PUBLISHED ON : செப் 27, 2011 12:00 AM

புரட்டாசி டெக்னிக்...!
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தின் கடைசி கூட்டம், ஆகஸ்ட் மாதம் நடந்தது.
இதில் பேசிய தலைவர் பாலகிருஷ்ணன் (காங்.,), 'செப்டம்பர் முதல் வாரத்தில், விருந்து வைத்து, கவுன்சிலர்கள், 'குரூப் போட்டோ' எடுத்துக்கொள்ளலாம்' என்றார். ஆனால், சில நாட்களுக்கு முன், எளிய விருந்து நடந்தது; கொரிக்க இனிப்பு, காரம் மட்டுமே வழங்கப்பட்டது. தலைவர், 'கேமராமேனை வரச் சொல்லுங்க' என்றார். கவுன்சிலர் ஒருவர், 'மற்ற ஒன்றியங்களில் பிரியாணி விருந்து நடந்தது. இங்கேயும் அப்படி நடந்திருந்தால், கோழிக்காலை கடித்தபடி, போட்டோ எடுத்திருக்கலாம்' என்றார் கிண்டலாக. தலைவரோ, 'புரட்டாசி மாதம் வந்ததால் அசைவத்தை தவிர்க்க வேண்டியாதயிற்று' என சமாளித்தார். போட்டோ கிராபரோ, 'புரட்டாசி டெக்னிக்கை பயன்படுத்தி, தலைவர் தன் பாக்கெட் காலியாகாம பாத்துக்கிட்டாரே... பிழைச்சுக்குவாருப்பா...' என, 'கமென்ட்' அடித்துவிட்டு, சென்றார்.
'முதலில் யாரை சுடுவது?'
சென்னை தி.நகரில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. நெல்லை பாலு, நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். வெகு நேரமாகியும் விருதுகள் வழங்கப்பட வில்லை. மாணவர்களும் தலையில் கையை வைத்து, 'எப்போது முடிப்பார்' என யோசித்து கொண்டிருந்தனர். பேசி முடிக்கும் முன், 'இறுதியாக' என்றவர், 'மேடையில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்திலிருந்த ஒரு மாணவன் துப்பாக்கியை எடுத்து, அவரை குறி பார்த்து அவர் அருகில் சென்றான். அவரோ பயந்து நடுங்கினார். பேச்சாளர் காதோரமாக சென்று, 'உன்னை சுட மாட்டேன்; இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவனை தான் சுடப்போகிறேன். நீ பேசு...' என்றானாம்... அது போல...' எனக் கூறி முடித்தவுடன், அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. குறும்புக்கார மாணவர் ஒருவர் சிரித்து கொண்டே, 'முதலில் உன்ன சுடணும்' என, 'கமென்ட்' அடிக்க, மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மத்தியிலும் சிரிப்பலை கிளம்பியது.

