PUBLISHED ON : ஜூலை 21, 2025 12:00 AM

ஜூலை 21, 1984
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் உள்ள, தழுவிய மகாதேவர் கோவிலில், ராமலிங்க அய்யர் -- பகவதி தம்பதிக்கு மகனாக, 1908, அக்டோபர் 2ல் பிறந்தவர், டி.வி.ராமசுப்பையர்.
இவர், சிறு வயதிலேயே, வேங்கடபதி அய்யர் - ஆவுடையம்மாள் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். பிராமண சிறுவர்கள் குடுமி வைப்பது கட்டாயம் என்ற வழக்கம் இருந்த காலத்தில், முடி வெட்டிக்கொண்டும், தாழ்த்தப்பட்டோரின் கல்வி, முன்னேற்றத்துக்காகவும் குரல் கொடுப்பவராக வளர்ந்தார்.
காந்தி ஜெயந்தியன்று பிறந்த இவரும், காந்திய கொள்கைகளில் பிடிவாதமாக வளர்ந்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த குமரியில், தமிழர்கள் அதிகம் வாழ்ந்ததால், மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்துடன் இணைப்பதற்காக, 'தினமலர்' நாளிதழை, திருவனந்தபுரத்தில் துவக்கி, வெற்றி பெற்றார்.
'தினமலர்' அலுவலகத்தை நெல்லைக்கு மாற்றி, தென் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை, 50க்கும் மேற்பட்ட கிராமப்புற பள்ளிகளுக்காக தொடர்ந்து செய்தி வெளியிட்டார். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, வினா - விடை பகுதியை, 'தினமலர்' நாளிதழில் துவங்கினார். நாட்டுப்பற்றும், துணிச்சலும் நிறைந்த பத்திரிகையாளரான இவர், தன், 76வது வயதில், 1984ல், இதே நாளில் மறைந்தார்.
மத்திய அரசு தபால் தலை வெளியிட்டு, கவுரவிக்கப்பட்ட, டி.வி.ஆர்., நினைவு தினம் இன்று!