PUBLISHED ON : செப் 27, 2025 12:00 AM

செப்டம்பர் 27, 1953
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஆலப்பாடு கிராமத்தில், சுகுனாநந்தன் - தமயந்தி தம்பதியின் மகளாக, 1953ல் இதே நாளில் பிறந்தவர் அமிர்தானந்தமயி.
இவரது தாய் நோய்வாய்பட்டதால், தன் தம்பிகளை கவனிக்கவும், வீட்டு வேலையை செய்யவும், மூன்றாம் வகுப்புடன் படிப்பை கைவிட்டார். சிறுவயதிலேயே ஆன்மிக பாடல்கள் பாடுவது, ஆழ்நிலை தியானம் செய்வதில் ஈடுபட்டார். வசதியானவர்களிடம் நன்கொடை பெற்று, ஏழைகளுக்கு உதவினார்.
இவரிடம் உதவி பெற்றவர்கள், 'அம்மா' என அழைத்தனர். துன்பத்தில் உள்ளோரை, தாய் போல ஆரத்தழுவி ஆறுதல்படுத்தினார். கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு அரசுகளுடன் இணைந்து செயல்பட்டார்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களில் கல்வி நிறுவனங்கள், தொண்டு அமைப்புகளை உருவாக்கி, சேவை செய்து வருகிறார். சுனாமியின் போது இலங்கைக்கும், பூகம்பத்தின்போது பாகிஸ்தானுக்கும் நிவாரண உதவிகளை செய்தார்.
அகிம்சைக்கான ஐ.நா.,வின், 'காந்தி - கிங்' உள்ளிட்ட சர்வதேச விருதுகளை பெற்று, ஆன்மிக, சமூக பணிகளை தொடர்கிறார்.
இவரது, 72வது பிறந்த தினம் இன்று.

