PUBLISHED ON : ஆக 25, 2024 12:00 AM

ஆகஸ்ட் 25, 1958
விழுப்புரத்தில் சங்கரசுப்பிரமணியம் -- சீதாலட்சுமி தம்பதியின்மகனாக, 1958ல் இதே நாளில் பிறந்தவர் உதயம் ராம் எனும் கணபதி வெங்கட்ராமன்.
சென்னை குருநானக் கல்லுாரியில் பி.எஸ்சி., கணிதம் மற்றும் இதழியல்பட்டய படிப்பை முடித்தார். 'உரத்த சிந்தனை' என்ற அமைப்பை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். அதை, எழுத்தாளர் சங்கமாகபதிவு செய்து 32 ஆண்டுகளாக அதன் பொதுச் செயலராக பணியாற்றி வருகிறார்.
'நம் உரத்த சிந்தனை' என்ற பத்திரிகையை துவக்கி, அதன் ஆசிரியராக பணியாற்றுகிறார். 'அரட்டை அரங்கம், துக்ளக் தர்பார், நாளும் நமதே, மாறுவோம் மாற்றுவோம்' உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக பணியாற்றினார்.
'உரத்த சிந்தனை' யு டியூபின் தலைமை செயல் அதிகாரியாக செயலாற்றுகிறார். எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
பாரதியின் சிந்தனைகளை இயக்குனர்கள் விசு, எஸ். பி. முத்துராமன், நடிகர் டெல்லி கணேஷுடன் சேர்ந்து, 'பாரதி உலா' என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதன் வாயிலாக இளம் பேச்சாளர்களை உருவாக்கி வருகிறார்.
பேச்சால் செயலாற்றும் உரத்த சிந்தனையாளரின்,66வது பிறந்த தினம் இன்று!

