/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
லோக்சபாவை சோனியா தவிர்த்தது ஏன்?
/
லோக்சபாவை சோனியா தவிர்த்தது ஏன்?
PUBLISHED ON : பிப் 18, 2024 12:00 AM
வெ. சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்., முன்னாள் தலைவர் சோனியா, தன் மாமியாரான இந்திரா வழக்கமாக நிற்கும் உ.பி., மாநிலம், ரேபரேலியில் நின்று, லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பக்கத்தில் இருக்கும் தொகுதியான அமேதியில் போட்டியிட்ட ராகுல், பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.
நல்லவேளையாக, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் களம் இறங்கி இருந்ததால், அங்கு ஜெயித்து, லோக்சபாவுக்குள் நுழைய முடிந்தது.
வரப்போகும் தேர்தலில், 'இண்டியா' கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, ரேபரேலி, அமேதி தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய போதிலும், சோனியா, லோக்சபா தேர்தலை தவிர்த்து, ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாக, மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏனென்றால், லோக்சபா தேர்தலில் நின்று ஒருவேளை தோற்று விட்டால், டில்லியில் சோனியா வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டியிருக்கும். அதை தவிர்க்கவே, ராஜ்யசபா வாயிலாக பார்லிமென்டுக்குள் நுழைகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நாடு முழுக்க எடுக்கப்பட்ட பல்வேறு கருத்து கணிப்புகளும், 'பா.ஜ.,வே மீண்டும் ஆட்சி அமைக்கும்' என, தெரிவிக்கின்றன. அதிலும், உ.பி.,யில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை என்றே கூறுகின்றன.
அமேதியிலும், கடந்த முறை தோற்றுப் போன ராகுல், இந்த முறை மீண்டும் களம் இறங்குவாரா என்பது கேள்விக்குறியே. பிரியங்கா, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்ற யூகங்களும் வலம் வருகின்றன. அப்படி அவர் போட்டியிட்டாலும், வெற்றியை ஈட்டுவாரா என்பது சந்தேகமே.
எனவே, பிரியங்கா, ராகுல் போன்றோர் இந்த முறை தாங்கள் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கக்கூடிய ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவில் ஏதாவது ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிடலாம்.
மாநில கட்சிகள் விட்டு கொடுக்கணும்!
கே.கல்யாணம்,
சென்னையில் இருந்து எழுதுகிறார்: மத்தியில் ஆளும் பா.ஜ., அரசை வீழ்த்த
வேண்டும் என்ற நோக்கத்தில், 28 கட்சிகள் சேர்ந்து, 'இண்டியா' கூட்டணி என்ற
அமைப்பை உருவாக்கின.
அதில் இரண்டு கட்சிகள் இப்போதே வெளியேறி
விட்டன. இந்நிலையில், கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடாமல்,
தான்தோன்றித்தனமாக மற்ற கட்சிகள் சுயநலம் ஒன்றையே மனதில் கொண்டு செயல்பட
துவங்கி விட்டன.
காங்கிரஸ், அரை நுாற்றாண்டுக்கும் மேல் ஆண்ட மிகப்
பெரிய தேசிய கட்சி. கால சக்கரத்தில், அரசியல் சூழ்நிலை காரணமாக
அக்கட்சியில் இருந்து பிரிந்து தனிக் கட்சி துவங்கியோர் தான், இன்று பல
மாநிலங்களில் பிராந்திய கட்சிகளை நடத்தி கொண்டிருக்கின்றனர்.
ராஜிவுக்கு
பின், காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைமை இல்லாததும், திட்டமிட்டு
சூழ்நிலைக்கு ஏற்ப வியூகம் வகுத்து செயல்படாததும் தான், இன்று பலரும் கேலி
பேசும் அளவிற்கு மோசமான நிலைமைக்கு அக்கட்சியை தள்ளியுள்ளது.
'இண்டியா' கூட்டணி ஆரம்பத்தில் காட்டிய வேகத்தை, லோக்சபா தேர்தல் நெருங்கும் வரை தக்கவைத்துக் கொள்ள தவறி விட்டது.
கூட்டணியின்
பொது நோக்கத்தை மறந்து, மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதை,
தங்களுக்கு சாதகமாக கருதும் மாநில கட்சிகள், தொகுதி உடன்பாட்டில் அள்ளி
கொடுக்காமல், கிள்ளி கொடுக்க நினைக்கின்றன.
இந்த நிலை மாற வேண்டும்.
காங்கிரசுக்கு செல்வாக்கு இல்லை என்றாலும், அந்தந்த மாநிலங்களில் உள்ள
மொத்த தொகுதிகளிலும், 25 சதவீதம் இடங்களை கொடுத்தால் தான் கூட்டணி
வலுப்பெறும்.
எல்லா கட்சிகளும், நிலைமைக்கேற்ப தங்கள் தொகுதிகளை
விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும். ஊர் கூடி தேர் இழுத்தால் தான், தேர்
நிலைக்கு வரும். இல்லாவிடில், ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
என்ற கதையாகி விடும்.
எனவே, காங்கிரசுடன், மாநில கட்சிகள் சுமுகமான
தொகுதி உடன்பாட்டை ஏற்படுத்தி, கூட்டாக பிரசாரம் செய்தால், இண்டியா
கூட்டணியின் நோக்கம் நிறைவேறும்.
கிணற்று தவளைகளாக ஆக்கியது யார்?
வி.எச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக
சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது
விவாதம் நடந்தது. இதில் பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.,
சிந்தனைச்செல்வன்.
'துப்புரவு பணிக்கு அவுட் சோர்சிங் முறையில், 90
சதவீத பணியாளர்களை நியமிப்பது அதிகரித்துள்ளது. அதை குறைக்க வேண்டும்'
என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 'மத்திய அரசு பணிகளில்,
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவர்கள் நடத்தும் தேர்வுகள்
ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே உள்ளன. தமிழர்களிடம் இருந்த தங்கம், வெள்ளி,
இரும்பு, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட தொழில்கள் வட மாநிலத்தவரால்
அபகரிக்கப்பட்டு விட்டன.
'தமிழகம், ஹிந்திக்காரர்கள் மாநிலமாக
உள்ளது. இதை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும்' என்றும், சட்டசபையில்,
தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ., பண்ருட்டி வேல்முருகன் மனம்
குமுறியுள்ளார்.
மத்திய அரசு பணிக்கான தேர்வுகளில், தமிழும்
அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மொழியை, 'டிக்' செய்யும் போது கவனம்
வேண்டும். மத்திய அரசு பணிக்கு தேர்வானால், எந்த மாநிலத்திலும் வேலை
பார்க்க தயாராக வேண்டும்.
இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள வங்கி,
எல்.ஐ.சி., மற்றும் ரயில்வே பணியில் உள்ள வடமாநில அதிகாரிகள், ஊழியர்கள்,
விரைவில் உள்ளூர் மொழியில் பேச படிக்க கற்றுக் கொள்கின்றனர்.
எனவே,
நம் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக மட்டுமாவது, ஹிந்தி
கற்றுக்கொள்ளலாம். நாம் நடத்தி வந்த தொழில்களில் கடைநிலை பணியாளராக
சேர்ந்து, நாளடைவில் அதே தொழிலுக்கு முதலாளியாக வடமாநிலத்தவர்கள்
உயர்வது,அவர்களது கடின உழைப்பால் மட்டுமே.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட
அண்டை மாநிலங்கள், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் சென்று கடைநிலை
ஊழியராக உழைக்கும் தமிழர்கள், தாய் மண்ணில் மட்டும் கவுரவம்
பார்க்கின்றனர்.
ஆனால், சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் என்ற
கொள்கையில் உள்ள வடமாநிலத்தவர்கள், 'எந்த வேலைக்கும் தயார்' எனக் கூறி,
தினமும் தமிழகத்தில் குவிந்தபடி உள்ளனர்.
எனவே, வேல்முருகன் அச்சம்
நியாயமானது தான். அதே நேரம், நம் இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக விடாமல்,
கிணற்று தவளைகளாக மாற்றி வைத்திருப்பதற்கு, இரண்டு திராவிட கட்சிகளும் தான்
காரணம் என்பதில் மாற்று கருத்தில்லை.