தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ சீமானுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

சீமானுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

சீமானுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?


PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.ரமேஷ், நாகர்கோவிலில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம்; நியமன உறுப்பினரான கவர்னருக்கு ஏது அதிகாரம்? தமிழன் காசு வேணும்; தமிழன் வேணாமா...' என்று கேட்டுள்ளார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கவர்னர் என்னவோ, தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டாம்; தேசிய கீதம் மட்டும் தான் பாட வேண்டும் என்று சொன்னது போல் உளறி கொட்டியுள்ளார், சீமான்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின், தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று தானே கேட்டுக் கொண்டார்!

மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தை, கருணாநிதி தன் இஷ்டத்துக்கு திருத்தி, அதை மாநில அரசின் வாழ்த்துப் பாடலாக வைத்துள்ளதாக இதே சீமான் குற்றம்சாட்டி, புதுச்சேரியில் இசைக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்தை, சென்னை புத்தக திருவிழாவில் இசைக்கச் செய்தாரே... சீமானுக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இதுவரை கடைப்பிடித்து பாடி வரும் தமிழ்த்தாய் வாழ்த்தை புறம்தள்ளி, தன் இஷ்டத்துக்கு ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்க, சீமானுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

'தமிழன் காசு வேணும்; தமிழன் வேணாமா...' என்று கேட்கிறார்.

தெலுங்கானா கவர்னராக தமிழிசை இருந்தபோது, அப்போதைய ஆளும் அரசுக்கும், கவர்னருக்கும் பிரச்னை இருக்கத் தான் செய்தது... அதற்காக, அங்கிருப்போர், 'தெலுங்கன் காசு வேணும்; தெலுங்கன் வேணாமா' என்றா கேட்டனர்?

நாம் அடுத்த மாநிலத்துக்கு, நாட்டுக்கு போனால், நமக்கு ராஜ மரியாதை வேண்டும்; நம் அண்டை மாநிலத்தவர் பணி நிமித்தமாக இங்கு வந்தால், பிச்சை எடுக்க வந்தது போல் பேசுவது தான், தமிழன் மரபா?

தமிழ் தேசியம் பேசுங்கள்... அதை வைத்து பிரிவினை அரசியல் செய்யாதீர்கள். அது நாட்டுக்கும் நல்லதல்ல; மக்களுக்கும் நல்லதல்ல!

இவ் வளவு விடுமுறை தேவையா ?


எஸ்.ராமமூர்த்தி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: ஒரு பிளஸ் 2 மாணவனின் தந்தையாக கடிதத்தை எழுதுகிறேன்...

பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜன., 17 வெள்ளிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜன., 13 திங்கட்கிழமை போகி பண்டிகை; அது விடுமுறை நாள் இல்லை என்றாலும், அன்று பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள்.

எனவே, ஜன., 11 சனிக்கிழமை துவங்கி, 19 ஞாயிறு வரை ஒன்பது நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை!

இப்போது தான் அரையாண்டு தேர்வு விடுமுறை 10 நாள் முடிந்து, ஜன., 2ல் பள்ளிகள் திறந்தன. அதற்குள் மீண்டும் ஒரு தொடர் விடுமுறை!

ஆண்டிற்கு, 200 நாட்கள் பள்ளிகளுக்கும், 180 நாட்கள் கல்லுாரிகளுக்கும் வேலை நாள் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், இப்படி திடீர் திடீர் என்று விடுமுறைகளை அறிவித்தால், மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 தேர்வுக்கு முன், ஆசிரியர்கள் எப்படி பாடங்களை முடிப்பர்?

மாணவர்கள் தான் எப்படி தங்களை தேர்வுக்கு தயார் செய்வர்?

உலக அளவில் இன்ஜினியரிங் பல்கலைக் கழகங்கள் எல்லாம், ஆகஸ்ட் மாதம் கல்வியாண்டிற்கான படிப்பை துவங்கி விடுகின்றன. நாமோ அப்போது தான் தேர்வுகளை முடித்து, இன்ஜினியரிங் தர வரிசை லிஸ்ட் தயார் செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த லட்சணத்தில், இங்கு படிக்கும் மாணவர்கள், உலக அளவில் கூட வேண்டாம்... இந்தியாவில் பிற மாநில மாணவர்களோடு எப்படி போட்டி போடுவர்?

பண்டிகைகளுக்கு விடுமுறை தேவைதான்; அதற்காக, பண்டிகை நாட்களை தவிர்த்த நாட்களிலும் எதற்கு அனாவசிய விடுமுறை?

அரசு சிந்திக்குமா?

காலம் பதில் சொல்லும்!


பழ.சுந்தரமூர்த்தி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1959ல் ஹிந்து மற்றும் அறநிலைய கொடைகள் சட்டம் இயற்றப்பட்டு, 1960ல் அமலுக்கு வந்தது. இன்று வரை எந்தவித குளறுபடியும் இல்லாமல், அச்சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கான சட்டத்தில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர, ஓய்வு பெற்ற நீதிபதி மதிவாணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதுவரை ஆட்சி செய்தவர்களுக்கு சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழாத நிலையில், இவர்களுக்கு மட்டும் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வர காரணம் என்ன?

திராவிட மாடல் அரசு, ஹிந்து அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய நினைப்பதே, கோவில்களை கொள்ளை அடிக்கத் தான்!

அத்துடன், எந்தெந்த வழக்குகளில் ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கைகளுக்கு, நீதிமன்றம் தடை விதித்ததோ, அவற்றையெல்லாம் சட்ட திருத்தத்தில் கொண்டு வந்து, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளத்தான், இச்சட்ட திருத்தத்தை கையில் எடுத்துஉள்ளது!

நீதிபதி மதிவாணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழு, என்ன செய்து விடப் போகிறது?

முதல்வர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே அறிக்கையாக தயார் செய்து தந்து விடப் போகிறது!

இது இப்படி இருக்க, கோவில் வரலாறுகளை சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க, ஐந்து பேர் உள்ள குழுவை அமைத்துள்ளது அரசு. ஸ்தல புராணம், கோவில் சரித்திரம் என்பது எப்போதுமே மாறக் கூடியது அல்ல; நிலையானது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஸ்தல புராணத்தை யாராலும் மாற்ற முடியாது எனும் போது, கோவைக்கு அருகே உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் ஸ்தல புராணத்தில், கோவிலை தோற்றுவிக்க காரணமாக இருந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

அன்று அவர்கள் இல்லையேல், இன்று அக்கோவிலே இல்லை. இதை அறிந்த பரம்பரை அறங்காவலர், நீதிமன்றம் வாயிலாக தடை உத்தரவு பெற்றார். ஒரு கோவில் ஸ்தல புராணத்தை மாற்ற இவர்கள் யார், இவர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?

ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற இறுமாப்பு தானே காரணம்?

இந்த அராஜகத்திற்கு காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us