PUBLISHED ON : ஏப் 13, 2026 12:35 AM

ஏப்ரல் 13, 1930
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு கிராமத்தில், அருணாச்சலம் - விசாலாட்சி தம்பதியின் மகனாக, 1930ல், இதே நாளில் பிறந்தவர் கல்யாணசுந்தரம்.
குடும்ப சூழலால், பள்ளிப்படிப்பை கூட முடிக்காத இவர், விவசாயம், மாடு மேய்த்தல், உப்பளத்தொழில், முறுக்கு வியாபாரம், நாடக நடிப்பு என, பல வேலைகளை செய்தார். சிறு வயதிலேயே கவிதை எழுதும் திறனுடைய இவர், சக்தி நாடக சபாவில் எழுதி, நடித்த போது, நடிகர் சிவாஜியுடன் பழகினார்.
கவிஞர் பாரதிதாசனின் உதவியாளராகி, கவிதை நுணுக்கங்களை கற்றார். கம்யூனிஷ சிந்தனையாளராகி, பாட்டாளிகளின் நிலையை, 'ஜனசக்தி' இதழில் கவிதைகளாக எழுதினார். படித்த பெண் திரைப்படத்தின் வாயிலாக பாடலாசிரியரானார். காதல், புராண பாடல்கள் கோலோச்சிய அந்த காலத்தில், உழைப்பின் மேன்மை, சமூக சீர்திருத்தம் மற்றும் மக்களின் போராட்டங்களை, பாமரருக்கும் புரியும் வகையில் எளிய பாடல்களாக எழுதினார்.
இவரின், 'துாங்காதே தம்பி துாங்காதே, செய்யும் தொழிலே தெய்வம், சின்னப்பயலே சின்னப்பயலே' உள்ளிட்ட பாடல்கள், மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றன. இவர் தன், 29வது வயதில், 1959, அக்டோபர் 8ம் தேதி மறைந்தார்.
'மக்கள் கவிஞர்' பிறந்த தினம் இன்று!

