PUBLISHED ON : ஜூலை 11, 2024 12:00 AM

ஜூலை 11, 1947
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில், 1947ல் இதே நாளில் பிறந்தவர் மாடபூசி கிருஷ்ணசாமி கோவிந்தகுமார் எனும் மதன். இவர், சென்னை, திருவல்லிக்கேணி ஹிந்து பள்ளி, விவேகானந்தா கல்லுாரிகளில் படித்தார். ஆர்.கே. லட்சுமணனின் ஓவியங்களை பின்பற்றி, குறைந்த கோடுகளால் கார்ட்டூன் வரைவதில் வல்லவரான இவர், ஆனந்த விகடனில் கார்ட்டூனிஸ்டாக பணியாற்றினார்.
'ஆனந்த விகடன், ஜூனியர் விகடன்' இதழ்களின் துணை ஆசிரியராக உயர்ந்தார். அதில், 'ஹாய் மதன்' என்ற தலைப்பில், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அன்பே சிவம் படத்திற்கு வசனம் எழுதினார். தொலைக்காட்சிகளில், 'மதன்ஸ் திரைப்பார்வை, மதன் டாக்கீஸ், மதன் மூவி மேட்னி' என்ற பெயர்களில் திரைப்பட விமர்சனம் செய்தார்.
இவர் தொடராக எழுதி, நுாலாக்கம் பெற்ற, 'வந்தார்கள் வென்றார்கள், கி.மு., - கி.பி., ஹாய் மதன், மதன் ஜோக்ஸ், மதன் கார்ட்டூன்ஸ், மனிதனுக்குள் ஒரு மிருகம், மனிதனும் மர்மங்களும், நான் ஒரு ரசிகன்' ஆகியவை விற்பனையில் சாதித்தன. படைப்பாக்க ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வரும் இவரது 77வது பிறந்த தினம் இன்று!

