா மேற்கு மற்றும் குஜராத் மாநிலம் விசாவதர் சட்டசபை தொகுதிகளை ஆம் ஆத்மி தக்கவைத்து கொண்டது.

விசாவதர் தொகுதியில், 18 ஆண்டுகளாக ஆளும் பா.ஜ.,வால் வெற்றி பெற முடியவில்லை என்பது தான் இதில் ைஹலைட்!

லுாதியான மேற்கு தொகுதியில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி வேட்பாளரான சஞ்சீவ் அரோரா, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.

தற்போது, சட்டசபை இடைத்தேர்தலில் பெற்றி பெற்றுள்ளதால், அவரது எம்.பி., பதவி காலியாகிறது. இதனால், அதற்கான இடைத்தேர்தலில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை போட்டியிடுமாறு கட்சியினர் வற்புறுத்தியபோது, அதை மறுத்து விட்டார் கெஜ்ரிவால்.

காரணம், அவரது இலக்கு டில்லியை மீட்க வேண்டும்; பஞ்சாப் மாநிலத்தில் எந்த இடையூறும் இல்லாமல் ஆம் ஆத்மி அரசு தொடர வேண்டும். குஜராத் மாநிலத்தில் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதே!

அதேபோன்று, கேரளா நீலாம்பூர் சட்டசபை தொகுதியை மார்க்சிஸ்ட் கூட்டணியிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றிவிட்டது. முஸ்லிம் பயங்கரவாதிகள் ஆதரவால் தான் காங்., ஜெயித்தது என்று சி.பி.எம்., புலம்பினாலும், உண்மையில், ஆளும் மார்க்சிஸ்ட் அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே நிலவுகிறது.

மே.வங்கத்தில் காளிகஞ்ச் தொகுதியை தக்க வைத்துக் கொண்டது, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி. ஊழல், மாணவி கற்பழிப்பு புகார்களை மக்கள் செவிமடுக்கவில்லை. அடித்தட்டு மக்கள், முஸ்லிம் ஓட்டு வங்கியை தக்க வைத்து கொண்டார், மம்தா பானர்ஜி.

இங்கு, சி.பி.எம்., - காங்., கூட்டணியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

ஆக, இந்த இடைத்தேர்தல் உணர்த்தும் செய்தி...

காங்., கட்சிக்கும், ஆம் ஆத்மிக்கும் எதிர்காலம் பிரகாசமாக உள்ளதையே காட்டுகிறது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us