PUBLISHED ON : நவ 15, 2025 12:00 AM

நவம்பர் 15: கேரள மாநிலம், பாலக்காட்டில், தமிழ் பிராமணரான வழக்கறிஞர் ராமா அய்யர் - நாராயணி தம்பதியின் மகனாக, 1915ல் இதே நாளில் பிறந்தவர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.
தலச்சேரி உயர்நிலை பள்ளி, கோயிலாண்டி மேல்நிலை பள்ளி, பாலக்காடு விக்டோரியா கல்லுாரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, சென்னை சட்டக் கல்லுாரிகளில் படித்தார். தன் தந்தையிடம் சட்ட பயிற்சி பெற்றார். கம்யூனிஸ்ட்களுக்கு சட்ட உதவி செய்ததற்காக, பிரிட்டிஷ் அரசினரால் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
குத்துபரம்பா சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு, சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்வானார். அடுத்து, கேரள மாநிலம், தலசேரி தொகுதி எம்.எல்.ஏ.,வாகி, முதல்வர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அமைச்சரவையில் உள்துறை, சட்டம், சிறை, மின்சாரம், நீர்ப்பாசனம், சமூகநல துறைகளை கவனித்தார்.
தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது, இரு மாநிலங்களுக்கான பரம்பிக்குளம் நீர்ப்பாசன திட்டம் நிறைவேற பாடுபட்டார். கேரள உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதி, இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் பதவிகளை வகித்தார். 100க்கும் மேற்பட்ட நுால்களை எழுதிய இவர், தன், 99வது வயதில், 2014, டிசம்பர் 4ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!

