PUBLISHED ON : ஜன 11, 2026 03:38 AM

ஜனவரி 11:
மத்திய பிரதேச மாநிலம், விதிஷா நகரத்தில், காவல் துறையில் பணி யாற்றிய ராம்பிரசாத் சர்மா - சிரோஞ்சிபாய் தம்பதியின் மகனாக, 1954ல், இதே நாளில் பிறந்தவர் கைலாஷ் சத்தியார்த்தி.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், உள்ளூர் அரசு மேல்நிலை பள்ளி, போபால் சாம்ராட் அசோகா தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்து, மின் பொறியாளராக பணியாற்றினார். உரிமைகள் மறுக்கப்பட்ட குழந்தைகளின் மீது பரிவு கொண்ட இவர், தன் பணியை விடுத்து, 'பச்பன் பச்சாவ் அந்தோலன்' எனும் பெயரிலான, 'குழந்தை பருவத்தை காப்போம்' என்ற தொண்டு நிறுவனத்தை துவக்கி, 80,000க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்களை மீட்டார்.
குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான சர்வதேச அணிவகுப்பில் பங்கேற்றதுடன், பன்னாட்டு குழந்தை தொழிலாளர் கல்விக்கான அமைப்பிலும் பணியாற்றினார். 'யுனெஸ்கோ'வின் உயர்நிலை குழு உறுப்பினரான இவர், குழந்தைகள் உரிமை சார்ந்த ஆய்வு கட்டுரைகளை, சர்வதேச இதழ்களில் எழுதினார்.
குழந்தை தொழிலாளர் இல்லாத தயாரிப்புகளுக்கு, 'ரக் மார்க்' சான்றிதழை அறிமுகம் செய்தார். இவருக்கு, 2014ல் அமைதிக்கான, 'நோபல் பரிசு' வழங்கப்பட்டது.
இவரது, 73வது பிறந்த தினம் இன்று!

