PUBLISHED ON : ஏப் 23, 2024 12:00 AM

துாத்துக்குடி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்காக, அம்மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திருச்செந்துார் நகராட்சி அலுவலகம் முன் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், 'தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு திருச்செந்துாரில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கருணாநிதி சிலையும் 13 அடியில் அமைய போகிறது. முக்காணியில் அழகுமுத்து கோன் சிலை 13 அடியில் கம்பீரமாக அமைய போகிறது.
'வ.உ.சி., சிலை சரியான இடத்தில், 13 அடியில் அமையும். காமராஜர் சிலையை உடன்குடியில் கம்பீரமாக அமைத்து வருகிறோம். நல்லுாரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அமைக்க போகிறோம். இமானுவேல் சேகரன் சிலையும் இங்கே அமைக்கப்படும்' என்றார்.
இதை கேட்ட சமூக ஆர்வலர் ஒருவர், 'இவங்க வைக்கும் சிலைகளை பார்த்தால் பசி பறந்து போயிடுமா... மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி பேசலாமே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

