PUBLISHED ON : அக் 13, 2025 12:00 AM

கே.எஸ்.தியாகராஜ்
பாண்டியன், காரைக்குடியில் இருந்து எழுதுகிறார்: கரூர் துயர
சம்பவத்திற்கு பின், அரசியலில் இருந்து ஒதுங்காமல், 'முன்பைக் காட்டிலும்
தீவிரமாக தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் செய்வேன்' என்று கூறியுள்ளார்,
த.வெ.க., தலைவர் நடிகர் விஜய்.
அதேநேரம், விஜய் தனியாக தி.மு.க.,வை எதிர்க்க முடியுமா?
கடந்த 75 ஆண்டுகளாக தமிழகத்தில் வேரூன்றி, மாநிலத்தை 27 ஆண்டுகள் ஆண்ட
கட்சி, தி.மு.க., அத்துடன், மத்தியில் பா.ஜ., - காங்., ஆட்சிகளில் வளமான
துறைகளை பெற்று, பலமாக சொத்து சேர்த்து வைத்துள்ளது.
இப்படி,
பணம், படை, அதிகாரம், மீடியா மற்றும் கூட்டணி ஆதரவு என அசுர பலத்துடன்
இருக்கும் கட்சியை, விஜய் தனியாக எதிர்க்க முடியுமா?
காமராஜர்,
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்களுக்கே இடைஞ்சல் கொடுத்து, அவதுாறு
பரப்பி, அவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தவர்கள்,
தி.மு.க.,வினர்.
அதனால்தான், அரசியலே வேண்டாம் என ஒதுங்கி
கொண்டார், ரஜினி. கமல்ஹாசனும் தம்மால் தி.மு.க.,வை எதிர்க்க முடியாது என்று
உணர்ந்து, அறிவாலயத்தில் ஐக்கியமாகி விட்டார்.
எனவே, இதை எல்லாம்
கருத்தில் வைத்து, விஜய் தன் அரசியல் நகர்வை முன்னெடுக்க வேண்டும்.
தி.மு.க.,வின் முதல் எதிரி பா.ஜ., இரண்டாவது எதிரி அ.தி.மு.க., மூன்றாவது
விஜய். எனவே, மூவரும் ஒன்று சேர்ந்து பொது எதிரியான தி.மு.க.,வை வீழ்த்த
வேண்டும். தனியாக இருந்தால், ஓட்டு பிரிந்து விஜயின் உழைப்பு, தொண்டர்கள்
தியாகம் எல்லாம் வீணாகிவிடும்.
ஆந்திராவில் எப்படி தெலுங்கு தேசம்
- பா.ஜ., கூட்டணியில் சேர்ந்து, நடிகர் பவன் கல்யாண் துணை முதல்வர் ஆனாரோ,
அதேபோல், தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் விஜய் இணைந்து,
துணை முதல்வர் ஆக வேண்டும். அப்போது தான் கட்சி வளரும்; தொண்டர்களுக்கு
பாதுகாப்பு கிடைக்கும். அவர் நினைத்தபடி மக்களுக்கு நல்லது செய்ய முடியும்!
விஜய் யோசிப்பாரா?
எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்கள்?
ரா.ராகவன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சாலைகள், தெருக்களின் பெயர் பலகைகளில் இருந்து ஜாதி பெயர்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது, தமிழக அரசு.
கடந்த 1980ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்திலேயே இது நடைமுறைக்கு வந்து விட்டது. ஆனாலும், இன்றும் ஜாதி பெயர்களை தாங்கி, தெருக்களும், சாலைகளும் இருக்கின்றன என்றால், அதற்கு காரணம், திராவிட ஆட்சியாளர்கள் தான்.
பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் இவர்களால், ஜாதிய உணர்வு வளர்க்கப்பட்டுள்ளதே தவிர, ஒழிக்கப்படவில்லை.
ஜாதி ஒழிப்புக்கு திராவிட கட்சி தலைவர்கள் பாடுபட்டிருந்தால், இத்தனை ஆண்டுகளில் ஜாதி ஒழிந்து போயிருக்குமே தவிர, இன்றும் ஆணவ கொலைகள் அரங்கேறாது.
திராவிட கட்சிகள் எப்போதுமே இரட்டை வேடதாரிகள் தான். எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் ஜாதி பெயர் நீக்கப்பட்ட போது , பிராமணர்களின் அடையாளத்தை தாங்கிய பெயர்களே நீக்கப்பட்டன.
டாக்டர் ரங்காசாரி சாலை என்ற பெயரில், டாக்டரும், சாரியும் நீக்கப்பட்டு, ரங்கா சாலை ஆனது. அதேபோல் விஜயராகவாச்சாரி சாலை விஜயராகவ சாலை ஆனது.
ஆனால், தியாகராய நகர், டாக்டர் நாயர் சாலையில், டாக்டரும் உண்டு; நாயரும் உண்டு. கோடம்பாக்கம் மேனன் சாலையில், மேனன் இன்னும் உண்டு.
இதைவிட, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை தாங்கிய சாலையில், ஜாதி பெயரை எடுத்தால், ஓட்டு வங்கி பாதித்து விடுமோ என்ற பயத்தில், எடுத்த மாதிரியும் இருக்க வேண்டும்; எடுக்காத மாதிரியும் காட்ட வேண்டும் என்று நினைத்து, 'தேவர்' என்பதை அடைப்பு குறிக்குள் போட்டுள்ளனர்.
காந்தி, சாஸ்திரி, நேரு, ரெட்டியார் எல்லாம் ஜாதி பெயர்கள் தான்... அதை எடுக்க திராவிட மாடல் அரசுக்கு துணிவு உண்டா?
'படிப்பது ராமாயணம்; இடிப்பது ராமர் கோவில்' என்பது போல், வேட்பாளர் தேர்வு செய்யும் போது, ஜாதி, மதம் பார்த்து தேர்வு செய்வது... தேர்தலில் வெற்றி பெற்ற பின், தாங்கள் கொள்கைவாதிகள் என்று காட்டிக் கொள்ள, தெருக்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்குவது... இதுதானே கழகம் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து நடந்து கொண் டிருப்பது...
உண்மையில், தமிழக முதல்வர் ஜாதியை ஒழிக்க நினைத்தால், பொதுத் தொகுதியில் பட்டியலின வேட்பாளரை நிறுத்த வேண்டும்; பட்டியலினத்தை சேர்ந்தவரை துணை முதல்வராக்க வேண்டும்.
இதை விடுத்து, வெறுமனே ஜாதி பெயரில், 'ர்' சேர்க்கிறேன்; தெருப்பெயரில் ஜாதியை துாக்குகிறேன் என்பதெல்லாம் ஏமாற்று வேலை!
உரியவர்களிடம் சேர்க்கப்படும் பணம்!
சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தி லிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, 'உங்கள் மூலதனம், உங்கள் அதிகாரம்' என்ற திட்டம், அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
நாடு முழுதும் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருக்கும், 1.84 லட்சம் கோடி ரூபாயை உரியவரிடம் ஒப்படைக்கும் திட்டம் தான் இது!
பல்வேறு வங்கிகளில் வைப்பு நிதி திட்டத்தில் சேமித்து வைத்திருக்கும் பணம், காப்பீடு திட்டத்தில் சேர்த்திருக்கும் பணம், பங்குகள், மியூச்சுவல் பண்டுகள் என பல்வேறு வகையில் போடப்பட்ட பணம், பல ஆண்டுகளாக உரிமை கோராமல் இருக்கிறது.
பணத்தை போட்டு வைத்திருப்போர் இன்று இல்லாமல் கூட இருக்கலாம். பணம் எதில் போடப்பட்டுள்ளது என்பது சம்பந்தப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமலும் இருக்கலாம்.
ஆனாலும், உழைத்து சேமித்த பணம் உரியவர்களுக்கு போய் சேர வேண்டும் அல்லது ரத்த சொந்தங்களுக்கு பயன்பட வேண்டும் என எண்ணுகிறது மத்திய அரசு.
காரணம், காப்பீட்டு துறையில் மட்டும், 14,000 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் உள்ளது. 19,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் கேட்பாரற்று கிடக்கின்றன.
இது மிகப்பெரிய தொகை. அடுத்த மூன்று மாதங்களுக்குள் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 450 கோடி ரூபாய் பொதுமக்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் தம் குடும்ப உறுப்பினர்கள் பணத்தை எங்கே சேமித்து வைத்துள்ளனர் என்பதை தேடத் தொடங்குவது சிறப்பு!