PUBLISHED ON : ஜூலை 20, 2024 12:00 AM

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அவர் வருவதற்கு முன், விழா ஏற்பாட்டை கவனிக்கும் அதிகாரிகள் குழு, திட்டம் குறித்த குறும்படத்தை எவ்வாறு ஒளிபரப்புவது; நலத்திட்ட உதவி களை பெறும் போது பயனாளிகள் எப்படி நிற்க வேண்டும்; எவ்வழியாக செல்ல வேண்டும் என, பல்வேறு ஒத்திகைகளை மேற்கொண்டனர்.
முதல்வர் வந்து நிகழ்ச்சி ஆரம்பித்ததும், திட்டம் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. அதில், 'ஒலி' பிரச்னை ஏற்பட்டதால், குறும்படத்தை பாதியில் நிறுத்தி, மைக்கில் பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளர், 'இதுபோல் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது' எனக் கூறி சமாளித்தார்.
இதை வேடிக்கை பார்த்த அதிகாரி ஒருவர், 'நாடக கம்பெனி மாதிரி ஒத்திகை பார்த்தும் ஒண்ணும் வேலைக்கு ஆகாம போச்சே...' என, முணுமுணுக்க, அருகில் இருந்த மற்றொரு அதிகாரி கமுக்கமாக சிரித்தார்.
