PUBLISHED ON : ஏப் 03, 2026 03:28 AM

ஏப்ரல் 3:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், அமிர்தலிங்கம் செட்டியார் -- பார்வதி தம்பதியின் மகனாக, 1907ல் இதே நாளில் பிறந்தவர் அ.சிதம்பரநாதன் செட்டியார்.
கும்பகோணம், 'நேட்டிவ்' உயர்நிலைப் பள்ளியிலும், அரசு கல்லுாரியிலும் படித்தார். பி.ஏ., தேர்வில், மாநிலத்தின் முதல் மாணவராக தேர்வாகி, தங்கப் பதக்கம் வென்றார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், எம்.ஏ., முடித்து, 'தமிழ் செய்யுள் வரலாறு' எனும் தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார். சென்னை புதுக் கல்லுாரி, பாலக்காடு அரசு கலைக் கல்லுாரியில் விரிவுரையாளர்; அண்ணாமலை பல்கலையில் தமிழ் துறை தலைவர் மற்றும் இடைக்கால துணை வேந்தர்; மதுரை தியாகராசர் கல்லுாரியில் முதல்வர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.
தமிழக சட்டசபை மேலவை உறுப்பினர், சென்னை பல்கலையில், 'ஆங்கிலம் -- தமிழ் சொற்களஞ்சியம்' பதிப்பாசிரியர் பொறுப்புகளையும் வகித்தார்.
'தமிழோசை, இளங்கோவின் இன்கவி, தமிழ் காட்டும் உலகு' உள்ளிட்ட நுால்களை எழுதிய இவர், தன் 60வது வயதில், 1967, நவம்பர் 22ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!

