PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM

செப்டம்பர் 4, 1825
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், பார்சி இனத்தைச் சேர்ந்த நவ்ரோஜி பலஞ்சி டோர்ஜி - மேனக் பாய் தம்பதியின் மகனாக, 1825ல் இதே நாளில் பிறந்தவர், தாதாபாய் நவ்ரோஜி.
சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாயிடம் வளர்ந்தார். எல்பின்ஸ்டன் கல்லுாரியில் கணிதம் படித்து, உதவி பேராசிரியராக பணியாற்றினார். மும்பையில், ஞான பிரசார சபை, அறிவியல் மற்றும் இலக்கிய சங்கம், பார்சி உடற்பயிற்சி பள்ளி, விதவையர் சங்கம் உள்ளிட்டவற்றை உருவாக்கினார்.
லண்டன் பல்கலையில், குஜராத்தி மொழி பேராசிரியராக பணியாற்றினார். இந்தியர்களின் பிரச்னைகளை பிரிட்டிஷ் அரசுக்கு விளக்க, கிழக்கிந்திய சங்கம் துவக்கினார். நாடு திரும்பி, சுரேந்திரநாத் பானர்ஜியுடன் சேர்ந்து, இந்திய தேசிய சங்கத்தை துவக்கினார். அதை, ஆலன் ஆக்டேவியன் ஹியூம், உமேஷ் சந்திர பானர்ஜியுடன் சேர்ந்து, இந்திய தேசிய காங்கிரசாக மாற்றி, அதன் தலைவராக மூன்று முறை செயல்பட்டார்.
மும்பை எம்.எல்.ஏ., பிரிட்டன் எம்.பி.,யாக இருந்த இவர், தன், 92வது வயதில், 1917, ஜூன் 30ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!