PUBLISHED ON : மே 18, 2026 12:02 AM

ஜெ.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலுக்கு முன், 'தனித்த பாதை' என்று முழங்கிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்தது அவரது அரசியல் எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளமாக பார்க்கப்படுகிறது.
தி.மு.க.,வின் வெற்றிக்கு, அதன் பரந்துபட்ட கூட்டணி வியூகம், எப்போதும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கும். இன்று, அதே பாணியைக் கையிலெடுத்துள்ளார் விஜய்.
திராவிடர் கழக தலைவர் வீரமணி முதல், தமிழக அரசியல் கட்சி தலைவர்களான ஸ்டாலின், வைகோ, அன்புமணி, திருமாவளவன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் வரை பெரிய மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்களை அவர் நேரில் சந்தித்தது, அவர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதையாகப் பார்க்கப்பட்டாலும், தனிப்பட்ட இந்த சந்திப்பு அந்தத் தலைவர்கள் மத்தியில், விஜய் மீதான ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது.
தற்போதுள்ள நிலவரப்படி, எதிர்காலத்தில் ஒரு பெரும் கூட்டணியை உருவாக்குவதில் விஜய் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
காங்கிரசை தன் பக்கம் ஈர்த்தது முதல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரிகளுடன் அவர் காட்டும் இணக்கம் வரை, தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த கூட்டணி கட்டமைப்பை, விஜய் மெதுவாக சிதைக்கத் துவங்கியுள்ளார் என்றே கூறலாம்!
அரசியலில் கொள்கைகள் வேறுபடலாம்; ஆனால், மனித மாண்புகள் முக்கியம் என்பதை விஜய் தன் சந்திப்புகள் வாயிலாக நிரூபித்துள்ளார்.
இச்சந்திப்புகள் வெறும் புகைப்படங்களுக்காக மட்டுமல்ல, ஆட்சியை நிலைநிறுத்தவும், எதிர்காலத் தேர்தல்களில் ஒரு, 'மெகா கூட்டணியை' வழிநடத்தவும் அவர் போடும் மாஸ்டர் பிளான்!
அத்துடன், 'அதிகார பகிர்வு' என்ற புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ள விஜய், சிறிய கட்சிகளையும் தன்பக்கம் இழுப்பதன் வாயிலாக, தமிழக அரசியலில் ஒரு, 'கிங் மேக்கராக' மட்டுமன்றி, 'கிங்' ஆகவும் உருவெடுத்துள்ளார்.
விஜயின் இந்த நிதானமான அணுகுமுறை, வரும் காலத்தில் தமிழகத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை!
மாற்றி யோசியுங்கள் முதல்வரே!
எல்.எம்.ராஜ், மதுரையில் இருந்து அனுப்பிய, ' இ - மெயில்' கடிதம்: முதல்வன் திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வராக வரும் கதாநாயகன், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து, இறுதியில் முதல்வராக பதவி வகித்தவரையே கைது செய்வார்.
அதைப்போன்று, இன்றைய நிஜ முதல்வர் விஜய், தன் முதல் நடவடிக்கையிலேயே, 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டு, தன் அதிரடியை துவக்கியுள்ளார்.
தி.மு.க., - அ.தி.மு.க., எவர் ஆட்சிக்கு வந்தாலும், 'டாஸ்மாக்' மீது மட்டும் கை வைக்கத் துணிய மாட்டார்கள். காரணம், அது அரசுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும், 'காமதேனு!'
அதிலிருந்து வரும் கமிஷன், பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதால், மற்ற கட்சிகளும் இவ்விவகாரத்தைக் கண்டு கொள்வதில்லை.
'எவரோ எப்படியோ குடித்துவிட்டு சாகட்டும்; நமக்கு வருமானம் தான் முக்கியம்' என்றே ஆளுங்கட்சிகள் இதுவரை நினைத்தன.
தீபாவளிக்கும், புத்தாண்டுக்கும் டாஸ்மாக் வருமானம் இத்தனை ஆயிரம் கோடிகளைத் தாண்டியது என்று, ஏதோ மகத்தான சாதனை செய்துவிட்டது போல, சம்பந்தப்பட்ட அமைச்சர் சட்டசபையில் அறிவிப்பார்.
அந்த அறிவிப்பின் பின்னணியில், எத்தனை பெண்களின் வாழ்க்கை பறிபோயிருக்கும் என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல், சபையில் உள்ள உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி வரவேற்பர்.
இப்படி ஏழைப் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடி வந்த டாஸ்மாக்கிற்கு, எவராவது சாவு மணி அடிக்க மாட்டார்களா என்று மக்கள் ஏங்கித் தவித்திருந்த வேளையில், அழுத்தமானதொரு மரண அடியைக் கொடுத்து உள்ளார், விஜய்.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங் களுக்கு அருகே மதுக்கடை கள் இருக்க வேண்டிய துாரக் கட்டுப்பாட்டைச் சற்று அதிகப்படுத்திய உடனேயே, 717 கடைகள் மூடப்பட்டுவிட்டன. அடுத்தடுத்து, இந்தத் துாரத்தை அவர் படிப்படியாகக் கூட்டி, மதுக்கடைகளை முற்றிலும் ஒழிப்பார் என்று மக்கள் இப்போது நம்பத் துவங்கி விட்டனர்.
முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்... மூடிய மற்றும் மூடப்போகும் அந்த மதுக்கடைகளை மீண்டும் திறக்கச் சொல்லுங்கள்; ஆனால், அங்கு மதுவுக்குப் பதிலாக, உடலுக்கு நலம் பயக்கும் நீர்மோர், நெல்லிக்காய் சாறு, நுங்கு ச ர்பத், அருகம்புல் சாறு, வில்வ பானம், செம்பருத்திப் பூ சாறு மற்றும் நன்னாரி சர்பத் போன்ற மூலிகை பானங்களை விற்பனை செய்யும் மையங்களாக அவற்றை மாற்றுங்கள்.
இதன் வாயிலாக மக்களின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, இயற்கை விவசாயத்தைச் சார்ந்த கிராமப்புற மக்களும் பொருளாதார வளம் பெறுவர்.
முதல்வர் மாற்றி யோசிப்பாரா?
எரிபொருள் பயன்பாட்டில் சிக்கனம் தேவை!
ஜி.கணபதி ராஜு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டின் நன்மையை உத்தேசித்து, 'எரிபொருளை சேமியுங்கள், அனாவசியமான வெளிநாட்டு பயணங்களை தவிருங்கள்' என்று, பிரதமர் மோடி அறிவுரை கூறினார். அதை கடைப்பிடித்தால், நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது தானே? அதைவிடுத்து, விமர்சிப்பது சரியா?
அருகில் உள்ள கடையில் தீப்பெட்டி வாங்க வேண் டும் என்றால் கூட, வாகனத் தில் செல்கின்றனர்; ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள மளிகை கடைக்கு காரில் செல்கின்றனர்.
விடுமுறையில் பலர் பைக், கார்களை எடுத்துக் கொண்டு வெட்டியாக ஊர் சுற்றுகின்றனர்.
எறும்பு கூட்டம் கூட மழை காலத்தை உணர்ந்து, சேமிக்கத் துவங்குகின்றன. ஆறறிவு உள்ள மனிதர்களான நாமோ, எதிர்கால சந்ததி குறித்து எந்தவித அக்கறையும் கொள்ளாமல், அகன்ற வான்வெளிகள் முதல் ஆறு, குளம், குட்டை, மலைகள், கடல்கள் என அனைத்தையும் நம்மால் முடிந்தவரை பாழ்படுத்திவிட்டு தான், இவ்வுலகில் இருந்து மறைகிறோம்.
இதில், இயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று அறிவுரை கூறினால், வரிந்து கட்டிக்கொண்டு விமர்சனம் செய்கின்றனர், சிலர்.
அரிசி, சர்க்கரைக்கு ரேஷன் இருப்பது போல், பெட்ரோலுக்கும் ரேஷன் கொண்டு வந்தால் தான் இவர்கள் திருந்துவர்.
போக்குவரத்தை கணக்கிட்டு, ஒரு வண்டிக்கு மாதத்திற்கு இவ்வளவு பெட்ரோல் தான் என்று சட்டம் கொண்டு வந்தால் தான், எரிபொருளின் அவசியத்தை மக்கள் உணருவர்.
சிக்கனம், சேமிப்பு என்பது பணத்தில் மட்டுமல்ல; எரிபொருள் சேமிப்பிலும் தேவை என்பதை அனைவரும் உணர வேண்டும்!
