தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ தேர்தல் ஆணையம் கடிவாளம் போடுமா?

 தேர்தல் ஆணையம் கடிவாளம் போடுமா?

 தேர்தல் ஆணையம் கடிவாளம் போடுமா?


PUBLISHED ON : டிச 02, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.சுப்புராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை வாரி வழங்கி, மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமரத் துடிப்பதில் தமிழக அரசியல்வாதிகளை மிஞ்ச, நாட்டில் எவரும் இல்லை.

'லேட்டஸ்ட்'டாக அக்கூட்டத்தில் தன்னை இணைத்து கொண்டிருப்பவர், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்.

கடந்த மாதம் பீஹாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, ராஷ்டீரிய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வாரி வழங்கிய டுபாக்கூர் வாக்குறுதிகளை கேட்டோம், ரசித்தோம், தேர்தல் முடிவையும் பார்த்தோம்!

இப்போது தமிழகம்!

வரும் சட்டசபை தேர்தலில் வென்று, கோட்டைக்குள் நுழைய, நடிகர் விஜய் வாரி வழங்கியுள்ள வாக்குறுதிகள் அனைத்தும், பீஹாரில் தேஜஸ்வி கொடுத்த டுபாக்கூர் வாக்குறுதிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல.

இதில், 'விஜய் சும்மா எதையும் சொல்ல மாட்டான்; ஒன்று சொன்னால் அதை செய்யாமல் விடமாட்டான்' என்ற விஜயின், 'பில்டப்' வேறு.

இப்படித்தான் கடந்த தேர்தலில், 'சொல்வதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம்' என்று உதார் விட்டு தி.மு.க., ஆட்சியை பிடித்தது.

ஆனால், கள்ளச்சாராய உயிர் பலிகளும், போதைப்பொருட்கள் விற்பனையும், செயின் பறிப்புகளும், பாலியல் பலாத்காரங்களும், திருட்டுகளும், ஆள்கடத்தல், மணல் மற்றும் கனிம வள கொள்ளைகளும், மோசடிகளும் தான் தமிழக மக்கள் கண்ட பலன்!

கடந்த 1967 சட்டசபை தேர்தலின்போது, அரிசி பஞ்சத்தை முன் வைத்து, 'ரூபாய்க்கு மூன்று படி; இல்லையேல் முச்சந்தியில் சவுக்கடி' என்று, 'பில்டப்' கொடுத்து தேர்தலை சந்தித்தது, தி.மு.க.,

ஆட்சியில் அமர்ந்த பின், 'மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்' என்று பல்டி அடித்தது.

அந்த ஒரு படியையும் சென்னை மற்றும் கோவையில் ஒன்றிரண்டு மாதங்களுக்கு வினியோகித்து, அரிசி விற்பனையை ஏறக்கட்டியது.

தற்போது, த.வெ.க., தலைவர் விஜய், 14 வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார்.

அதில் ஒரு வாக்குறுதியில், அனைவருக்கும் நிரந்தரமான வீடும், அதில் ஒரு டூ -வீலரும் இருக்க வேண்டுமாம்.

வீடு இல்லாதோருக்கு வீடு என்றால் கூட அந்த வாக்குறுதியில் நியாயம் இருக்கிறது என்று நினைக்கலாம்!

ஆனால், அனைவருக்கும் வீடு என்பது எப்படி சாத்தியமாகும்?

ஏற்கனவே, தமிழகத்தில், 50 சதவீத மக்கள் சொந்த வீட்டில் தான் வசிக்கின்றனர். 40 சதவீத மக்கள் வாடகை வீடுகளிலும், 10 சதவீத மக்கள், புறம்போக்கு நிலங்களில் அத்துமீறி ஆக்கிரமித்து, அரசு மாற்று இடம் வழங்காதா என்று கனவோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அனைவருக்கும் வீடு என்றால், தற்போது சொந்த வீட்டில் வசிப்போர் அனைவரும், தாங்கள் வசிக்கும் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி விட்டு, விஜய் எப்போது வீடு கட்டி, அதில் ஒரு டூ - வீலரும் வைத்து தருவார் என்று காத்திருக்க வேண்டுமா?

விவசாய நிலங்களில் எல்லாம் வீடுகளை கட்டி விட்டால், சோற்றுக்கு என்ன செய்வதாக உத்தேசம்?

அரசியல் கட்சிகள் வாரி வழங்கும் போலி வாக்குறுதிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிவாளம் போட்டு கட்டுப்படுத்தாத வரை, வீடு, டூ வீலர், கார் போன்ற டுபாக்கூர் வாக்குறுதிகள் நீடித்து கொண்டுதான் இருக்கும்!

lll

ஒருங்கிணைப்பு இல்லையே! சு.செல்வராஜன், கோவையில ் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், விவசாயிகளின் மாநாட்டிற்கு பிரதமர் கோவை வந்தபோது, தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயிலாக, 'கோ -பேக் மோடி' ஆர்ப்பாட்டத்தை அரங்கேற்றியது, தி.மு.க.,

அதற்கு பதிலடியாக, செம்மொழி பூங்கா திறப்பு விழாவிற்கு கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, 'கோ -பேக் ஸ்டாலின்' ஆர்ப்பாட்டத்தை நடத்தி பழிதீர்த்துக் கொண்டனர், பா.ஜ.,வினர்.

அதேநேரம், ஆளுங்கட்சிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமல், அ.தி.மு.க., வெறுமனே கை கட்டி வேடிக்கை பார்த்தது.

சட்டசபைத் தேர்தலுக்காக பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளதை அக்கட்சி மறந்து விட்டதா?

கூட்டணி விஷயத்தில் பல சமாதானங்களைச் செய்து கொண்டுள்ளது, பா.ஜ.,

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்காக, பா.ஜ., தமிழக தலைவராக இருந்த அண்ணாமலையை அப்பதவியிலிருந்து நீக்கியது பா.ஜ.,வினர் கொடுத்த மிகப் பெரும் விலையாகவே கருதப்படும் நிலையில், இதுபோன்ற தி.மு.க.,விற்கு எதிரான போராட்டங்களில் யாருக்கு வந்த விருந்தோ என்று அ.தி.மு.க., வேடிக்கை பார்த்தால், இரண்டு கட்சிகளும் ஒருங்கிணைந்து தேர்தல் வேலைகளை எப்படி செய்ய முடியும்?

ஏற்கனவே, எஸ்.ஐ. ஆர்., திருத்தப் பணியில், அ.தி.மு.க., முகவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பழனிசாமியோ, ஒன் மேன் ஆர்மியாக ஸ்டாலின் கூறும் பொய் பிரசாரத்திற்கு பதில் கூறிக் கொண்டிருக்கிறாரே தவிர, தி.மு.க., அரசின் செயல்பாடுகளை கண்டித்தோ, எதிர்த்தோ பெரிதாக போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்வதில்லை.

பா.ஜ.,வுக்கு மிக முக்கியமான 2024- பார்லிமென்ட் தேர்தலின் போது, முஸ்லிம் ஓட்டுகளை நம்பி, பா.ஜ.,வை கழற்றிவிட்டு, விஷப் பரிசோதனை செய்து அடிபட்டது, அ.தி.மு.க.,!

இப்போது, அக்கட்சிக்கு முக்கியமான சட்டசபைத் தேர்தலிலும் பா.ஜ.,வுடன் இணைந்து தி.மு.க.,விற்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுக்காமல் தனி ஆவர்த் தனம் செய்தால், அ.தி.மு.க., வெற்றி பெறுவது எப்படி?

lll

மறந்து போவோம்! நா.குருராஜன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, கடந்த சட்டசபை தேர்தலில், 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தார்.

அவற்றில் ஒன்று, 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு அவர்களது அடிப்படை ஓய்வூதியத்தில், 10 சதவீதம் உயர்த்தி தருவதாக கூறிய வாக்குறுதி!

இதோ... தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டன. நாங்களும் இன்று விடியும், நாளை விடியும் என காத்திருந்தது தான் மிச்சம்.

தற்போது, தமிழகத்தில் பணியில் இருப்பவர்களை விட ஓய்வூதியர்களே அதிகம். காவல், ஆயத்தீர்வு, சட்டம், மருத்துவம், போக்குவரத்து, வருவாய் துறையை சேர்ந்த ஓய்வூதியர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம், எப்போது அறிவிப்பு வெளிவரும் என்று!

கொடுத்த வாக்குறுதியை மறந்து போனது போல் முதல்வர் நடித்தால், தி.மு.க.,விற்கு ஓட்டுப் போட ஓய்வூதியர்களும் மறந்து போவோம்என்பதை முதல்வர் நினைவி ல் கொள்ளவேண்டும்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us