PUBLISHED ON : ஜன 26, 2026 01:49 AM

ஜனவரி 26, 2015
கர்நாடகா மாநிலம், மைசூரில், ஆசிரியராக இருந்த, தமிழகத்தை சேர்ந்த, ராசிபுரம் கிருஷ்ணசாமியின் மகனாக, 1921, அக்டோபர் 24ல் பிறந்தவர், ஆர்.கே.லட்சுமண். இவர், சிறு வயதிலேயே, காண்பதை வரையும் திறமையுடன் வளர்ந்தார். அதை கண்ட வகுப்பாசிரியர், இவரை பாராட்டி, 'கார்ட்டூன்' எனும் கேலி சித்திரங்கள் வரையும் படி ஊக்கப்படுத்தினார். படிப்பை முடித்த பின், சென்னை, ஜெமினி ஸ்டுடியோவில் சிறிது காலம் பணி புரிந்த இவர், பின், 'குறவஞ்சி' எனும் கன்னட இதழில் கார்ட்டூன்கள் வரைந்தார். மும்பையில் இருந்து வெளியான, 'பிளிட்ஸ்' இதழில், கார்ட்டூனிஸ்டாக பணி புரிந்தார்.
தொடர்ந்து, 'பிரீ பிரஸ் ஜர்னல், பாரத் ஜோதி, பீப்பிள் சப்ளிமென்ட், டைம்ஸ் ஆப் இந்தியா' இதழ்களில் பணியாற்றினார். இவரின், 'காமன்மேன்' எனும் சாதாரண ஆள் பேசுவது போன்ற அரசியல் நையாண்டி படங்கள், சமகால அரசியலை விமர்சித்தன. இவரின் சகோதரரும், பிரபல எழுத்தாளருமான, ஆர்.கே.நாராயணனின், 'மால்குடி டேய்ஸ்' எனும் தொலைக்காட்சி தொடருக்காக, இவர் வரைந்த ஓவியங்கள் புகழ் பெற்றவை.
'பத்ம பூஷன், பத்ம விபூஷன், ரமோன் மகசேசே' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன், 93வது வயதில், 2015ல், இதே நாளில் மறைந்தார்.
இவரின் நினைவு தினம் இன்று!

