PUBLISHED ON : செப் 01, 2026 12:00 AM

செப்டம்பர் 1: சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டை யூரில், முத்தையா என்பவரது மகனாக, 1935ல் இதே நாளில் பிறந்தவர், அய்யாக்கண்ணு எனும் அய்க்கண்.
காரைக்குடி அழகப்பா பல் கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்ற இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எட்., பட்டமும் பெற்றார். திருப்பத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லுாரியில் பேராசிரியராகவும், தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இவர், 1956ல் எழுதிய, 'வள்ளியின் திருமணம்' என்ற கதை, 'ஆனந்த விகடன்' இதழில் வெளியாகி, பிரபலமானது. தொடர்ந்து, சிறுகதை, நாவல், நாடகம், சிறுவர் நாவல், கட்டுரை என, 100க்கும் மேற்பட்ட நுால்களை எழுதினார்.
இவர் எழுதிய, 'இரண்டாவது ஆகஸ்ட் 15, அதியமான் காதலி, கரிகாலன் கனவு, நெய்தலில் பூத்த குறிஞ்சி, சிவகங்கை சீமை, மேன்மக்கள்' உள்ளிட்ட நுால்கள் பிரபலமானவை. இவருடைய கதைகள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை பல்கலைக்கழகங்களிலும் பாடங்களாக வைக்கப் பட்டுள்ளன.
தமிழக அரசின் கலைமாமணி, அண்ணா விருதுகளை பெற்ற இவர், தன் 85வது வயதில், 2020, ஏப்ரல் 11ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
