PUBLISHED ON : ஜூலை 28, 2024 12:00 AM

ஜூலை 28, 1934
சென்னையில், வரதராஜுலு - தனபாக்கியவதி தம்பதியின் மகனாக, 1934ல் இதே நாளில் பிறந்தவர் குமரேசன் எனும் வி.குமார். இவர், சென்னை செயின்ட் பால்ஸ் பள்ளி, லயோலா கல்லுாரிகளில் படித்தார். தொலைபேசி இலாகாவில் பணியாற்றிய படியே இசைக்குழுவை நிர்வகித்து வந்தார்.
மணிவேந்தன் என்ற புனை பெயரில், 'கண் திறக்குமா' என்ற இசை நாடகத்தை எழுதி, மியூசியம் தியேட்டரில் அரங்கேற்றினார். பாலசந்தரின், 'வினோத ஒப்பந்தம்' நாடகத்துக்கு இசையமைத்தார். பாலசந்தரின், நீர்க்குமிழி படத்தில் இசையமைப்பாள ரானார். இந்திய, மேற்கத்திய இசைக் கருவிகளை பயன்படுத்தி, இசையை வித்தியாசப்படுத்தினார்.
பாலசந்தர் படங்களுக்கு தொடர்ந்து இசைஅமைத்தார். 'காதோடுதான் நான் பாடுவேன், உன்னிடம் மயங்குகிறேன், வா வாத்யாரே ஊட்டாண்ட' உள்ளிட்ட பாடல்கள் பிரபலமாகின. 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர், 'கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். தன், 62வது வயதில், 1996, ஜனவரி 7ல் மறைந்தார்.
எம்.ஜி.ஆரால், 'மெல்லிசை மாமணி' என, பாராட்டப்பட்டவர் பிறந்த தினம் இன்று!