PUBLISHED ON : நவ 01, 2025 12:00 AM

பி.எஸ்.ரங்கஸ்வாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம், பீஹாரை அடுத்து மேலும், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளது, தேர்தல் ஆணையம்.
கடந்த 1951 முதல், 2004 வரை எட்டு முறை வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 2004க்கு பின் இதுவரை திருத்தம் செய்யப்படவில்லை.
தற்போது, அப்பணியை செய்ய முன்வந்துள்ளது, தேர்தல் ஆணையம்.
ஆனால், என்னவோ மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு தாங்கள் வெற்றி பெறவே, புதிதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை கொண்டு வந்திருப்பது போல், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்புகின்றன.
கடந்த 2016ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, சென்னை, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை வைத்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார், அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.
அதையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது, வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்ற பெயரில் பெண்கள், சிறுபான்மையினர் ஓட்டுகளை தேர்தல் கமிஷன் நீக்கிவிடும் என்று பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார்.
இறந்தவர்கள், இடம் பெயர்ந்தோர், இரட்டை வாக்காளர் அட்டை வைத்திருப்போர், வெளி நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பெயர்களை நீக்குவது எப்படி தவறாகும்?
போலி வாக்காளர்களை நீக்குவதில், தி.மு.க.,வுக்கு ஏன் மண்டைக்குள் குடைகிறது?
lll
சாபக்கேடு! ஏ.ரகுராமன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: இந்த ஆண் டிற்கான பருவமழை துவங்கியது முதல், தமிழக அரசின் நெல்
கொள்முதல் நிலையங்கள் முன், லாரிகளில் அடுக்கப்பட்டிருக்கும் நெல்
மூட்டைகள், கொள்முதல் செய்வதற்காக காத்துக் கிடப்பதையும், அவை மழையில்
நனைந்து முளைவிட்டு பாழாய் போய்க் கொண்டிருப்பதையும், அதைப் பார்த்து
விவசாயிகள் கண்ணீர் விடுவதையும் செய்திகளில் பார்க்க முடிகிறது.
அரசு இதற்காக என்ன நடவடிக்கை எடுத்தது என்று தெரியவில்லை.
அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, நேரடியாக டெல்டா பகுதிகளுக்கு
சென்று விவசாயிகளை சந்தித்து, அவர்களின் குறையை கேட்டறிந்து, தமிழக அரசின்
அலட்சியப் போக்கை சுட்டிக் காட்டியதும், பழனிசாமி அரசியல் செய்வதாக
விமர்சிக்கிறது, ஆளும் தி.மு.க., அரசு.
எதிர்க்கட்சித் தலைவரின்
பணியே, மக்களுக்கு ஏற்படும் குறைகளையும், அரசு செய்யும் தவறையும்
சுட்டிக்காட்டி அரசியல் செய்வதுதான். அதையே கூடாது என்றால், அரசின் தவறை
எவர் தான் சுட்டிக் காட்டுவர்?
'கடந்தாண்டு குறுவை சாகுபடியில்,
3.௮௮ லட்சம் ஏக்கர் நெல் பயிரிடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு குறுவையில்,
6.13 லட்சம் ஏக்கர் பயிரிடப்பட்டுள்ளது. எனவே, கொள்முதலில் தாமதம்
ஏற்படுகிறது...' என்று கூறுகிறது, அரசு.
ஆனால், குறுவை சாகுபடி
எத்தனை ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது என்பது, பருவமழை துவங்குவதற்கு, 90
நாட்களுக்கு முன்பே அரசுக்கு தெரிந்திருக்கும். எத்தனை டன் நெல் அறுவடை
செய்யப்படும் என்பதை தோராயமாக கணக்கிட்டு, அதற்கு ஏற்றாற்போல் கொள்முதல்
நிலையங்களும், கொள்முதல் செய்யும் நேரத்தையும் நிர்ணயித்திருக்க வேண்டும்
அல்லவா?
அதைவிடுத்து, 'பருவ மழை முன்னதாகவே துவங்கி விட்டது' என்று ஆட்சியாளர்கள் கூறுவது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா?
பருவமழை என்ன, நாள், நட்சத்திரம் பார்த்தா வரும்... சில நாட்களுக்கு முன்
அல்லது பின் கூட பெய்யலாம். எப்படியும் மழை வரும் என்பது தெரிந்த விஷயம்
தானே!
அதற்கு ஏற்றால் போல், நெல் கொள்முதல் செய்ய துவங்கி இருக்க வேண்டும் அல்லவா?
இப்போதோ... நெல் கொள்முதல் நிலையங்களின் முன், சிலர் நெல் மூட்டைகளை
லாரிகளில் அடுக்கி வைத்திருக்கின்றனர். அதற்கும் வழியில்லாத சிலர் சாலையில்
குவித்து வைத்துள்ளனர்.
மழையில் நெல் மூட்டைகள் நனைந்து கொண்டிருக்கின்றன.
நெல்லின் ஈரப்பதம் அதிகமானால், அரசு மற்றும் தமிழ்நாடு சிவில் சப்ளை
கார்ப்பரேஷன், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே முழு விலைக்கு
வாங்கும்.
மாறாக, 17லிருந்து, 19 சதவீதம் ஈரப்பதம் இருந்தால்,
அந்த நெல், ஈரப்பதத்திற்கான கழிவு விதிமுறையின்படி, தள்ளுபடி விலையில் தான்
வாங்கப்படும்.
அத்துடன், 19 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம்
இருந்தால், அதை கொள்முதல் செய்யவே மாட்டார்கள். அதை உலர்த்தி மீண்டும்
கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இது,
விவசாயிகளுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மழையில்
நனைந்து நெல் முளைவிட்டு விட்டால், முழுதுமாக வீணாகி விடும்.
தமிழகத்தை இரு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்த போதும், இந்த அவலம் தொடர்கதையாகவே உள்ளது.
உயிரை குடிக்கும் மதுவிற்கு இருக்கும் பாதுகாப்பு, உணவு தானியத்திற்கு இல்லை என்பது கழக ஆட்சிகளால் நிகழ்ந்த சாபக்கேடு!
துருப்பிடித்த ஆணியை கொண்டு வரவேண்டாம்! சு.செல்வராஜன், கோவையில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜாதி இரண்டொழிய வேறில்லை சான்றுங்கால் -
மேதினியில் இட்டார் பெரியோர்; இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி'
என்கிறார், தமிழ் பாட்டி அவ்வை.
அத்தகைய தமிழகத்தில் இன்று ஜாதி அரசியல் கொடிகட்டி பறக்கிறது. சமீபகாலமாக, ஜாதிகள் குறித்த பேச்சு, பேசுபொருளாக்கப்பட்டு வருகிறது.
கரூரில் தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு,
தி.மு.க.,வும் ஒரு காரணம் என்ற மக்களின் குற்றச்சாட்டை திசைதிருப்ப,
அக்கட்சி எடுத்திருக்கும் மடைமாற்றும் தந்திரங்களில் ஒன்று தான், ஜாதி
பற்றிய பேச்சு!
தமிழர்களை, பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர்
என்று இரு கூறுகளாகப் பிரித்து அரசியல் செய்து, சொத்து சேர்த்த
ஈ.வெ.ராமசாமியின் துருப்பிடித்த ஆணியை எடுத்துக் கொண்டு, அரசியல் களம் காண
புறப்பட்டுள்ளது, தி.மு.க.,
ஈயம், பித்தளைக் கடையிலிருந்து மீட்டு
வந்த இந்த துருப்பிடித்த ஆணியை, ஈட்டி என்று நம்ப வைக்க கூர்தீட்டுவது,
திரைப்படங்களில் தமாசு நடிகர்கள் கவுண்டமணி - செந்தில் காமெடிக்கு
வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம்; நடப்பு அரசியலுக்குப் பொருந்தாது!
எனவே, பிரச்னைகளிலிருந்து மக்களை திசைமாற்றும் இதுபோன்ற உதவாத வேலைகளை
விடுத்து, இருக்கும் சில மாத ஆட்சியிலாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுவது
நல்லது!

