PUBLISHED ON : ஜன 25, 2025 12:00 AM

ஜனவரி 25, 1983
மதுரையில், நாட்டாண்மை மல்லி குடும்பத்தில், ராயலு அய்யர் - காவேரி அம்மாள் தம்பதியின் மகனாக, 1905, ஆகஸ்ட் 14ல் பிறந்தவர் சுப்பராமன்.
இவர், கோல்கட்டாவில் ரவீந்திரநாத் தாகூர் நடத்திய, சாந்தி நிகேதனில் இரண்டாண்டுகள் படித்தார். நாட்டின் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். சிறையில், கோவை அவினாசிலிங்கம் செட்டியார், வேதாரண்யம் வேதரத்தினம் உள்ளிட்டோர் நண்பர்களாகினர்.
அனைவரும் காங்கிரசில் இணைந்து, சர்வோதயா திட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். தன், 100 ஏக்கர் நிலத்தை வினோபா பாவேவிடம் பூமிதானமாக வழங்கினார்.
'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் ஈடுபட்டு, கொடுஞ்சிறை தண்டனை பெற்றார். சுதந்திரத்துக்கு பின் மதுரை நகராட்சி தலைவர், எம்.எல்.ஏ., - எம்.பி., பதவிகளை வகித்தார். கிராமிய பல்கலை, காந்தி மியூசியம், காந்தி நிகேதன், உள்ளிட்டவற்றை துவக்கி, சமூக தொண்டு செய்தார்.
மதுரை மகப்பேறு மருத்துவமனை துவக்க, தன் நிலத்தை தானமாக தந்தார். தன் மாளிகையை, காமராஜர் பல்கலைக்கு வழங்கிய இவர், தன், 77வது வயதில், 1983ல் இதே நாளில் மறைந்தார்.
'மதுரை காந்தி'யின் நினைவு தினம் இன்று!

