PUBLISHED ON : நவ 10, 2024 12:00 AM

நவம்பர் 10, 1965
கோவையில், அரசு பள்ளி ஆசிரியர்களான சுப்பிரமணியன் - கண்ணம்மாள் தம்பதியின் மகளாக, 1965ல் இதே நாளில் பிறந்தவர் தாமரை.
இவர், கோவையில் பல்வேறு பள்ளிகளிலும், அரசு பொறியியல் கல்லுாரியிலும் படித்தார். ஐந்தாம் வகுப்பு படித்தபோது, 'தையல்காரி கண்ணம்மா' என்ற சிறுகதை எழுதி பிரபலமானார். தொடர்ந்து, விகடன் மாணவர் நிருபராகி, தன் எழுத்தை செம்மையாக்கினார்.
கோவையில் தனியார் நிறுவனத்தில்,இன்ஜினியராக ஆறாண்டுகள் பணி செய்தார். 'ஏர் இந்தியா' நடத்திய சிறுகதை போட்டியில் வெற்றி பெற்று வெளிநாடு சென்றார்.
இனியவளே படத்தில், 'தென்றல் எந்தன் நடையை கேட்டது' பாடலை எழுதி, சினிமா பாடலாசிரியரானார். தொடர்ந்து, 'மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே பார்த்தாயா, வசீகரா என் நெஞ்சினிக்க, அழகிய அசுரா, ஒன்றா ரெண்டா, உயிரின் உயிரே, பார்த்த முதல் நாளே, கண்ணான கண்ணே' உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, பல விருதுகளை பெற்றுள்ளார்.
'மொழிக்கலப்பு, இரட்டை அர்த்தம் கலக்காத பாடல்களை மட்டுமே எழுதுவேன்' எனும்கொள்கையுடன் வாழும் கவிதாயினியின் 59வது பிறந்த தினம் இன்று!