PUBLISHED ON : பிப் 18, 2025 12:00 AM

பிப்ரவரி 18, 1860
சென்னை, அயோத்தி குப்பத்தில், 1860ம் ஆண்டு இதே நாளில், ஒரு மீனவர் குடும்பத்தில் பிறந்தவர்சிங்காரவேலர்.
இவர், சென்னை மாநில கல்லுாரி, சட்ட கல்லுாரிகளில் படித்தார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது, ஜெர்மன் மொழிகளை கற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். காந்தியின் தலைமையில், 1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்து, வழக்கறிஞர் தொழிலை துறந்தார்.
சென்னையில் இருந்த பின்னி ஆலை, கர்னாடிக் ஆலைகளில் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு காண, தொழிற்சங்கம் துவங்கிய தமிழறிஞர் திரு.வி.க.,வின் நண்பரான இவர், தொழிற்சங்கத்துக்கான சட்ட உதவிகளை செய்தார்.
'லேபர் கிசான் பார்ட்டி ஆப் ஹிந்துஸ்தான்' என்ற கட்சியை துவக்கினார். 'லேபர் கிசான் கெஜட்' ஆங்கில பத்திரிகை, 'தொழிலாளன்' தமிழ் பத்திரிகை ஆகியவற்றையும் நடத்தினார். ஈ.வெ.ரா., வெளிநாடு சென்றபோது, 'குடியரசு' இதழின் ஆசிரியராக பணியாற்றினார். சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தபோது, மதிய உணவு திட்டம் அமலாக காரணமான இவர், தன் 86வது வயதில், 1946, பிப்ரவரி 11ல் மறைந்தார்.
சென்னை கலெக்டர் அலுவலகம் பெயரில் வாழும் தலைவர் பிறந்த தினம் இன்று!