PUBLISHED ON : மார் 01, 2025 12:00 AM

மார்ச் 1, 1910
மயிலாடுதுறையில், விஸ்வகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில், கிருஷ்ணசாமி --- மாணிக்கம்மாள் தம்பதிக்கு மகனாக, 1910ல் இதே நாளில் பிறந்தவர் தியாகராஜன்.
திருச்சியில் நகை வேலை செய்து கொண்டிருந்த இவரை, புதுக் கோட்டை ரயில் நிலைய மாஸ்டர் நடேசன், 'அரிச்சந்திரா' நாடகத்தில், லோகிதாசனாக நடிக்க வைத்தார். இவரின் குரலைக் கேட்ட கர்நாடக சங்கீத வித்வான் பொன்னு அய்யங்கார், கர்நாடக இசையை கற்பித்தார். தொடர்ந்து நான்கு மணி நேரம் கச்சேரி செய்து, 'பாகவதர்' பட்டம் பெற்றார் தியாகராஜன்.
பவளக்கொடி படத்தில் நடித்து, 22 பாடல்களை பாடி பிரபலமானார். நவீன சாரங்கதரா, சத்யசீலன் உள்ளிட்ட 15 படங்களில் நடித்தார். ஹரிதாஸ் திரைப்படம், மூன்றாண்டுகள் தொடர்ந்து ஓடியது. தன் நடிப்புக்காக கிடைத்த 1 லட்சம் ரூபாயை, விடுதலைப் போராட்ட நிதியாக வழங்கினார்.இவருக்காகவே, திருச்சி ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது.
லட்சுமிகாந்தன் என்ற பிரபல எழுத்தாளர் கொலை வழக்கில் கைதாகி விடுதலையான பின், மீண்டும் நடித்தார். ஈரல் நோயால், தன் 49வது வயதில், 1959, நவம்பர் 1ல் காலமானார்.
'முதல் சூப்பர் ஸ்டார்' பிறந்த தினம் இன்று!

