PUBLISHED ON : அக் 22, 2025 12:00 AM

அக்டோபர் 22:
திருநெல்வேலி மாவட்டம், பெருங்குளம் கிராமத்தில், அனந்தராமையர் - - மீனாட்சி தம்பதிக்கு மகனாக, 1872, ஆகஸ்ட் 16ல் பிறந்தவர் மாதவையர்.
திருநெல்வேலியில் பள்ளி படிப்பையும், சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் பட்டப் படிப்பையும் முடித்து, கிறிஸ்துவ கல்லுாரியிலேயே ஆசிரியரானார். பின், உப்பு சுங்க இலாகா தேர்வெழுதி, ஆந்திராவின் கஞ்சம் மாவட்டத்தில், உப்பு ஆய்வாளராக பணிபுரிந்தார்.
தன் நண்பர் சி.வி.சுவாமிநாத அய்யர் நடத்திய, 'விவேக சிந்தாமணி' இதழில், 'சாவித்திரியின் கதை' என்ற தொடர் எழுதி பிரபலமானார். பின், 'பத்மாவதி சரித்திரம்' என்ற இரண்டு பகுதி நாவலை எழுதினார்.
'பஞ்சாமிர்தம்' என்ற இதழை துவங்கி, அதில், 'பத்மாவதி சரித்திரம்' நாவலின் மூன்றாம் பகுதியை எழுதினார். சென்னை பல்கலையின் செனட் உறுப்பினரான இவர், பி.ஏ., தமிழ் பாடத்தை கட்டாயமாக்கினார். 1925ல், இதே நாளில் நடந்த பல்கலை செனட் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தவர், மயங்கி விழுந்து, தன், 53வது வயதில் காலமானார்.
இவரது நினைவு தினம் இன்று!