PUBLISHED ON : ஜூன் 01, 2024 12:00 AM

தமிழகத்தில் போதை பொருள் விற்பனை, அது தொடர்பான சட்டம் -- ஒழுங்கு பிரச்னையால், எதிர்க்கட்சிகள் தி.மு.க., அரசை வறுத்தெடுக்கின்றன. இதனால் மற்ற வழக்குகளுக்கு வாய் திறக்காத போலீசார், கஞ்சா வழக்குகளில் பத்திரிகைகளுக்கு தாமாக முன்வந்து செய்தி தருகின்றனர்.
இந்த வகையில், மதுரை நகரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு காலி இடத்தை குறிப்பிட்டு, அங்கு கஞ்சா புகைப்பதாக, 'மொட்டை' கடிதம் வந்தது. அப்போது அதை துாக்கி ஓரம் வைத்த போலீசார், தற்போது கஞ்சா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு, குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அங்கு வீடு கட்டி ஒருவர் வசிப்பது தெரியவரவே, அவரிடம் கடிதத்தை காண்பித்த போலீசார், 'தற்போது கஞ்சா எதுவும் இங்கு இல்லை' என, உரிமையாளரிடம் எழுதி வாங்கினர். இதையறிந்த அப்பகுதி குடியிருப்போர், 'இது தானா சார் உங்க டக்கு...?' என, கருணாஸ் பட காமெடி வசனத்தை கூறி, போலீசாரை கலாய்த்து வருகின்றனர்.

