தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/பொய் பேசுவதில் கில்லாடிகள் யார்?

பொய் பேசுவதில் கில்லாடிகள் யார்?

பொய் பேசுவதில் கில்லாடிகள் யார்?


PUBLISHED ON : ஜன 05, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 05, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், தடையில்லா மின்சாரம் என அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு? நம்பக் கூடிய அளவு பொய் சொல்வதில் பா.ஜ.,வினர் கில்லாடிகள் என்பது மக்களுக்கு தெரியும்' என்று கூறியிருக்கிறார், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

அவருக்கு ஒரே ஒரு பொய்யை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால்பகதுார் சாஸ்திரி போன்றோர் பொய்களை அரங்கேற்றியதாக தெரியவில்லை. பொய்களின் அரங்கேற்றம் பிரதமர் இந்திரா காலத்தில் இருந்து தான் துவங்குகிறது.

அவர், பொதுக்கூட்ட மேடைகளில் 'கரீபி உட்டாவ், கரீபி உட்டாவ்' என்று ஆவேசமாக முழங்குவார். கூட்டமும் அதை அப்படியே திருப்பி சொல்லும். கரீபி உட்டாவ் என்றால், வறுமையை ஒழிப்போம் என்று பொருளாம்.

விபரம் அறியாத பால்ய பருவத்தில், நாட்டில் வறுமைக் கோட்டில் உழன்று கொண்டிருப்போரின் வறுமையை ஒழித்து, அவர்கள் வாழ்க்கை மேம்பாடு அடைய முயற்சிக்கிறார் என்று நினைத்தோம்.

ஆனால், அதன் பொருள் அப்படி அல்ல... கரீபி உட்டாவ் என்றால், 'காங்கிரசாரின் வறுமையை ஒழித்து, அவர்களை செல்வந்தர்கள் ஆக்குவது' என, பிற்பாடு தான் தெரிந்தது.

இந்திரா காலத்தில், வறியவர்கள் எப்படி இருந்தனரோ, அப்படித்தான் 2014 வரை இருந்தனர். அவர்கள், காங்., ஆட்சி காலத்தில், வறுமையில் இருந்து, 1 சதவீதம் கூட மீளவில்லை.

ஆனால், பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில், அவர்கள் வறுமையில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். அவ்வாறு மீண்டு வருவது கார்கேவுக்கு பிடிக்கவில்லை; பொறுக்கவில்லை. அதனால், பா.ஜ., அரசு மீது பாய்கிறார்.

ஆயினும், பொய் பேசுவதில் பழம் தின்று கொட்டை போட்ட கட்சி காங்கிரஸ் என்பது, நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.



தி.மு.க.,வினர் ஹிந்தி கற்று கொள்வரா?


ஆர்.வித்யாசாகர், அருப்புக் கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் புதுடில்லியில் நடந்த, 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், அதன் முக்கிய தலைவரான நிதீஷ் குமார் ஹிந்தியில் பேசியதை மொழிபெயர்க்கும்படி, தி.மு.க., தரப்பு கேட்க, அவரோ மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

அத்துடன், 'ஹிந்தி, நம் தேசிய மொழி; ஆகையால், அதை கற்றுக் கொள்ள வேண்டும்' என்றும் கோபத்துடன் பேசியுள்ளார்.

'ஹிந்தி தெரியாது போடா' என்று வாய் சவடால் விட்டவர்கள், இன்று அவரை எதிர்த்து பேசமுடியாமல் வாயடைத்து நிற்கின்றனர். மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தியில் ஒரு சுற்றறிக்கை வந்தாலே, இவர்கள் வானுக்கும், பூமிக்கும் குதிப்பர்.

'மாநிலங்களுக்கிடையே தொடர்பு மொழியாக ஹிந்தியை பயன்படுத்த வேண்டும்' என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய போது, தி.மு.க.,வினரோடு, வைகோ உள்ளிட்டோரும் பொங்கி எழுந்தனர். ஆனால், நிதீஷ் குமாருக்கு எதிராக ஒருவரும் பேசவில்லை... ஏன்?

வடமாநிலத்தின் ஒரு மூலையில் இருக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு, தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் சீட் கொடுக்கப் போகிறாராம் ஸ்டாலின். அவ்வாறு கூட்டணி அமைத்தால், தேர்தல் பிரசாரத்தில், 'சாமானிய மனிதன்' எனும் பொருள் கொண்ட, ஆம் ஆத்மி என்ற ஹிந்தி வார்த்தையை அடிக்கடி உச்சரிக்க வேண்டியிருக்கும். கெஜ்ரிவாலும் ஹிந்தியில் தான் பிரசாரம் செய்வார். இது தி.மு.க.,வினருக்கு உறுத்தலாக இருக்காதா?

இவர்களுக்கு ஹிந்தி மொழி மீது எவ்வளவு வெறுப்பு உள்ளதோ, அதைவிட பன்மடங்கு வடமாநில கட்சிகளின் தலைவர்களுக்கு, தாய்மொழி மீது பற்று இருக்கும்.

தமிழகத்தில் தி.மு.க., வினரின் ஹிந்தி எதிர்ப்பு நாடகம் லாலு பிரசாத், நிதீஷ் குமார், சரத் பவார், கெஜ்ரிவால் போன்ற மூத்த தலைவர்களுக்கு தெரியாமலா இருக்கும். 'ஹிந்தி தெரியாது போடா' என்ற தி.மு.க.,வினரின் கோஷம், இன்று அவர்களுக்கெதிராகவே திரும்பி விட்டது.

அடுத்த இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கும் முன், தி.மு.க.,வினர் ஹிந்தி கற்றுக் கொண்டால் நல்லது!



மக்கள் நினைத்தால் தான் முதல்வர் பதவி!


எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் ஒருவரை ஒருவர் குறை கூறுவதைக் கேட்டால், வடிவேல் காமெடி தோற்றுப் போகும்; அந்த அளவிற்கு நகைப்பிற்குரியதாக இருக்கிறது. 'முதல்வராக்கிய சசிகலாவையே மூன்று மாதங்களில் வசைபாடியவர் பழனிசாமி. அவர் துரோகி' என்று, பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

'ஜெ.,வின் மறைவுக்கு பின், தன்னை முதல்வராக்கிய சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்தம் செய்தவர்' என்ற விமர்சனம் பன்னீர்செல்வம் மீது உண்டு. இவர்கள் அ.தி.மு.க., வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்...

ஜெ., மறைவுக்கு முன், அவரது தோழி சசிகலா அ.தி.மு.க.,வில் உறுப்பினர் மட்டுமே; கட்சி பதவியில் இல்லை. தேர்தலில் நின்று வெற்றி பெறவில்லை. ஆனால், பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தேர்தலில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.

இவர்கள், ஜெ.,வின் மறைவுக்கு பின் முதல்வர் பதவி வகித்தது, மக்களின் ஓட்டாலும், ஆதரவாலும் தான். சசிகலா யார், இவர்களை முதல்வர்களாக்க...?

ஜெ.,யின் தோழி; சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவர் என்பதே சசிகலாவின் இன்றைய அடையாளம்.

அவரை அரசியல் பக்கம் வர விடாமல், ஒதுக்கி வைத்திருந்தார் ஜெ.,; ஆனால், பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தங்களுக்கு ஆதரவளித்த மக்களை மறந்து, 'சின்னம்மா முதல்வராக்கினார். சின்னம்மாவிற்கு துரோகம் செய்து விட்டார்' என்று கூறுவது, மக்களை அவமதிப்பது போல் உள்ளது.

இவர்கள் பதிலளிக்க வேண்டியது, தேர்ந்தெடுத்த மக்களிடம் தான்; சசிகலாவிடம் அல்ல. எம்.ஜி.ஆர்., - ஜெ., போன்ற ஆளுமைகளால் வளர்ந்த கட்சி இது. எம்.ஜி.ஆர்., மக்களை, 'ரத்தத்தின் ரத்தமே' என்றும், ஜெயலலிதா, 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்றும் கூறுவார்.

இருவரும் தனி நபர் துதி பாடியது கிடையாது. பன்னீர் செல்வமும், பழனிசாமியும் மாறி மாறி, 'சசிகலாவுக்கு துரோகம் செய்து விட்டார்' என்று புலம்பாமல், உங்களை நம்பி, உங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்மை செய்ய பாருங்கள்; ஏனெனில், மக்கள் நினைத்தால் மட்டுமே நீங்கள் முதல்வராக முடியும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us