PUBLISHED ON : ஜன 13, 2026 04:12 AM

ஜனவரி 13:
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், பெத்தாபுரத்தில், நுாக்கையா - சத்யவதி தம்பதியின் மகளாக, 1927, ஆகஸ்ட் 24ல் பிறந்தவர், அஞ்சனியம்மா என்ற அஞ்சலிதேவி.
சிறு வயதிலேயே தெலுங்கு நாட்டிய நாடகங்களில் நடித்த இவர், ராஜா ஹரிச்சந்திரா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், சி.புல்லய்யா இயக்கிய, கொல்லபாமா என்ற தெலுங்கு படத்தில் நாயகியாகவும் அறிமுகமானார். புல்லய்யா சூட்டிய, அஞ்சலிதேவி என்ற பெயரே நிலைத்தது.
தொடர்ந்து, தமிழ் படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, என்.டி.ராம ராவ், நாகேஸ்வர ராவ் உள்ளிட்டோருடன், 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
இவர் நடித்த, கணவனே கண் கண்ட தெய்வம், காலம் மாறிப்போச்சு, முதல் தேதி, சக்கரவர்த்தி திருமகள், மன்னாதி மன்னன் உள்ளிட்ட படங்கள் பெருவெற்றி பெற்றன.
தன் கணவரும், இயக்குநருமான ஆதிநாராயண ராவுடன் இணைந்து படத் தயாரிப்பிலும் வெற்றி பெற்ற இவர், தன், 86வது வயதில், 2014ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

